அமெரிக்காவை ரஷ்யர்கள் வெறுப்பது ஏன்?

அமெரிக்கா மீதான வெறுப்பு வளர்வதை ஊக்குவிக்கிறது ரஷ்ய அரசு
ஆகஸ்ட் மாதத்தின் வெதுவெதுப்பான மாலை நேரத்தில், மாஸ்கோவின் ‘பெவெர்லி ஹில்ஸ் டைனர்’ உணவகத்தில், மூன்று இளம் ரஷ்யர்களுடன் அமர்ந்திருந்தேன். ‘போர்க்கி தி பிக்’ மற்றும் மர்லின் மன்றோவின் ஆளுயர உருவங்கள் போன்ற அற்புதமான அலங்காரப் பொருட்கள் நிறைந்த உணவகம் அது.
“அமெரிக்கா எங்களை வளைக்கப் பார்க்கிறது” என்றார் 29 வயதான கிறிஸ்டினா டோனெட்ஸ், டெஸ்ஸெர்ட் வேஃபில் துண்டு ஒன்றில் வாழைப்பழ கலவையைப் பரப்பியபடி. “பல பிரச்சினைகளைத் தாண்டி நாங்கள் எழுந்து நிற்கிறோம். உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) அது பிடிக்கவில்லை” என்றார் அப்பெண்.
பத்தாண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்குப் பிறகு, ரஷ்யாவில் செய்தி சேகரிப்பது என்பது பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது போல் இருந்தது. ஆனால், அந்த ‘பழைய நண்பர்’ நிறையவே மாறியிருந்தார்.
சில வகைகளில், நல்ல விதமான மாற்றங்கள்! சமீபத்தில் ரூபிளில் ஏற்பட்டிருந்த சரிவு மற்றும் பண வீக்கம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், ரஷ்யர்கள் வளம் மிக்கவர்களாகியிருக்கிறார்கள். நிறைய பயணம்செய்கிறார்கள். 1997-ல் முதன்முதலாக நான் மாஸ்கோ சென்றபோது என்னை உபசரித்த அன்பான அந்த ரஷ்யப் பெண், ‘இனிமேல், பிளாஸ்டிக் பைகளைக் கழுவ வேண்டியிருக்காது’ என்று இம்முறை சொன்னார். நான் கடைசியாக அவரைப் பார்த்ததற்குப் பிறகு, அவரது சம்பளம் 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. முதன்முதலாக வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றுவந்தார் துனீசியாவுக்கு!
வெறுப்புப் பட்டியல்
அதேசமயம், இருண்ட பக்கங்களும் உண்டு. ரஷ்ய சமுதாயம் முன்பை விட தற்காப்பு கொண்டதாகவும், அதீத சுய பிரக்ஞை கொண்டதாகவும் மாறியிருக்கிறது. அரசியல் தொடர்புள்ள ரஷ்ய செல்வந்தர்களில் பலர் லண்டனில் ஒரு வீடும், இரண்டாவது பாஸ்போர்ட்டும் வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது என் ரஷ்ய நண்பர்கள் பலர் வெளியேறும் வழியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ரஷ்யாவில் பல வெறுப்பு இலக்குகள் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உக்ரைன்கார்கள், தன்பாலின உறவாளர்கள், ஐரோப்பாவின் பால் பொருட்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா!
“தனது ஜனநாயகத்தை எங்கள் முகத்தில் அப்புகிறது” என்று கோபமாகச் சொன்னார் நிஸ்னி நோவ்கோரட் நகரைச் சேர்ந்த கோஸ்த்யா எனும் டாக்ஸி ஓட்டுநர். தன்பாலின திருமணத்துக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால் அதிருப்தியடைந்த ரஷ்யர்களில் ஒருவர் அவர். “எதற்கெடுத்தாலும் ‘சரி!’ ‘சரி!’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறீர்கள். சில சமயங்களில் ‘இல்லை’ என்றும் சொல்ல வேண்டும்” என்று சொன்ன நிஸ்னி, அமெரிக்காவை எதிர்க்கும் நிலைப்பாட்டை இறுதியாக ரஷ்யா எடுத்திருக்கிறது என்று விளக்கினார்.
பழைய பகை
இதுபோன்ற கருத்தாக்கங்களுக்குப் பின்னால் ஏகப்பட்ட வரலாறு இருக்கிறது என்பது உண்மைதான். 19-ம் நூற்றாண்டில் ரஷ்யாவின் சரியான பாதை எது என்பதில் ஸ்லாவோபைல்களும் வெஸ்டர்னைஸர்களும் மோதிக்கொண்டனர். சோவியத் ஒன்றியம் இருந்த காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான பகை இருந்ததில் வியப்பில்லை. அப்போதிலிருந்து, அமெரிக்காவின் உலக நடவடிக்கைகளின் அடிப்படையில் அதன் மீது பல எதிர்மறைக் கருத்துகள் நிலவுகின்றன. 1999-ல் செர்பியா மீது நேட்டோ படைகள் குண்டு வீசிய சம்பவம், இராக்கில் அமெரிக்கப் படைகள் ஊடுருவிய சம்பவம் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, அமெரிக்காவைப் பற்றிய ரஷ்யர்களின் தற்போதைய கருத்து, 24 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதற்குப் பிறகு மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மாஸ்கோவின் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ தெரிவிக்கிறது.
அமெரிக்காவுக்கு எதிரான மனப்பான்மை தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. ஏனெனில், பல வகைகளில் ரஷ்ய அரசே இதை ஆதரிக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றிய சுதந்திரமான குரல்கள் எல்லாம் ரஷ்யத் தொலைக்காட்சி சேனல்களில் காணாமல் போய்விட்டன. ரூபிளில் ஏற்பட்டிருக்கும் சரிவு, பொதுப் போக்குவரத்தில் முதியோருக்கான மானியம் ரத்து என்று உள்நாட்டுப் பிரச்சினை எதுவானாலும், அதற்கு அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. எங்கு அரசியல் ஸ்திரத்தின்மை ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் சித்தரிக்கப்படுகிறது.
மாபெரும் மாற்றம்!
“நாம் எல்லோரும் எப்படி வாழ்கிறோம் என்று அவளிடம் எடுத்துச் சொல். ஐரோப்பாவை விட சிறப்பாக நாம் வாழ்வதையும், க்ரீமியா இப்போது எத்தனை அற்புதமாக இருக்கிறது என்றும் அவளுக்குச் சொல்” என்று நான் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் ஒரு பெண் முணுமுணுத்தார். கடந்த ஆண்டு ரஷ்யாவால் இணைக்கப்பட்ட க்ரீமியா தீபகற்பத்தைக் குறிப்பிடுகிறார் அப்பெண். ரஷ்யாவில் நான் எதிர்கொண்ட மற்றொரு மாபெரும் மாற்றம் அது.
க்ரீமியா தொடர்பான புதினின் நடவடிக்கைகளால் ரஷ்யாவுக்குள்ளேயே பல குடும்பங்கள் பிரிந்துவிட்டன. பல உறவுகள் முறிந்துவிட்டன. சோவியத் ஒன்றியம் சிதறுண்ட நிகழ்வுக்குப் பின்னர், மேற்குலக நாடுகளு டனான உறவில் பெரும் விரிசல் விழுந்ததற்கும் க்ரீமியா விவகாரம் ஒரு காரணமாகிவிட்டது.
ரஷ்யாவின் மிகப் பெரிய திட்டம் என்ன? அப்படி எதுவும் இல்லை என்று முற்போக்கான ரஷ்யர்களில் பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அடுத்தடுத்த பிரச்சினைகளால் புதினும் அவரது நெருங்கிய வட்டாரத்தினரும் சோர்வடைந்திருக்கிறார்கள். இறக்குமதி உணவுகளுக்கு ரஷ்யா விதித்த தடையால் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் க்ரீமியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்திருக்கிறது. புதிய சமூகப் பொறுப்புகளால் ரஷ்யா சோர்வடைந்திருக்கிறது.
உள்ளூர் விமர்சனக் குரல்கள்
அரசு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்றும் தேசிய வாத முழக்கங்கள் ஒரு கெட்ட சகுனத்தைக் காட்டுகின்றன என்றும் சிலர் கருதுகிறார்கள். புதினின் ஆதரவாளர்களைச் செழிப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணெயின் விலை சரிந்திருக்கிறது.
“ரஷ்ய நிலம் தகித்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார் முன்னாள் பத்திரிகையாளரும், அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவருபவருமான எனது நண்பர் ஒருவர். “ரோமானிய நகரமான போம்பேயி எரிமலைச் சீற்றத்தில் அழிவதற்கு முன்னர், அனைத்து வளங்களும் வறண்டுவிட்டதைப் போன்ற நிலைமை இது” என்றார் அவர்.
அமெரிக்காவைப் பற்றிய மோசமான மதிப்பீடு நிரந்தரமான ஒன்றல்ல என்று சொன்னார் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ கருத்துக் கணிப்பு மையத்தின் இயக்குநர் லெவ் குட்கோவ். ரஷ்யர்களின் தற்போதைய கோபம் கூட அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிரானது அல்ல என்றும், தங்கள் மீதே தங்களுக்கு இருக்கும் கோபம் என்றே தோன்றுகிறது.
இதெல்லாம் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்று ஒரு முக்கியக் கேள்வி எழுகிறது. ரஷ்யாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று நினைப்பதாகச் சொல்கிறார் அலெக்சாண்டர் யெரெமெயேவ். “ரஷ்யாவில் தொழில் செய்வது நல்ல விஷயம் என்கிறார்கள் என் நண்பர்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள்!”

எங்கே இன்னொரு பூமி?

பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது
மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார்.
மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால், அப்படியான வேற்றுலகவாசிகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் உண்டு. நாம் கற்பனைப் பயணமாக அண்டவெளிக்குச் சென்றால், இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
ஆபத்தான அண்டவெளி
நீங்களும் நானும் ஒரு விண்கலத்தில் ஏறி, பூமியிலிருந்து ஏதோ ஒரு திசையில் கிளம்புகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். பூமி நமது பார்வையிலிருந்து மறைகிறது. ஏறத்தாழ 8,000 கோடி கி.மீ. தொலைவுக்குச் சென்ற பிறகு, திரும்பிப் பார்க்கிறோம். சுற்றிலும் ஒரே கும்மிருட்டு. எவ்வளவு மாதங்கள் ஆனாலும் அதே கும்மிருட்டுதான். விண்கலத்துக்கு வெளியே கடும் குளிர். அத்துடன் ஆபத்தான கதிர்கள். அதுதான் அண்டவெளி.
அங்கிருந்து பார்த்தால் சூரியன் தெரியவில்லை. மிகத் தொலைவு வந்துவிட்ட காரணத்தால் சூரியன் ஒரு சிறிய நட்சத்திரமாகத்தான் தெரியும் போலும். குறிப்பிட்ட திசையில் பார்க்கிறோம். நம்மிடம் உள்ள கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால் அந்த நட்சத்திரம் சூரியனாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூரியனைச் சுற்றுகிற பூமி உட்பட ஒன்பது கிரகங்களில் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை.
நாம் பூமியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதைச் சற்றே மறந்துவிட்டு சுற்றிலும் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை நோட்டமிடுகிறோம். நட்சத்திரமாகக் காட்சி அளிக்கிற சூரியன் இருக்கிற திசையில் கையை நீட்டி அதோ அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகிற ஒரு கிரகத்தில், அதாவது பூமியில் உயிரினங்கள் உள்ளன என்று அங்கிருந்தபடி உறுதியாகச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.
இதிலிருந்து சில விஷயங்கள் புலனாகின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதை உணர்கிறோம். மிகத் தொலைவுக்குச் சென்றுவிட்டால், பூமி இருக்கிற இடத்தையே கண்டுபிடிக்க முடியாது என்பதுபோலவே பூமியில் இருந்து பார்த்தால் எங்கோ இருக்கிற வேறு பூமிகளை எளிதில் கண்டறிய இயலாது என்பதையும் புரிந்து கொள்கிறோம். சூரியனுக்கு ஒரு பூமி இருப்பதைப் போலவே வேறு பல நட்சத்திரங்களுக்கும் பூமி மாதிரி கிரகங்கள் இருக்கலாம் என்பது புரிகிறது. அவ்விதம் எங்கோ இருக்கிற பூமிகளிலும் உயிரினங்கள் இருக்கலாம்.
இயற்கைக்குப் பாரபட்சம் இல்லை
இயற்கையானது அண்டவெளியில் ஒரு மூலையில் இருக்கிற பூமியை மட்டும் விசேஷமாகத் தேர்ந்தெடுத்து, மனிதன் உட்பட உயிரினங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத முடியாது. இயற்கைக்கு அவ்விதமான பாரபட்சம் இருக்க முடியாது.
பூமியை எடுத்துக்கொண்டால், உயிரினங்கள் நிலப் பகுதியில் இருக்கின்றன, தரைக்கு அடியில் இருக்கின்றன, தரைக்கு மேலும் இருக்கின்றன. கடல்களிலும் இருக்கின்றன, சுட்டெரிக்கும் பாலைவனங்களிலும் உள்ளன. பனிக்கட்டியால் மூடப்பட்டு கடும் குளிர் வீசுகின்ற அண்டார்ட்டிகாவின் பாதாள ஏரிகளிலும் இருக்கின்றன. கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்களில் தொடங்கி ராட்சத திமிங்கிலங்கள் வரையிலான இந்தப் பல்வகையான உயிரினங்களை யாரும் ஒரே நாளில் உண்டாக்கிவிடவில்லை. கடந்த பல நூறு கோடி ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி மூலம் இவை உண்டாகின.
பூமியில் உள்ள சூழ்நிலைகள் வேறு எங்கேனும் உள்ள ஒரு கிரகத்தில் இருக்குமானால், அங்கும் இதே போன்று பலவகையான உயிரினங்கள் இருக்க முடியும். ஆனால், அவற்றை நம்மால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்பதால், பூமி தவிர வேறு எங்கும் உயிரின வகைகள் கிடையாது என்று அடித்துக் கூறுவது அறிவுடைமை ஆகாது.
நாம் இதுவரை வெளியே போய் எங்கும் பார்க்கவில்லை. அதனால் நமக்குத் தெரியவில்லை. நாம் பூமியின் கைதிகளாக வாழ்ந்துவந்துள்ளோம். விண்வெளி யுகம் பிறந்ததற்குப் பிறகுதான் நமக்குக் கால் முளைத்தது. மனிதன் சந்திரனுக்குப் போய்விட்டு வந்திருக்கிறான். ஆனாலும், நாம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வெளியே சென்றதாகக் கூற முடியாது. ஏனெனில், சந்திரனும் பூமியின் பிடிக்குள் தான் இருக்கிறது. ஆகவேதான் அது பூமியைச் சுற்றி வருகிறது. வருகிற நாட்களில் செவ்வாய்க்குச் செல்கிறவர்கள்தான் பூமியிலிருந்து விடுபட்டுச் செல்கிற முதல் நபர்களாக இருப்பர்.
நாஸாவிலிருந்து புளூட்டோவுக்கு…
பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு மனிதன் சென்றது கிடையாது என்றாலும் மனிதன் அனுப்பிய பல ஆளில்லா விண்கலங்கள் சென்று ஆராய்ந்துள்ளன. புளூட்டோ ஒன்றுதான் பாக்கியாக இருந்தது. நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ் என்னும் ஆளில்லா விண்கலம் ஒன்பது ஆண்டுப் பயணத்துக்குப் பிறகு, இப்போது புளுட்டோவை ஆராய்ந்து தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ உள்ள தூரம் சுமார் 500 கோடி கி.மீ. கிட்டத்தட்ட சூரிய மண்டலத்தின் எல்லை.
சூரிய மண்டலத்துக்கும் அப்பால் மிக விஸ்தாரமான அண்டவெளி உள்ளது. அந்த அண்டவெளியில் சூரியன் மாதிரி கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கும் கிரகங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் நாம் காணும் நட்சத்திரங்களிலிருந்து ஒளி மட்டுமல்லாமல், பல வகையான கதிர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரேடியோ அலைகளும் அவற்றில் அடங்கும். இயற்கையாகத் தோன்றும் அந்த ரேடியோ அலைகள் காலம் காலமாகப் பூமிக்கு வந்துகொண்டிருக் கின்றன. அவற்றை நம் கண்களால் காண முடியாது.
இயற்கையாகத் தோன்றும் ரேடியோ அலைகளைப் போலவே செயற்கையாக ரேடியோ அலைகளை உண்டாக்க மனிதன் கற்றுக்கொண்டுள்ளான். ஒலியை அவ்வித ரேடியோ அலைகளாக மாற்றவும் மறுபடி அந்த அலைகளை ஒலியாக மாற்றவும் மனிதன் கற்றுக்கொண்டபோது வானொலிப்பெட்டி தோன்றியது.
நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ரேடியோ அலை களைப் பெற்று ஆராய்வதற்காக பெரிய பெரிய ஆன்டெனாக்களைக் கொண்ட ரேடியோ டெலஸ் கோப்புகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு நட்சத்திரத்தின் அருகே இருக்கின்ற கிரகத்தில் வாழக்கூடிய புத்திசாலி மனிதர்கள் ரேடியோ அலைகள் வடிவில் செய்திகளை அனுப்பினால் அவற்றையும் அந்த டெலஸ்கோப்புகள் மூலம் பெற முடியும்.
நட்சத்திரங்களிலிருந்து வருகிற ரேடியோ அலைக ளுக்கும் வேற்றுக்கிரகப் புத்திசாலி மனிதர்கள் அனுப்பும் ரேடியோ அலைகளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஆகவேதான், அண்டவெளியிலிருந்து வித்தியா சமான சிக்னல்கள் வருகின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்

இந்தத் தேர்தலால் மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் குறைந்து, ஜனநாயகம் மலருமா?
ரங்கூன் நகரெங்கும் தோரணங்களாய் ஆடுகின்றன சிவப்புக் கொடிகள். அவற்றில் போராடும் பொன்னிற மயிலொன்றின் சித்திரமும் இருக்கிறது. எதிர்க் கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் கொடிகள் அவை. கூடவே, கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியின் படங்களும் காற்றில் அசைகின்றன. ராணுவத்தின் ஆசியுடன் இயங்கும் ஆளுங்கட்சியின் பச்சை நிறக் கொடிகளும் இடையிடையே ஆடத்தான் செய்கின்றன. மியான்மர் என்று ராணுவத் தளபதிகளால் பெயர் மாற்றப்பட்ட பர்மா வரும் நவம்பர் 8 அன்று தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. இப்படியொரு பிரச்சாரம் மியான்மரில் நடக்கும் என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது ராணுவத்தின் இரும்புப் பிடியில் இருந்தது மியான்மர்.
இப்போது சூழலை நிறைத்துக் கேள்விகள்: இந்தத் தேர்தல் முறையாக நடக்குமா? ராணுவத்தின் ஆதிக்கம் குறையுமா? ஜனநாயகம் மலருமா? ஆங் சான் சூச்சியால் அதிபராக முடியுமா?
அரசியலும் ராணுவமும்
பர்மாவின் அரசியல் வரலாறு மிகுதியும் ராணுவத்தின் கரங்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது. 1948-ல் நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆங் சான். சூச்சியின் தந்தை. ஆங் சான், பர்மிய விடுதலைப் படை என்கிற ராணுவ அமைப்பைக் கலைத்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், நாடு விடுதலை அடையுமுன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அவரது சகாக்கள் ஆட்சியிலும் ராணுவத்திலும் தலைமை ஏற்றனர். 1958-ல் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இடைக்கால ஆட்சி நடத்திய ராணுவம், 1962-ல் தானே நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. இது 2011 வரை நீடித்தது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக 1988-ல் மாணவர்கள் போராடினார்கள். அப்போது ஆங் சான் சூச்சி நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயாரைப் பார்ப்பதற்காக ரங்கூன் வந்திருந்தார். ஆக்ஸ்போர்டில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆங்கிலேயக் கணவரையும் இரண்டு மகன்களையும் லண்டனில் விட்டுவிட்டு வந்திருந்தார் சூச்சி. போராட்டம் அவரையும் ஈர்த்தது. தேசிய ஜனநாயக லீக்கைத் (என்.எல்.டி) தொடங்கினார். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. 1989-ல் சூச்சியையும் வீட்டுக் காவலில் வைத்தது. அடுத்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில்தான் இருந்தார். 1990-ல் ராணுவம் தேர்தல் நடத்தியது. 492 இடங்களில் 392-ஐக் கைப்பற்றியது என்.எல்.டி. ஆனால், ராணுவம் பதவி விலக மறுத்துவிட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் நடந்த தேர்தலை என்.எல்.டி புறக்கணித்தது. ராணுவத்தின் ஆதரவுள்ள யு.எஸ்.டி.பி. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். தொடர்ந்து அவர் அமல்படுத்திய அரசியல்-பொருளாதாரச் சீர்திருத்தங்கள் யாரும் எதிர்பார்க்காதவை. பதவியேற்ற சில மாதங்களிலேயே சூச்சியை விடுவித்தார். 2012-ல் நடந்த இடைத் தேர்தலில் என்.எல்.டி. போட்டியிட்டது. 45 இடங்களில் 43-ல் வெற்றி பெற்றது. சூச்சி எதிர்க் கட்சித் தலைவரானார்.
இப்போது மீண்டும் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது. 1990, 2012 தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால், என்.எல்.டியின் பொன்னிற மயில் தன் சிறகை விரித்தாடப்போகிறது என்று தோன்றக்கூடும். மியான்மரின் அரசியலுக்கு இன்னும் சில பக்கங்கள் உண்டு.
பெரும்பான்மையும் சிறுபான்மையும்
2008-ல் அமலான அரசியல் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் 25% இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 75% இடங்களுக்குத்தான் தேர்தல் நடக்கிறது. மியான்மர் பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’எனப்படும் பெரும்பான்மை பர்மிய சமூகத்தினர் ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கின்றனர். 2012 இடைத்தேர்தல் மிகுதியும் இந்தப் பகுதிகளில்தான் நடந்தது. இங்கேயுள்ள 291 இடங்களில் என்.எல்.டிக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. மொத்தமுள்ள இடங்களில் இது 44% ஆகும்.
சிறுபான்மையினர் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கின்றனர். இங்கேயுள்ள 207 இடங்கள் (31%) முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். மியான்மரில் 135 சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இதில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின் ஆகியோர் பிரதானமானவர்கள். இவர்களில் பல ஆயுதக் குழுக்கள் பிரிவினை கோருகின்றன.
சூச்சி சிறுபான்மையினரின் வாக்குகளைச் சேகரிப்பதிலும் மும்முரமாக உள்ளார். ரக்கைன் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் சூச்சியின் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததாக எழுதுகிறார், அவருடன் பயணித்த ரெயிடர்ஸ் செய்தியாளர். இத்தனைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் ரோஹின்ஜா எனும் முஸ்லிம் பிரிவினர், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். இவர்கள் மியான்மரின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. இவர்கள் அகதிகளாகப் படகுகளில் தப்பி ஓடுவதும் அண்டை நாடுகள் ஏற்க மறுப்பதும் தொடர்ந்துவருகிறது. இந்தப் பிரச்சினையில் சூச்சி மவுனம் காத்துவருகிறார். எனினும், சிறுபான்மையினர் மத்தியிலும் சூச்சிக்குச் செல்வாக்கு இருப்பதாகவே மேற்கு ஊடகங்கள் கணிக்கின்றன. பல சிறுபான்மைக் கட்சிகளும் களத்தில் உள்ளன. இவர்கள் கணிசமான இடங்களைப் பெறலாம்; தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக்கொண்டு என்.எல்.டிக்கு வழிவிடவும் செய்யலாம்.
சில சிறுபான்மை இனத்தவருக்கு இணையான மக்கள்தொகை பர்மியத் தமிழர்களுக்கும் இருக்கிறது (சுமார் 2%). சிறிய விவசாயிகளாகவும் வர்த்தகர்களாகவும் நாட்டின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. எனில், இளைய தலைமுறையினர் மாறிவரும் அரசியல் சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொள்வதில் விருப்பம் உடையவர்களாக இருக்கின்றனர்.
அரசியல் சட்டத் தடைகள்
சூச்சிதான் என்.எல்.டியின் நட்சத்திரம். அவர் வெற்றி நோக்கி கட்சியை வழி நடத்தலாம். ஆனால், அவரால் அதிபராக முடியாது. சூச்சியின் இரண்டு பிள்ளைகளும் பிரிட்டிஷ் குடிமக்கள். புதிய அரசியல் சட்டத்தின் 59 எஃப் பிரிவின்படி, அதிபராக இருப்பவரின் பிள்ளைகள் அந்நிய நாடொன்றுக்கு விசுவாசமாக இருக்கக் கூடாது. இந்தப் பிரிவை விலக்குவதற்கு சூச்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இப்போது சூச்சியும் தனது வழிமுறையை மாற்றிக்கொண்டார். என்.எல்.டி வெற்றி பெற்றால் தன்னால் அதிபராக முடியாவிட்டாலும், ‘அரசாங்கத்தின் தலைவராக நான்தான் இருப்பேன்’ என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.
மேலும், அதிபர் தேர்வும் நேரடியானதல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும், ராணுவத்தின் நியமன உறுப்பினர்கள் ஒருவரையும் முன்மொழிய வேண்டும். இதில் வெற்றி பெற்றவர் அதிபராகவும், மற்ற இருவரும் துணை அதிபர்களாகவும் பதவியேற்க வேண்டும். இதைத் தவிர பாதுகாப்பு, உள்துறை, நிதி போன்ற துறைகளுக்கான அமைச்சர்களை ராணுவமே நியமிக்கும். பொதுத் தேர்தல் நவம்பரில் நடந்தாலும், அதிபர் தேர்தல் மார்ச் 2016-ல்தான் நடக்கும். அதற்குள் திரைக்கு முன்னும் பின்னும் பல காட்சிகள் அரங்கேறலாம்.
சிறிய அடிகள்
பர்மிய அரசியல் வரலாறு நெடுகிலும் ராணுவத்தின் செல்வாக்கும் ஆதிக்கமும் இருந்துவருகிறது. 2011-ல் பதவியேற்ற சிவில் அரசாங்கம் சில சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தல் அவற்றுள் ஒன்று. இதில் என்.எல்.டி. வெற்றி பெற்றாலும் ராணுவத்தின் உதவியின்றி ஆட்சி நடத்த முடியாது. எனினும், மியான்மரின் ஜனநாயகப் பாதையில் இது ஒரு முக்கியமான அடிவைப்பாக இருக்கும். போகும் வழி வெகு தூரமுண்டு!

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி?

ளைஞர்களின் கையில் இந்தியா என்கிற வாசகம் மறந்து, அனைவரின் கையில் ஸ்மார்ட்போன் என்கிற வாசகமே இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

புதிது புதிதாய் ஸ்மார்ட்போன்கள் அப்டேட் வெர்ஸன்களுடன் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்து விதமான ஃப்யூச்சர்களையும் பார்த்து ஸ்மார்ட்போன் வாங்குபவர்களைவிட, அதன் செயல்பாடுகளில் ஆர்வமாகி, வெளித் தோற்றம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து வாங்குபவர்களே அதிகம்.

இதை தெரிந்து வைத்துக் கொண்டு, ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களில் ஏமாற்று வேலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றிலும் கலப்படம், போலி என வந்து விட்ட நிலையில் தொழில் நுட்பச்சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களையும் கயவர்கள் களமிறக்கியிருக்கிறார்கள்.

போலி ஸ்மார்ட்போன்களை ஒரு சில ஃப்யூச்சர்களை வைத்து எளிதாக கண்டு பிடித்துவிட முடியும். அவை என்னென்ன என்பதை இனி இங்கே பார்க்கலாம்.

ஐ.எம்.இ.ஐ. கவனிக்க!

இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் (சாதாரண மொபைல் போன்களிலும் இந்த எண் இருக்கும்) பிரத்யேக அடையாள எண்ணாக கருதப்படும் ஐ. எம்.இ.ஐ. எண் (IMEI) கட்டாயம் இருக்கும். இந்த எண்ணானது ஸ்மாட்போனின் உள்புறம் மற்றும் ஸ்மார்ட்போன் பேக்கிங் பாக்ஸின் வெளிப்புறம் அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண் இல்லை என்றால் அவை நிச்சயமாக போலி ஸ்மார்ட்போன்களே. அதனால் இந்த ஐ.எம்.இ.ஐ நம்பர் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஒரு போதும் வாங்க வேண்டாம்.

பிரபலமான கடை; நம்பகத்தன்மையுள்ள வலைதளம்!

ஸ்மார்ட்போன்களை வாங்கவேண்டும் என ஆசைப்படுபவர், பிராண்டட் வகை ஸ்மார்ட்போன்களையே பரிசீலனை செய்யுங்கள். அதுவும் பிரபல ஸ்மார்ட்போன் கடைகள், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத் தன்மையுள்ள வர்த்தக வலைதளங்களில் மட்டுமே ஸ்மார்ட் போன்களை வாங்குங்கள்.  முன்பின் தெரியாத கடைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. காரணம், அங்கே போலி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படலாம்.

வடிவமைப்பும், டிஸ்ப்ளேயும்!

போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால் அதன் வடிவமைப்பு ஒழுங்காக இருக்காது. அதேபோல ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களின் திரைக்கும் (டிஸ்ப்ளே), போலி ஸ்மார்ட்போன்களின் திரைக்கும் அதிக வித்யாசங்கள் இருக்கும்.  போலி ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே தெளிவாக இருக்காது, தரம் குறைந்ததாக இருக்கும். இதை வைத்து போலி ஸ்மார்ட் போன்களை எளிதாக இனம் கண்டுகொள்ளலாம்.

இரைச்சலான ஒலி!

போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், சீன மொபைல்கள் போல பாடல் சத்தங்கள் மற்றும் ரிங்க்டோன் ஆகியவற்றை இரைச்சலுடன்  கொடுக்கும். இதனால் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது அதிலுள்ள ரிங்டோன்களை ஒலிக்க விட்டு பரிசோதித்து வாங்கவும்.

அதே போல ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பல செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கிப் பாருங்கள் போலி ஸ்மார்ட்போனாக இருந்தால் நிச்சயம் ஹேங் ஆகும். அப்போதே அந்த போனை வாங்காமல் தவிர்த்து விடலாம்.

கேமரா மற்றும் பேட்டரியை பார்க்க!

கேமராக்களின் தரத்தை வைத்தும் ஸ்மார்ட்போன்களின் விலை வித்தியாசப்படுகிறது. ஆனால், போலி ஸ்மார்ட்களில் அதிக மெகாபிக்ஸல் அளவுக்கு கேமராவின் தன்மை வழங்கப்பட்டிருந்தாலும் அது 2 மெகபிக்ஸல் அளவு தரத்திலேயே இருக்கும். இதையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது. மேலும், ஸ்மார்ட்போனின் மெமரி அளவை பார்த்தும் போலி ஸ்மார்ட் போன்களை கண்டுபிடித்துவிடலாம்.

ஸ்மார்ட்போனின் இதயமாக இருப்பது பேட்டரி தான். அதனால் ஸ்மார்ட்போன் வாங்கும் போது பேட்டரியின் தன்மையையும் கவனிப்பது அவசியம். போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், அதில் நிச்சயமாக சீன மொபைல்களின் பேட்டரிகளே பொருத்தப்பட்டிருக்கும்.

இனி கவனித்து ஸ்மார்ட்போன்களை வாங்குங்கள்!

ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா!

இந்தக் கோடைக்காலத்தில், பிரான்ஸின் கலாய்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஐரோப்பிய நிலத்தை பிரிட்டனுடன் இணைக்கும் சுரங்கப் பாதையின் முகப்பில் ஒரு சோக நாடகம் தன்னைத்தானே நிகழ்த்திக்காட்டியது. ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அந்தச் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் ரயில்கள் மற்றும் டிரக்குகளில் தொற்றிக்கொள்ள முயற்சிசெய்துகொண்டிருந்தனர். கம்பி வேலிகளை வெட்டியெடுத்த அவர்கள், போலீஸுக்குத் தப்பி உள்ளே ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். ஆனால், கணிசமானோர் பல முயற்சிகளுக்குப் பின்னர் அதில் வெற்றியடைந்தனர். இருநாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர்.
அமெரிக்கா ஐரோப்பா: ஓர் ஒப்பீடு
இந்தப் பிரச்சினை, கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் அமெரிக்க எல்லையில் இளம் அகதிகளின் அலை ஒன்று எல்லைக் காவல் படையின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்த சம்பவத்தை நினைவுபடுத்து கிறது. எனினும் குடியேற்றப் பிரச்சினையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருக்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகளை கலாய்ஸ் சம்பவம் முன்னிறுத்துகிறது. ஆப்பிரிக்காவி லிருந்து ஐரோப்பாவுக்குள் அகதிகளின் பிரவேசம் ஐரோப்பா கண்டத்துக்குள் பிரிவை ஏற்படுத்துவதுடன், அக்கண்டத்தை மாற்றியமைக்கவும் கூடியது. அமெரிக்கா சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளையெல்லாம்விட பெரிய பிரச்சினை இது.
முதல் வேறுபாடு இதுதான். ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவது மட்டுமே அகதிகளின் விருப்பம் அல்ல. அவர்களது முக்கியத் தேர்வு பிரிட்டன்தான். ஏனெனில், பிரிட்டன் பொருளாதாரரீதியாக வலிமையான நாடு. ஏனெனில், அகதிகள் ஆங்கிலம் பேசுபவர்கள். ஏனெனில், பிரிட்டனில் தேசிய அடையாள அட்டை கிடையாது. அல்லது வேறு சில காரணங்களும் இருக்கலாம்.
குடியேறி ஒருவர் மேலும் மேலும் உள்ளே செல்ல விரும்புவது இயல்பான ஒன்றுதான். (மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகள் எல்லோரும் எல் பஸோவிலோ அல்லது டஸ்கனிலோ நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லை.) ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உள் எல்லைக்குள் எளிதாகச் சென்றுவர அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இவ்விஷயம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. குடியேற்றக் கொள்கைகளைவிடவும் தங்கள் இறையாண்மையை முக்கியமாகக் கருதும் நாடுகளைக் கொண்டது ஐரோப்பா.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தப் பதற்றம் சற்றுக் குறைவுதான். அமெரிக்காவில் ‘அடைக்கலம் தரும் நகரங்கள்’ தொடர்பான விவாதங்களை அல்லது குடியேற்ற அமலாக்கம் தொடர்பாக மாகாண அரசுகளுக்கும் பெடரல் அரசுக்கும் இடையிலான மோதல்களைப் பாருங்கள். எனினும், குடியேற்றக் கொள்கை என்பது தேசிய அளவில் ஒரே மாதிரியானதுதான். குடியேறிகளின் அடையாள அட்டைகளைச் சோதனை செய்வதற்காக என்று மிச்சிகன் மாகாணம் தன்னுடைய எல்லைகளை மூடிவிடப்போவதில்லை. குடியேற்றப் பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயத்தில் மேய்ன் மாகாணம் உடைந்து விடப்போவதில்லை.
கூடுதல் பிரச்சினை
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா வேண்டாமா எனும் கருத்து வாக்கெடுப்புக்கு (‘பிரெக்ஸிட்’) வாய்ப்பிருக்கும் பிரிட்டனிடம் ஏற்கெனவே குடியேற்ற இறையாண்மை குறித்த ஆவல் இருக்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டை மீண்டும் அமல்படுத்தும் பரிசோதனையில் இறங்கியிருக்கும் டென்மார்க்குக்கும் இந்த விருப்பம் இருக்கிறது. பிரான்ஸில் தேசிய முன்னணிக் கட்சியின் எழுச்சிக்குப் பின்னால் இந்த நோக்கம் இருக்கிறது. ஐரோப்பாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிக்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டுடன் இப்பிரச்சினையும் கூடுதலாகச் சேர்ந்திருக்கிறது.
ஏழ்மையான தென் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏராளமான அகதிகள் குடியேறி வரும் நிலையில், புதிதாக வரும் அகதிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் இத்தாலி அல்லது ஸ்பெயினில் நிறுத்திவைக்கவே வட ஐரோப்பாவின் பணக்கார நாடுகள் விரும்புகின்றன.
அத்துடன் குடியேற்றப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருக்கும் மற்றொரு வேறுபாட்டைப் பார்க்கும் போது, இந்தப் பிரச்சினையின் அழுத்தம் ஐரோப்பாவைப் பொறுத்தவரை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, அடுத்த 50 ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்படப்போகும் குடியேற்றங்களின் அளவை எடுத்துக்கொள்ளலாம்.
அபரிமிதமாக அதிகரிக்கவிருக்கும் ஆப்பிரிக்க மக்கள்தொகையையும், ஐரோப்பாவின் மக்கள்தொகையில் ஏற்படப்போகும் சரிவையும் பொறுத்து இந்த அளவு அமையும். தென்அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நிகழ்ந்த குடியேற்றங்கள் அமெரிக்க அரசியலில் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 300 மில்லியனுக்கும் சற்றே அதிகமான மக்கள் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் 600 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். வரப்போகும் சில தலைமுறைகளில் இந்த விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.
ஆனால், இதைப் பாருங்கள்: இன்று சுமார் 738 மில்லியன் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள் (அவர்களில் 500 மில்லியன் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள்). ஆப்பிரிக்காவிலோ சுமார் 1.2 பில்லியன் பேர் இருக்கிறார்கள். ஐ.நா-வின் தற்போதைய மதிப்பீட்டின்படி 2050-ல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 707 மில்லியனாகக் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சமயத்தில், ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை 2.4 பில்லியனாக இருக்கும். 2100-ல் 4.4 பில்லியன் ஆப்பிரிக்கர்கள் இருப்பார்கள். அதாவது, உலக அளவில் ஒவ்வொரு ஐந்து பேரில் இருவர் ஆப்பிரிக்கர்களாக இருப்பார்கள். அந்தச் சமயத்தில் ஐரோப்பாவின் மக்கள்தொகை வெறும் 646 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் ஊடுருவல்
சமீபத்தில் ‘பொலிட்டிகோ’ இதழில் நோவா மில்மேன் குறிப்பிட்டிருப்பதைப் போல், இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள் வளம் பெற்றாலும் வீழ்ச்சியடைந் தாலும் ஐரோப்பாவை நோக்கிய ஆப்பிரிக்க மக்களின் படையெடுப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது. அம்மக்களின் பரிதவிப்பு அதைத் தூண்டிவிடலாம். ஆனால், ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் உலக மயமாக்கல் தொடர்பாக உருவான தவறான பார்வைக்கும் இதில் தொடர்புண்டு. (ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து துணிச்சலாக மத்தியத் தரைக்கடல் வழியாக வருபவர்களில் பலர் அகதிகள் மட்டும் அல்ல என்று தோன்றுகிறது. வளரும் நாடுகளைச் சேர்ந்த நன்கு படித்த, லட்சியம் கொண்ட குடிமக்களும் இவர்களில் அடக்கம்.)
1970-ல் இருந்து மெக்சிக்கர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததைப் போன்ற அதே விகிதத்தில் ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பாவில் குடிபெயர்வார்கள் எனில், 2050-ம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் கால் பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் என்று மில்மேன் குறிப்பிடுகிறார். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை. பிறப்பு விகிதம் தொடர்பான கணிப்புகள் மாறலாம். குடியேற்றத்தின் வழிமுறைகள் மாற்றமடையலாம். குடியேறிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவரலாம்.
எனினும், குறிப்பிடத்தக்க ஏதோ ஒரு விஷயம் நடக்கப்போகிறது. ஏதோ ஒரு வகையில் ‘யூராப்ரிக்கன்’ எதிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. கலாய்ஸில் சில ஆயிரம் அகதிகள் குவிந்த விஷயத்தில் ஐரோப்பாவின் குழப்பமான எதிர்வினையை வைத்துப் பார்க்கும்போது, இவ்விஷயத்தை எதிர்கொள்ள அந்த கண்டம் முற்றிலும் தயார் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒற்றைக் கால் மைனாவும் கரை ஒதுங்கிய குழந்தையும்

கரை ஒதுங்கிய பொம்மையைப் போலக் கிடந்த சிரியா குழந்தை அய்லானின் புகைப்படத்தைப் பார்த்தபோது ஒற்றைக் கால் மைனாவின் நினைவு வந்தது.

தெருவொன்றின் திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த மைனா. அது தத்தியபோது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதற்கு ஒரே ஒரு கால்தான்! கடந்துசெல்லும்போது இது கண்ணில் பட்டாலும் மனதில் ஓரிரு நொடிகளுக்குப் பிறகுதான் உறைத்தது. அதிர்ந்துபோய், சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தால், அந்த மைனா பறந்துபோய்விட்டது. அது நின்ற கோலமும், தத்திய கோலமும் நான்கைந்து நொடிகளுக்கு மேல் பார்வையில் விழுந்திருக்காது எனினும், அசைவுச் சித்திரம்போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒரு படச்சுருளைக் கையிலெடுத்துப் பார்ப்பதுபோல் ஒற்றைக்கால் மைனாவின் அந்த நான்கைந்து நொடிகளையும் மனம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
வாலில்லாத நாய், காலில்லாத நாய் போன்றவற்றை யெல்லாம் பார்த்ததுண்டு. ஆனால், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் பறவையொன்று ஒற்றைக் காலுடன் இருப்பதைப் பார்த்தது அதுவே முதல்முறை.
இயற்கையின் மீது தன்னுடைய சோகம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்றிச்சொல்லும் அணி ஒன்று யாப்பிலக்கணத்தில் இருக்கிறது. அதுபோன்று, அந்த மைனாவுக்கு இருப்பதாக ஒரு சோகத்தைக் கற்பனை செய்துகொண்ட மனம், அந்த சோகத்தை மைனா மீது ஏற்றிப்பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தது. உண்மையில் மைனாவுக்குச் சோகம் இருக்குமா இருக்காதா என்று தெரியாவிட்டாலும், அப்படியே மைனா சோகமாக இருந்தால் அதை அறிந்துகொள்ள வழியேதும் இல்லாவிட்டாலும் மைனாவின் நிலையை நினைத்து வருத்தம் மேலிட்டது.
அதற்குப் பிறகு சென்னையில் ஏராளமான ஒற்றைக் கால் காகங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன. ஒற்றைச் சிறகை மட்டுமே அடித்துக்கொண்டு பறக்கும் காகம் ஒன்றும் கண்ணில் பட்டது. தத்தித் தத்தியே இரையைப் பொறுக்கிக்கொண்டிருந்தது அந்தக் காகம். தெருவின் இந்த முனையிலிருந்து அந்த முனை வரை மனிதர்கள் நடந்து போவதைப் போலவே நடந்துசென்றது. பறக்கவே பறக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில், ஒற்றைச் சிறகை மட்டும் தள்ளாட்டத்துடன் அடித்துக்கொண்டு சிறு பறத்தலில் ஒரு மரத்தின்மீது போய் அமர்ந்தது.
அலகின் முனை உடைந்துபோயிருந்த காகமும் கண்ணில் பட்டிருக்கிறது. இரையைப் பொறுக்குவதற்கு அலகுதான் அத்தியாவசியம். ஆனால், அலகு உடைந்து போயிருந்ததால் இரை பொறுக்குவதில் சக காகங்களுடன் போட்டிபோட முடியாமல் மெதுவாக இங்கும் அங்குமாக இரையைப் பொறுக்கிக்கொண்டிருந்தது. அதேபோல், மின்கம்பிகளுக்கு நடுவே உறைந்துபோயிருந்த காகமொன்று நான்கைந்து நாட்கள் அப்படியே இருந்தது. அது இறந்துபோன தருணத்தை யாரோ புகைப்படம் எடுத்து அந்த இடத்தில் மாட்டியதுபோல் இருந்தது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? இப்படியெல்லாம் ஆவதற்கு அந்தப் பறவைகளைச் சற்றும் பொறுப்பாக்கிவிட முடியாது. அப்படியென்றால் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? மனிதர்களன்றி வேறென்ன காரணம்?
கண்ணிவெடி, அணுகுண்டு, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம், உலகப் போர்கள், இன அழிப்புகள் போன்ற காரணங்களெல்லாம் வேண்டாம். ஒரு மைனா தன் காலை இழப்பதற்கு, ஒரு காகம் தன் அலகை இழப்பதற்கு மனிதர்களின் சிறு முட்டாள்தனமே போதுமானது. உலகத்தைப் பொறுத்தவரை ஒரு மைனாவின் காலும், காகத்தின் அலகும் மிகவும் சிறிய விஷயம். ஆனால், உலகத்தின் மாபெரும் அழிவுகளுக்கு அடிப்படையாகச் சிறுசிறு தவறுகளின், சிறுசிறு அலட்சியங்களின் ஒட்டுமொத்த சேர்க்கை இருந்திருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
ஒற்றைக்கால் மைனாவுக்கும் கரை ஒதுங்கிய சிறுவனுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? யார் மீதும் எதன் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததுபோல் இயல்பாகத் திரிந்துகொண்டிருக்கிறது ஒற்றைக் கால் மைனா. அதற்கு நம் மொழி தெரிந்திருந்தால்கூட யாரையும் குற்றம்சாட்டியிருக்காது. கரையொதுங்கிய குழந்தை அய்லானும் யாரைக் குற்றம்சாட்டிவிடப்போகிறான்? இதுதான் நம்மை மேலும் மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. இந்த உலகின் கசடுகள் சற்றும் படிந்திடாத ஒரு வெள்ளை மனது இப்படிக் கரையொதுங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது நாம் எல்லோரும் எந்த இடத்துக்கு வந்திருக்கிறோம் என்றே அதிர்ச்சி ஏற்படுகிறது.
இந்த உலகத்தின் கரையில், இந்த வாழ்க்கையின் கரையில் ஒரு குழந்தை ஒதுங்கிக்கிடக்கிறது. இன்னும் கரையொதுங்காமல் மீன்களுக்கு இரையாகிக் கடலிலே கரைந்த குழந்தைகளும், புகைப்படத்துக்கும் சமூக ஊடகங்களின் பரிமாற்றத்துக்கும் இலக்காக ஆகாமல் போன, போய்க்கொண்டிருக்கும் குழந்தைகளும்தான் ஏராளம். அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் சேர்த்துதான் கரையொதுங்கிக் கிடக்கிறான் அய்லான். மாபெரும் அபாயத்தின் செய்தியைச் சுமந்துவந்து, உரிய இடத்தில் சேர்ப்பித்துவிட்டு உயிர்துறந்த தூதுவனைப் போல் இறந்துகிடக்கிறான் அய்லான்.
ஆனாலும், இந்த உலகின் ஆட்சியாளர்களின், போர் உற்பத்தியாளர்களின், ஆயுத உற்பத்தியாளர்களின், மத அடிப்படைவாதிகளின் இரும்பு இதயங்களை ஊடுருவும் வல்லமை அய்லானுக்கு மட்டுமல்ல; வேறு எந்தக் குழந்தைக்கும் இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் நம்மை முற்றிலும் நம்பிக்கை இழக்கச் செய்கிறது. ஏனெனில், ஆழமாக யோசித்துப் பார்த்தால், அய்லான்களின் உயிரைக் கச்சாப்பொருளாகக் கொண்டு இயங்குவதுதான் நம் வாழ்க்கை என்பது நமக்குப் புரியும். நவீன வாழ்க்கை நமக்கு அளித்திருக்கும் அத்தனை சொகுசுகளின் உச்சியிலும் ஏ.சி. அறைகள் இருக்கின்றன என்றால், அவற்றின் அடியில், கரையொதுங்கிய அய்லான் களின் கல்லறைகள்தான் இருக்கின்றன. அவை கல்லறை களாகக்கூட இருப்பதில்லை. சிறு மணல்மேடுகளாக இருப்பதுதான் உண்மை. ஒரு தொடுதலில் உலகெங்கும் அய்லானின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு இந்த உலகம் அதிநவீனமாக ஆனதற்கு, லட்சக்கணக்கான அய்லான்கள் கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது என்ற உண்மை நமக்கு எப்போது புரியப்போகிறது?
இந்த உலகம் இயங்குவதற்கு அதன் நுண்மைகள்தான், அதன் சின்னஞ்சிறு விஷயங்கள்தான் அடிப்படை. இந்த உலகம் ஒற்றைக்கால் மைனாக்களுக்கும் அய்லான் களுக்கும் உரியதாக இருக்கவில்லை என்றால், அது நமக்கும் உரியதாக இருக்காது. கரையொதுங்குவதற்கு முந்தைய அய்லான்களாக நாம் அனைவரும் இருந்திருக் கிறோம் என்பதை நாம் வசதியாக மறந்துபோய் விட்டிருந்திருக்கிறோம்.

அரசியல் வானில் போலி பட்டங்கள்!

  • ஸ்மிருதி இரானி - ஜிதேந்திர சிங் தோமர்
    ஸ்மிருதி இரானி - ஜிதேந்திர சிங் தோமர்
  • வினோத் தாவ்டே - ராம்சங்கர் கத்தாரியா
    வினோத் தாவ்டே - ராம்சங்கர் கத்தாரியா
ஏதும் தெரியாத அக்காலக் கவிஞர், ‘மலை வாழை அல்லவோ கல்வி, விலைபோட்டு வாங்கவா முடியும்?’ என்று பாடிவைத்தார். இன்றைக்கு லஞ்சமும் ஊழலும் நுழைய முடியாத துறைகளே இல்லை. ‘அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்றான் மேலைநாட்டு அறிஞன். நம் நாட்டில் பலரும் நேரத்தை வீணாக்குவதில்லை.
அயோக்கியத்தனத்திலும் வடிகட்டியது ஒன்று உண்டு என்றால், படிக்காமலேயே பட்டம் வாங்குவதும் அதை ஊரறியத் தம்பட்டம் அடித்துக்கொள்வதும்தான். நம் நாட்டு அரசியல்வாதிகள் அதில் கைதேர்ந்தவர்கள். ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்றொரு தனிச் சிறப்பும் இதில் உண்டு.
இன்றைய இந்தியாவில் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிட ‘குறைந்தபட்சத் தகுதி’ என்று எதுவுமே கிடையாது. ‘18 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும், திவாலாகியிருக்கக் கூடாது, பைத்தியமாக இருக்கக் கூடாது (வாக்காளர்கள் இருக்கலாம்!)’ என்ற குறைந்தபட்ச நிபந்தனைகளோடு சரி.
குற்ற வழக்குகளில் கடும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத் திருத்தம் பின்னாளில் வந்திருக்கிறது. இவ்வளவுதான் அரசியல்வாதிகளைத் தடுத்து நிறுத்தும் நிபந்தனைகள். அப்படியும் சிலர் தங்களுடைய கல்வியறிவுக் குறைவைப் பெரிய இழப்பாகக் கருதி, அந்தக் குறையைத் தாங்களாகவே தீர்த்துக்கொண்டுவிடுகிறார்கள்.
மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்ப்பது இப்போதைய நடைமுறை; அதையே ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் மாநிலத்திலும் மத்திய அரசிலும் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான போலி பட்டதாரிகள் பிடிபடுவார்கள் என்பது நிச்சயம்.
அரசியல் தலைவர்கள் சிலர் மீது இப்போது போலி பட்டதாரிகள் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே, மக்களுடைய கவனம் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது.
ஸ்மிருதி இரானி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானியைப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தபோதே லட்சக்கணக்கான புருவங்கள் உயர்ந்தன. காரணம், அவர் தொலைக்காட்சித் தொடர் நடிப்பால் அறியப்பட்டவரே தவிர, படிப்பால் அல்ல. பட்டப் படிப்பைக்கூட முடிக்காத அவரைப் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களையும், கல்வியாளர்களையும், சிந்தனையாளர்களையும் சந்திக்க வேண்டிய இடத்தில் அமர வைத்தார் மோடி. நம் நாட்டுக் கல்வியைத் தரம் உயர்த்தி, உலக அரங்கில் ஏற்றி வைக்க பாரதிய ஜனதா கட்சியில் கிடைத்த அதிகபட்சத் தகுதி உள்ள வேட்பாளர் ஸ்மிருதி இரானிதான் என்றால், நாடு என்ன செய்ய முடியும்?
ஸ்மிருதி இரானியைக் கல்வி அமைச்சராக்கியவுடன் (மனிதவள மேம்பாடு என்றெல்லாம் சுற்றி வளைத்தாலும் அந்தத் துறை கல்வி தொடர்பானதுதான்) முதலில் எதிர்த்தவர் மோடியின் தீவிர ஆதரவாளரான மது கிஷ்ட்வர்தான். ‘பள்ளியிறுதி வகுப்பை மட்டுமே பூர்த்திசெய்த அவரை நியமிப்பதா, பாஜகவில் படித்தவர்கள் வேறு யாரும் இல்லையா?’ என்று உரத்துக் குரல் எழுப்பினார். மோடி மவுனம் சாதித்தார்.
2004-ல் டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது தனது கல்வித் தகுதியை ‘பி.ஏ. 1996 டெல்லி பல்கலை. (அஞ்சல் வழி)’ என்று குறிப்பிட்டிருந்தார் ஸ்மிருதி. 2014-ல் அமேதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டபோது ‘பி.காம் முதலாண்டு, பார்ட்-1 டெல்லி பல்கலை. (அஞ்சல் வழி) 1994’ என்று குறிப்பிட்டிருந்தார். பி.ஏ.வா, பி.காமா? படித்தாரா, முடித்தாரா? எதுவும் தெரியவில்லை.
கவியின் வாக்கு பலித்தது
‘காலேஜுக்குப் போகாதவன் கல்வி மந்திரி ஆனான், காபி ஓட்டல் வச்சிருந்தவன் உணவு மந்திரியானான்’என்று தமிழத் திரைப்படப் பாடலாசிரியர் 40 ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுதி வைத்துவிட்டார். கவிஞன் வாக்கு பலித்துவிட்டது!
ஆமர் கான் என்ற பத்திரிகையாளர் ஸ்மிருதி இரானிக்கு எதிராகக் கொடுத்த புகாரை, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஆகாஷ் ஜெயின் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆகஸ்ட் இறுதியில் சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை தொடங்கும். 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, வேட்பு மனுவில் உண்மையை மறைத்து தவறான தகவலைத் தெரிவித்தால் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரொக்க அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
பதவியிழந்த தோமர்
டெல்லி சட்டப் பேரவைக்கு ஆம் ஆத்மி கட்சி (ஆ.ஆ.க.) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட அமைச்சராகப் பதவியேற்ற ஜிதேந்திர சிங் தோமர் ‘பி.எஸ்சி., எல்.எல்.பி.’ பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். பொதுவாழ்வில் தூய்மையை முன்னிறுத்தப் புறப்பட்டிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், அவரையே சட்ட அமைச்சராக்கினார்.
பிஹார் மாநிலம் பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக தோமர் குறிப்பிட்டிருக்கிறார். தோமரைக் கைது செய்த டெல்லி போலீஸார், அவர் படித்ததாகச் சொன்ன கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் ‘கல்விச் சுற்றுலா’ சென்றிருக்கிறார்கள். இதுவரை கிடைத்த தகவல்களின்படி அவருடைய எல்.எல்.பி. பட்டம் அசல், பி.எஸ்சி. பட்டம்?
பதவி இழந்தாலும் சிறையில் அடைக்கப்பட்டாலும் தோமர் ‘நான் குற்றமற்றவன்’ என்றே கூறுகிறார். விரைவிலேயே உண்மையை நிரூபித்து, முகிலைக் கிழித்து வெளிவரும் முழு நிலவைப் போல வெளியே வருவேன் என்றிருக்கிறார். அப்போதும் கிழிப்பதைவிட மாட்டார் போலிருக்கிறது.
வினோத் தாவ்டே
மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக-சிவசேனைக் கூட்டணி சார்பில் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார் வினோத் தாவ்டே. அவர் புணேயில் உள்ள தியானேஸ்வர் வித்யா பீடத்தில் 1980
முதல் 1984 வரை ‘படித்து’, மின்னணுவியலில் பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் இல்லை. இனி, பல்கலைக்கழகத்தை நடத்தக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் 2002-ல் தடை விதித்தது. 2005-ல் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
பள்ளியிறுதி வகுப்பை முடித்த சில காலத்துக்கெல்லாம் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும், அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று தெரியும் என்றும், அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும் தாவ்டே இப்போது கூறுகிறார். ‘சான்றிதழ் களைத் திருத்தவில்லை, வேறு பல்கலைக்கழகத்தில் படித்ததாகப் பொய் சொல்லவில்லை, பட்டதாரி என்ற வகையில் பட்டதாரி தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்ளவில்லை, வேறு எந்தச் சலுகையையும் அனுபவித்ததில்லை’ என்கிறார் தாவ்டே.
அங்கீகாரம் இல்லாத பல்கலைக் கழகம் அளிக்கும் பட்டத்தை எப்படிப் போட்டுக்கொள்வது? இது முறைகேடு இல்லை என்று மனசாந்தி அடைய முடியுமா? தாவ்டேயைப் போல அங்கே படித்த எத்தனை பேர் இப்போது எங்கெங்கே, என்னென்ன பதவிகளில் இருக்கிறார்களோ என்ற கேள்விகள் எழுகின்றன.
ராம்சங்கர் கத்தாரியா
மத்திய அமைச்சரவையிலேயே ஸ்மிருதி இரானியின் துறையில், ‘இணை’அமைச்சராக இருக்கும் ராம்சங்கர் கத்தாரியா இந்திப் பேராசிரியர். கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றவர். ஆக்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பி.ஏ., எம்.ஏ. மதிப்பெண் சான்றிதழ் களில் திருத்தம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இப்படி ஒரு குற்றச்சாட்டாவது இல்லாவிட்டால் எப்படி ‘இணை’ஆக முடியும்?
படித்துவிட்டுத்தான் நாட்டுக்குத் தலைவராக வேண்டும் என்பது கட்டாய மில்லை. படிக்காத மேதைகளை வரவேற்கத் தயங்காத நாடு இது. படித்ததாக வேட்பு மனுவில் குறிப்பிட்டு மாட்டிக்கொள்வானேன் என்பதுதான் கேள்வி!

ஒரு நதியின் வாக்குமூலம்: பாம்புபோல் வளைந்து செல்லும் காளிங்கராயன்!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகுதான், சமவெளியில் பவானியும் மோயாறும் இணையும் இடத்தில் பவானி சாகர் அணை கட்டப்பட்டது. ஆனால், 13-ம் நூற்றாண்டிலேயே காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் திட்டம் கட்டப்பட்டுவிட்டது.
காளிங்கராயன் அணைக்கட்டு, பவானி ஆறு மற்றும் காவிரியுடன் கலக்கும் பகுதிக்கு அருகே (தற்போதைய பவானி நகரம்) கட்டப் பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு மூன்று பகுதிகளைக் கொண்டது. அணையின் முதன்மைப் பகுதி 757 அடியும், மத்திய பகுதி 854 அடியும், இறுதிப் பகுதி 13,500 அடியும் நீளம் கொண்டுள்ளது. நவீன வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இந்த அணையில் கட்டப்பட்ட காளிங்க ராயன் வாய்க்கால், சிறந்த நீர் மேலாண் மைக்கான இயற்கை சார்ந்த அறிவியல் திட்டமாகப் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ, இதை உலகின் பழமையான வாய்க்கால்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.
வாய்க்காலின் தலை மதகு முதன்மை அணைக்கட்டின் தென்கோடியில் உள்ளது. மட்டச் சரிவு மற்றும் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் இயற்கை தொழில்நுட்பம் மூலம் இந்த வாய்க்கால் தாழ்வான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது. வாய்க்காலின் நீளம் 90 கி.மீ. இந்த வாய்க்கால் மூலம் 17,776 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
அரசன் எடுத்த சபதம்
அணை மற்றும் வாய்க்கால் கட்டப் பட்ட வரலாறு குறித்து வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன் கூறும் போது, "சத்தியவர்மன் வீரபாண்டி யனின் பிரதிநிதியாக கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காளிங்கராயன். இந்தக் கால்வாயை அவர் 13-ம் நூற்றாண்டில் 1270 - 1282 கால கட்டத்தில் கட்டியிருக்கலாம். வாய்க்கால் திட்டம் பற்றி பல்வேறு செவிவழிச் செய்திகள் நிலவினாலும், பெரும் பாலும் சொல்லப்படுகிற வரலாறு இதுதான். காளிங்கராயனின் சொந்த ஊர் வெள்ளோடு. அவர் வாழ்ந்த பகுதிகள் மேடானவை. அதனால், அங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டுமே.
தண்ணீர் பற்றாக்குறையால் சரியான விவசாயம் இல்லை. புன்செய் பயிர்களை மட்டுமே விளைவிக்க முடிந்தது. ஒருமுறை காளிங்கராயன் தன் மகனுக்கு பெண் கேட்க தஞ்சைப் பகுதி யில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக் குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டின் சமையற்காரர் இவர்களுக்கு விருந்து சமைக்க பழைய அரிசி போடுவதா? புதிய அரிசி போடுவதா? என சகோத ரியின் குடும்பத்தினரிடம் கேட்டிருக் கிறார். அதற்கு, 'நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாய் இருந்தால் என்ன?' என்று கேலி செய்திருக்கிறார்கள்.
கனவில் வந்த பாம்பு
கோபமடைந்த காளிங்கராயன், தனது தேசத்தின் புன்செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுக்கிறார். பவானி ஆற்றிலிருந்து தனது தேசமான மேட்டுப் பகுதிக்கு கால்வாய் வெட்ட திட்டமிடுகிறார். பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்தும் அது சாத்தியம் இல்லை என்று பொறியாளர்கள் கைவிரிக்கிறார்கள்.
ஒருநாள் காளிங்கராயனுக்கு கனவு வருகிறது. அதில், ஒரு பாம்பு மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து முன்னேறு கிறது. அப்போதுதான் தண்ணீரையும் அப்படி கொண்டு செல்லலாம் என்று காளிங்கராயனுக்கு பொறி தட்டியது. அதன்படி, தனது சொந்த செலவில் வாய்க்காலையும் பாம்புபோலவே வளைத்து நெளித்து கட்டி முடிக்கிறார். அவர் சபதம் எடுத்தபடி மேட்டுப் பகு தியை நோக்கி பாய்ந்து வந்து சேர்ந்தது பவானி தண்ணீர். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாயின.
நாட்டைவிட்டு வெளியேறிய அரசன்
காளிங்கராயன் 'சாத்தந்தை' என்ற குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப் படுகிறது. ஆனால், இந்த வாய்க்காலை வெட்ட பெரும்பாலும் உதவியர்கள் தலித் சமூகத்தினரே. மேலும், வாய்க்காலை கட்டும்போது உதவாத தன் குலத்தினர் எந்த விதத்திலும் வாய்க்காலை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். அப்போது, சிலர் காளிங்கராயனின் சொந்த உபயோகத் துக்காக வாய்க்காலை வெட்டினான் என்று பேசினார்கள். அதைக் கேட்ட காளிங்கராயன், நான் மற்றும் எனது சந்ததியினர் எவரும் வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் என்று சொல்லி, தனது நாட்டை விட்டு வெளியேறி ஊத்துகுளிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.
இந்த வாய்க்காலை கோண வாய்க் கால், பழைய வாய்க்கால், காரை வாய்க் கால் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இன்றும் இந்த வாய்க்கால் சற்றும் சிதிலமடையாமல் இருப்பதே அன்றைய தரமான கட்டுமானத்துக்கு சாட்சி" என்கிறார் இளங்கோவன்.
*
17-ம் நூற்றாண்டில் கொடிவேரி கிராமத்தில் பவானி ஆற்றில் மைசூர் அரசர்களால் கட்டப்பட்ட கொடிவேரி அணைக்கட்டும் மிகப் பெரிய சாதனையே. இன்றைக்கும் ஏராளமான விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த அணை. இதன் நீளம் 496 அடி. நீர்ப் பிடிப்பு பகுதிகள் 1,900 சதுர மைல்கள். அங்கிருந்து வினாடிக்கு 1,22,066 கன அடி தண்ணீர் வரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அணையின் வலது பக்கமிருந்து தடப்பள்ளி வாய்க்காலும் (77 கி.மீ. நீளம்), இடது பக்கமிருந்து அரக்கன்கோட்டை வாய்க்காலும் ( 32 கி.மீ. நீளம்) பிரிகின்றன. இரு வாய்க்கால்களிலும் மொத்தம் 655 மதகுகள் கட்டப்பட்டுள்ளன. இரு வாய்க்கால்கள் மூலம் தற்போது 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 1948-49 ஆண்டில் இந்த அணையின் முழு நீளத்துக்கும் இரண்டு அடி உயரத்தில் கதவுகள் பொருத்தப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில் அணையின் உயரம் இரண்டரை அடி உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கிறது?

1975 ஜூன் 25-26-ல் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் 40-வது ஆண்டு நிகழ்ச்சியையொட்டி இந்தக் கேள்வி என்னைக் குடைகிறது: எந்த அளவுக்கு ஜனநாயகம் இன்றைக்குப் பாதுகாப்பாக இருக்கிறது?
ரேபரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்றது செல்லாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பதவி வகிப்பது சரியா என்று இந்திரா காந்தியைக் கேட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நாடெங்கும் ஆயிரக் கணக்கான அரசியல் தொண்டர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசார ணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போலீஸ்காரர்களின் துணையோடு ஆயிரக் கணக்கான ஆண்கள் சஞ்சய் காந்தியாலும் அவருடைய அடியாட்களாலும் கட்டாய கருத்தடைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தியும், அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தியும் சஞ்சயின் சிறு ஆதரவாளர்கள் கும்பலும் நாட்டின் முழு நிர்வாகத்தையும் அதிகாரத்தையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டவுடன் நாடு முழுக்க அச்சம் பரவியது. “இந்திய அரசியல் சட்டம் அளிக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என்ற அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பு வெளியானபோது, அறிவுஜீவிகளில் பெரும்பாலான வர்களும் பொதுக்கருத்துகளை உருவாக்கும் இடங்களில் இருந்தவர்களும் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் செல்ல உரிமை இல்லை என்ற அரசின் அறிவிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதக் கவலையையும் ஏற்படுத்தவில்லை.
அன்றைய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோதச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் சட்டபூர்வ அங்கீகாரம் அளித் ததுதான் வெட்கப்பட வேண்டிய செயலாக இருந்தது. 1976-ல் நடந்த ‘ஏ.டி.எம்., ஜபல்பூர்’ வழக்கில் ‘அரசின் முடிவு சரியே’ என்று நான்கு நீதிபதிகள் ஆதரித்தனர். நீதிபதி எச்.ஆர். கன்னா மட்டுமே அந்த அறிவிப்பு, சட்டப்படியான ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு எந்த அளவுக்கு ஊறு செய்யும் என்று உணர்ந்து, மாற்றுத் தீர்ப்பை வெளியிட்டார். அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் மட்டுமே தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார். ஆனால், பெரும்பாலான நீதிபதிகள் ஆதரித்ததால், அடிப்படை உரிமைகள் பறிப்பு செல்லாது என்று 9 உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் தள்ளுபடியாயின.
‘அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாக மறுக்கும் அளவுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்ற அரசின் கூற்றை உச்ச நீதி மன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
போர்க்காலத்தில் நாட்டு மக்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்று இரண்டாவது உலகப் போரின்போது பிரபுக்கள் அவை அளித்த தீர்ப்பையே அவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டனர். பெரும்பான்மை நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புக்கு ஆதரவாகப் பற்றி நின்ற நிலையை, பிரிட்டிஷ்காரர்களே பின்னாளில் தூக்கி எறிந்துவிட்டனர். அந்த வழக்கிலும் மாற்றுத் தீர்ப்பு அளித்த அட்கின் பிரபு, தன்னுடைய சகோதர நீதிபதிகள், (அரசியல்) நிர்வாகிகளைவிடத் தங்களை அதிகபட்ச நிர்வாகிகளாகக் கருதிவிட்டனர் என்று மனம் வெதும்பிக் கூறினார். ‘உள்துறை அமைச்சகத்தின் நாற்காலிக்கு அடியில் சிக்கிக்கொண்ட சுண்டெலி போல நீதித் துறை ஆகிவிட்டது’ என்று லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்டேபிள் வேடிக்கையாகக் குறிப் பிட்டார்.
1976-க்கு முன்னால் பிரிட்டிஷ் நீதிமன்றங்களே நிராகரித்த ஒரு நிலையை இந்திய உச்ச நீதிமன்றம் பின்பற்றி, நெருக்கடி நிலையை நியாயப்படுத்தியது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. ஒரு தலைமுறையையே கொந்தளிக்கவைத்த விஷயங்கள் இவையெல்லாம்.
ஆனால், இவை குறித்தெல்லாம் இன்றைய இந்தியர்களில் எவரேனும் இப்போது கவலைப்படுகிறார்களா? பேச்சு சுதந்திரத்தையும் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் நெரிக்கும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க இன்றைக்குத் தயாராக இருப்போர் எத்தனை பேர்? அட, 26.06.1975 தொடங்கி 23.03.1977 வரையிலான 21 இருண்ட மாதங்களில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதைப் பதிவுசெய்யாமல் இன்னமும் ஏன் நம்முடைய வரலாற்றுப் புத்தகங்கள் மவுனம் சாதிக்கின்றன?
மாறியது என்ன?
நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு, இங்கே ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டப் பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடப்பது மட்டுமே இங்கு ஜனநாயக நடவடிக்கையாக இருக்கிறது. தேர்தலிலும்கூடப் பண பலம், அடியாள் பலம், சாதிகளின் ஆதிக்கம், மதவாதம், ஆதிக்க சக்திகளின் செல்வாக்கு ஆகியவையே முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களால் செயற்கைக் கோள்களைப் பறக்கவிட முடிகிறது, கோடிக் கணக்கான மக்களின் வறுமையை, பசியை, தாகத்தை, சுகாதாரமற்ற வாழ்க்கையைப் போக்க முடியவில்லை.
ஊழல் பேர்வழிகளான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடைய துணையோடு பெருந்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன. அவர்களைத் தேச பக்தர்கள் என்று அழைக்கின்றனர். இப்படி இயற்கை வளங்களைச் சூறையாடாதீர்கள் என்று தடுக்கும் சமுதாயத் தலைவர்களை, சமூக ஆர்வலர்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அடித்து நொறுக்கி, கைது செய்து சிறையில் அடைத்து துரோகிகள் என்று பட்டம் சூட்டுகின்றனர். வளர்ந்து வரும் பெரும்பான்மையினவாதமும், வகுப்புவாதமும் இந்திய ஜனநாயகத்துக்கு இதுவரை இருந்திராத அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றன.
சூட்-பூட் கி சர்க்கார்
இன்றைக்கு மோடி அரசு மீது முன்வைக்கப்படும் சூட்-பூட் கி சர்க்கார் என்ற அடைமொழி எல்லாப் பெரிய அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தும். பெருந்தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் நாட்டின் பொருளாதாரமும் வணிகமும் இருக்கின்றன. எல்லா மாநில அரசுகளுமே மக்களுடைய எதிர்ப்பைக் கொடூரமாக ஒடுக்க ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளன. காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை. தேசவிரோதச் செயல் தடுப்பு, தேசப் பாதுகாப்பு போன்ற சட்டங்களைப் பயன்படுத்த அவை தயங்குவதில்லை. விவசாயிகள், பழங்குடிகள், மாணவர்கள், மகளிர் என்று எந்த அமைப்பினர் கிளர்ச்சி செய்தாலும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்கள் இப்போது போலீஸ் சர்க்கார்களாக மாறிவிட்டன.
படித்தவர்களின் அலட்சியம்
ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. நகர்ப்புற படித்த மக்களும் சொந்தத் தொழில் செய்வோரும் இதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தி யாவின் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசிக்கும் கோடிக் கணக்கான இந்தியர்கள் கோபத்தில் கொதித்துக்கொண் டிருக்கிறார்கள். புதிய சுரங்க அகழ்வுகள், அணை கட்டும் திட்டங்கள், வன அழிப்பு, தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடல் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் அன்றாடம் லட்சக் கணக்கான சிறு சிறு மோதல்கள் நடந்துவருகின்றன. செய்தி ஊடகங்கள் அவை அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. வளர்ச்சி என்பது கவுரவம், ஜனநாயகம் ஆகியவற்றுடன் ஏற்படும்வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்துள்ளனர்.
நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது டெல்லி திஹார் சிறையிலிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபளானி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்களுடைய நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கு ஏற்படுத்தியது தான் ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம்’(பி.யு.சி.எல்.). ஜனநாயகத்துக்கு விரோதமான சக்திகளும், ஆளும் கட்சியின் அதிகார வட்டத்துக்குள் இருக்கும் எடுபிடிகளும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்கிவிடக் கூடாது என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த இயக்கம்.
நெருக்கடி நிலை காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளான ஆயிரக் கணக்கான மக்களை பி.யு.சி.எல். இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறது. அறிவிக்கப்படாத இரண்டாவது நெருக்கடி நிலை ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் கடமை பி.யு.சி.எல்லுக்கும் இதைப் போன்ற சகோதர அமைப்புகளுக்கும் இருக்கிறது. நம்முடைய ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை எல்லோருக்கும் கிட்டும் வகையிலும் எல்லா ஜனநாயக ஆதரவு சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
பல்சாக் தன்னுடைய நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், “நீதித் துறையை அவநம்பிக்கையோடு பார்ப்பதில் தொடங்கு கிறது ஒரு சமூகத்தின் முடிவு; இப்போதைய அமைப்புகளின் மாதிரியை உடையுங்கள், வேறு அடிப்படையில் அதைப் புதிதாக உருவாக்குங்கள். ஆனால், அதை நம்புவதை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்” என்று. எந்த ஒரு சமூகத்திலும் நீதித் துறை ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய இந்தியாவில் அரசியல் சட்டம் தனக்களித்த கடமையிலிருந்து இந்திய நீதித் துறை நழுவுவதாகவே தோன்றுகிறது.

உலகில் புகை பிடிப்பவர்கள் 100 கோடி பேர்: மது அருந்துவோர் 24 கோடி

உலகம் முழுவதும் 100 கோடி பேருக்கு புகைப் பழக்கமும் 24 கோடி பேருக்கு குடிப்பழக்கமும் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

“அடிமை பழக்கவழக்கங்கள் மீதான சர்வதேச புள்ளிவிவரம்: 2014 நிலை அறிக்கை” என்ற தலைப்பில் ஒரு சர்வதேச ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலி யாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் லிண்டா கோவிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் விவரம்:
உலகில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் (100 கோடி) புகை பிடிக்கின்றனர். சுமார் 5 சதவீதம் பேர் (24 கோடி) மது அருந்துகின்றனர்.
இதுபோல ஹெராயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் சேகரிப்பது கடினம். ஆனால், உலகம் முழு வதும் போதை ஊசி போட்டுக் கொள்பவர்கள் 1.5 கோடி பேர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத போதைப் பொருட்களைவிட சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய தீங்கை விளை விக்கக் கூடியவை என தெரிய வந்துள்ளது.
உலகிலேயே கிழக்கு ஐரோப்பி யர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். அங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒருவர் 13.6 லிட்டர் மது அருந்துவது தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக வடக்கு ஐரோப் பியர்கள் 11.5 லிட்டர் மது குடிக்கின்றனர். மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இது மிகக்குறைந்த அளவாக (2.1 லிட்டர்) உள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வர்களில் 30 சதவீதம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். ஓஷனியாவில் இது 29.5 சதவீதமாகவும் மேற்கு ஐரோப்பாவில் 28.5 சதவீதமாக வும் உள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

என்ன பண்ணலாம்?- ஓர் உதவி இயக்குநரின் உருக்கமற்ற மடல்

ஒரு முன்னணி இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். படப்பிடிப்பில் ஒரு வாரம் இடைவெளி என்றவுடன், வித்தியாசமாக ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். யாருடைய தொந்தரவும் இருக்கக் கூடாது என்று ஃபோனை எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டு கதை யோசித்து எழுத ஆரம்பித்தேன்.
புடம் போட்ட தங்கப் புதையல் தோண்ட போய் கடைசியில் ஒரு வெண்கலக் கிண்ணம் கிடைத்த கதையாக... என்னால் இந்தக் கடிதத்தை மட்டுமே எழுத முடிந்தது. ஏன்... என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள ஆவலா?
முதல் படம் இயக்கும் எல்லா இயக்குநருக்கும் என்னுடைய நிலைமையில்தான் இருந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. வசூலிலும் வரவேற்பு, ஹிட், எனக்கும் பெயர் கிடைக்க வேண்டும் என்று நினைத்து முதலில் கமர்ஷியல் கதை எழுதலாமா என்று நினைத்தேன். "அய்யோ.. இயக்குநர் ஹரி, இயக்குநர் பேரரசு பாணியில் ஒரு படம்" என்று இணைய விமர்சகர்கள் கழுவியூற்றுவார்கள் என்று பயந்து ஒதுக்கிவிட்டேன்.
சரி.. ஒரு திருட்டை மையப்படுத்தி சுவாரசிய கதை எழுதலாம் என்று நினைத்தபோது இயக்குநர் நலன் குமாரசாமி, வெங்கட்பிரபு பாணி படம்பா என்று சொல்வார்கள் என நினைத்து அந்த எண்ணத்தையும் குழி தோண்டி புதைத்தேன்.
காதல் ரசம் சொட்டச் சொட்ட முத்தக் காட்சிகளோடு ஓர் உன்னதக் காதல் கதை எழுதலாம் என்று நினைத்தேன். எவ்வளவு காலமாக தமிழ் சினிமாவில் இதே காதலைப் பார்ப்பது என்று புலம்புவார்கள் என நானும் புலம்பிக்கொண்டே கதை எழுதிய பேப்பரை குப்பையில் போட்டுவிட்டேன்.
பார்ப்பவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க ஒரு நல்ல காமெடி கதை எழுதலாம் என்று சிரித்துக் கொண்டே உட்கார்ந்தேன். பார்ப்பவர்கள் சிரிக்கிறார்களோ இல்லையோ இயக்குநர் சுந்தர்.சி, ராஜேஷ் ஆகியோரின் ட்ரெண்ட் பின்னாடி போயிருக்கான்பா இயக்குநர் என சொல்லுவார்களே என்ற கடுப்புடன் எழுதிய கதையை அடுப்பில் போட்டுவிட்டேன்.
ஹய்யோ.. சூப்பர் பேய் படம் எடுக்கலாம் என்று நள்ளிரவில் கதை எழுத உட்கார்ந்தேன். பேய் வந்து பயம் முறுத்தும் முன் ஒரே ட்ரெண்ட்டை தமிழ் சினிமாவில் பாலோ பண்றாங்கப்பா... அதுல இதுவும் ஒண்ணு என்று கூறுவார்களே என படுத்து தூங்கிவிட்டேன்.
ஒரு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு ரயில், 4 பஸ், 10 சுமோ எல்லாத்தையும் வெடிக்க வைத்து ஹாலிவுட் பாணியில் படம் எடுக்கலாம் என்றால், ஷங்கர் பாணி என்பார்களே என நான் வெடித்து பேப்பரை கசக்கிவிட்டேன்.
கிராமம், மதுரை சார்ந்த படம், தாதா கதைகள் எழுதலாம் என்றால், 'பருத்தி வீரன்', 'ஆடுகளம்', 'ஜிகிர்தண்டா' போன்ற படங்கள் இயக்குநரை ரொம்ப பாதித்திருக்கிறது போல என்பார்களே என்ற நினைப்புடன் உட்கார்ந்துவிட்டேன்.
இப்படி ஒவ்வொரு படத்துக்குமே நொட்டைகளை நோகும்படி கூறினால், நான் எந்த மாதிரி கதை எழுதுவது என்று யோசித்தேன். உடனே, ஏதாவது ஓர் ஆங்கில படத்தைச் சுட்டு, திரைக்கதையை மாற்றி தெரியாமல் பண்ணிவிடலாம் என்றால், தமிழ் ரசிகர்கள் இப்போது டீசரை வைத்தே காப்பி எனக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
இது எல்லாத்தையும் மீறி, நான் ஒரு கதையை வித்தியாசமான காதல், காமெடி, த்ரில், பேய், தாதா என எல்லாத்தையும் கலந்து ஒரு கதை எழுதி வைத்தேன். இப்போது நான் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லாத்தையும் தேடி அலைய வேண்டும். எல்லாம் கிடைத்து படம் முடித்துவுடன்தான் பிரச்சினையே வெடிக்கும்.
சென்சார் அதிகாரிகள் 'U/A' என்பார்கள், தயாரிப்பாளர் 'U' தான் வேண்டும் என்பார். இந்தச் சண்டையைக் கூட காட்சிகளை கட் பண்ணி முடிப்பதற்குள், ஒருவர் இது என்னுடைய கதை என்று நீதிமன்றத்தை நாடுவார். நாம தனியாத்தானே கதை எழுதினோம், யாருடா இவன் என்று அந்தப் பிரச்சினையை முடிக்க வேண்டும்.
சென்சார் பிரச்சினை, நீதிமன்ற பிரச்சினை முடிந்து படத்தை வெளியிட நினைக்கும் போது திரையரங்குகள் கிடைக்காது. அதற்காக காத்திருக்க வேண்டும். இது எல்லாத்தையும் மீறி கிடைக்கும் திரையரங்குகளில் வெளியிட்டு விமர்சனத்துக்காக உட்கார்ந்திருப்பேன். அப்போது இந்தக் காட்சி இந்தப் படத்தோட சாயல், அந்தக் காட்சி அந்தப் படத்தோட சாயல் என்று கழுவியூற்றுவதைப் பார்க்க வேண்டும்.
இப்போது கதையை எழுதி முடித்துவிட்டேன். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் என் கண் முன் தோன்றியது. உடனே எழுதிய கதையை அப்படியே வைத்துவிட்டு, நன்றாக சாப்பிட்டு விட்டு இக்கடித்தை எழுதினேன்.
நான் எழுதிய கதையை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்க முடியுமா? அதை வெளியிட முடியுமா?
என்ன பண்ணலாம்?

இன்னொரு மோடி ஆவாரா கேஜ்ரிவால்?

லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்று அறச்சீற்றத்துடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சியடைந்த கிரண் பேடி, கட்சிக்குள்ளேயே மறைமுகமான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். தோல்வியின் நிழல் இன்னும் அகலாத காங்கிரஸ் கட்சி, குருட்டு நம்பிக்கையில் அஜய் மக்கானை நிறுத்தி இரண்டு கட்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண் டிருக்கிறது. பிற கட்சிகள் பேருக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. இப்படியாக, டெல்லி மாநிலத் தேர்தல் களம் சுறுசுறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
பாஜகவைப் பொறுத்தவரை ஆம் ஆத்மியை வீழ்த்துவதுதான் இலக்கு. காங்கிரஸைப் பற்றி அக்கட்சிக்குக் கவலை இல்லை. அக்கட்சியைப் பொறுத்தவரை மோடி எனும் பெயர்தான் தேர்தல் களத்தின் பிரம்மாஸ்திரம். மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடியை முன்வைத்துதான் அந்தக் கட்சி போட்டியிட்டது. முதல்வர் வேட்பாளர் என்று யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
ஆனால், டெல்லி கதை வேறு. ராம்லீலா மைதானத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்த மோடி, அரவிந்த் கேஜ்ரிவாலைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதிலிருந்தே ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரிந்தது. வழக்கமான ஆவேசத்துடன் மோடி பேசினாலும் அவரது பிரச்சார உரை பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. நிலைமையை உணர்ந்த பாஜக, முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து அவசர அவசரமாக கிரண் பேடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி தேர்வுசெய்யப்பட்டது இப்படித்தான். தேர்தலில் வென்றால் மோடியின் பெயரையும், தோற்றால் (கிரண்) பேடியின் பெயரையும் பாஜக சொல்லிக்கொள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சி கிண்டலடித்திருக்கிறது.
அவரும் நானும் சிநேகிதர்கள்
டெல்லி பாஜகவைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குத்தான் செல்வாக்கு அதிகம். டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய, விஜய் கோயல் என்று முக்கியமான தலைவர்கள் இருக்கும்போது, கிரண் பேடியை முன்னிறுத்தியதில் கட்சித் தொண்டர்களுக்குக் கடும் அதிருப்தி. கிருஷ்ணா நகர் தொகுதியில் கட்சித் தொண்டர்களை முதன்முறையாக கிரண் பேடி சந்தித்தபோது, திடீரென்று ஹர்ஷவர்தனுக்கு ஆதரவாகத் தொண்டர்கள் கோஷமிடத் தொடங்கினார்கள். சுதாரித்துக்கொண்ட கிரண் பேடி, தனக்கும் ஹர்ஷவர்தனுக்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றிப் பேசிச் சமாளிக்க வேண்டிவந்தது.
அண்ணா ஹசாரேயுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராடிய சமயத்தில், பாஜக மீது கரிசனத்துடன் நடந்துகொள்ளுமாறு ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் பிற உறுப்பினர்களை கிரண் பேடி கேட்டுக்கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. கிரண் பேடிக்கு வாய்ப்பளிக்கப்பட இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுவதை அமித் ஷா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா சமீபத்தில் சந்தேகம் தெரிவித்திருந்ததையும் இதன் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். அண்ணா ஹசாரேயுடன் இணைந்து போராடிய வி.கே. சிங் பாஜகவில் இணைந்ததன் தொடர்ச்சியாக கிரண் பேடி பாஜகவில் இணைந் திருப்பதை, காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் சுட்டிக்காட்டுகின்றன.
ஆம் ஆத்மி கட்சிக்குள்ளும் நிலவரம் சிலாக்கி யமாக இல்லை. “கிரண் பேடி முதல்வரானால் ஊழலை ஒழிப்பதில் திறம்படச் செயல்படுவார்” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சாந்தி பூஷண் குறிப்பிட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மகன் பிரசாந்த் பூஷணே இதை எதிர்க்க வேண்டிவந்தது. போராட்டத்தில் சிறந்தவர் எனினும் கட்சியினரை ஒருங்கிணைப்பதில் கேஜ்ரிவாலின் திறமை, கட்சிக்குள்ளேயே சந்தேகிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதிலும் ஆம் ஆத்மி தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
வெற்றியை உறுதிசெய்துகொள்ள மீண்டும் பிரச்சாரம் செய்ய முடிவுசெய்திருக்கிறார் மோடி. மோடிக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், இன்னொரு மோடியாக வேண்டும் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் கேஜ்ரிவால் உணர்ந்திருப்பார். ஈடுகொடுப்பாரா, இல்லை ஒதுங்கி வழிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

ஒபாமாவின் இந்திய வருகை சொல்வது என்ன?

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா சென்றடைவதற்கு முன்னரே, அவரது வருகை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் பெயர் அடிபடத் தொடங்கிவிட்டது.

உலகத் தலைவர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணத்தையொட்டி, அந்தந்த நாட்டின் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க வேண்டும் என்ற சர்வதேச விதிமுறைகளின்படி, இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர், இந்தியாவின் அச்சு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார் ஒபாமா. மும்பை தாக்குதல்கள் தொடர்பாகவும், பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பாகவும் தவிர்க்க முடியாத வகையில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பேட்டியில் ஒபாமா பொதுவாகத்தான் பேசியிருக்கிறார். புதியதாகவோ ஆச்சரியப்படுத்தும் விதத்திலோ அல்லது குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக்கூட ஒபாமா பேசவில்லை.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் தங்கள் குறிக்கோள் என்று பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். பயங்கரவாதிகள் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கும் இடமாக பாகிஸ்தான் இருப்பதை ஏற்க முடியாது என்றும், மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் நீதியால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் சொல்வதை, பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருவதன் எதிரொலியாகத்தான் பார்க்க வேண்டும்.
அத்துடன், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் பலர் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது. 2008-ல் நடந்த அந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் எண்ணமும்!
அதேசமயம், இந்திய அதிகாரிகளும் அந்நாட்டின் தேசியவாத ஊடகங்களும், ஒபாமாவிடமும் அமெரிக்க அதிகாரிகளிடமும் பாகிஸ்தான் தொடர்பான கருத்தைப் பெற முயற்சி செய்யும். இதன் மூலம் பாகிஸ்தான் குறித்து இன்னும் மோசமான விதத்தில் சித்தரிக்க அவர்களது கருத்துகள் பயன்படுத்தப்படும். ஒருவேளை தாங்கள் விரும்பிய பதில் கிடைக்கவில்லை என்றால், யாராவது ஒரு இந்திய அதிகாரி பரபரப்பாக எதையாவது சொல்வார். அடுத்த 3 நாட்களுக்கு அதுதான் தலைப்புச் செய்திகளில் அடிபடும்!
அதேசமயம், இது தொடர்பாக என்ன பதிலளிப்பது என்பதில் பாகிஸ்தான் அரசுக்கும் வெளியுறவுத் துறைக்கும் குழப்பம் ஏற்படும். பதிலே சொல்லாமல் இருந்தால் பாகிஸ்தான் பலவீனமாக இருப்பதாக முத்திரை குத்தப்படலாம். அல்லது வெளியுறவுத் துறை மூலம் எதையாவது சொல்ல முயன்றால், அது இந்தியாவுடனான வார்த்தைப் போருக்கு வித்திடலாம்.
மிகவும் கஷ்டமான விஷயம்தான். சொல்லப்போனால், இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பதுதான் நல்லது. ஒபாமா இந்தியாவுக்குச் சென்றால் அது வணிக நிமித்தமான பயணம் என்று சொல்வது; அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தால் அது இருதரப்பு உறவு தொடர்பானது என்று சொல்வது! அர்த்தமற்ற வகையில் இடைவிடாமல் இப்படிப் போட்டி போடுவதிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியே வர வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்கா - இந்தியா மாநாட்டில் அந்த இரு நாடுகளும் விவாதிக்கவிருக்கும் விஷயங்களில், பாகிஸ்தான் அதிகாரிகள் சொல்லும் கருத்துகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் நிறுத்த வேண்டும் அல்லது அதை வெளிப்படையாக அறிவித்தாலும் நல்லதுதான். பாகிஸ்தான் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதுதான் அது. இரு நாடுகளுக்கும் இடையே, விவாதிக்கப் பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்தியாவுடனான உறவில் முக்கியமானது என்பதைவிட பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான விஷயம் பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதுதான். அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராகப் போரிடுவதுதான்!

அறிவில்லாதவர் எனச் சொல்லலாமா?

  • ஸ்டீபன் வில்ஷ்ரைன் வரைந்த ஓவியம்
    ஸ்டீபன் வில்ஷ்ரைன் வரைந்த ஓவியம்

உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் தெரிந்திருந்தும் சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் வார்த்தைகளைத் தேடுவீர்களா?
# நேர நிர்வாகத்தில் பின்தங்கியுள்ளீர்களா?
# நீங்கள் பார்த்தவை நினைவில் நிற்கும்போது, கேட்டவை மறந்து போகின்றனவா?
# நீங்கள் ஒழுங்கற்று இருப்பதாக அடிக்கடி திட்டு வாங்குவதுண்டா?
# எழுத்துப் பிழைகள் அதிகம் வருமா?
மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் ’ஆம்’ என்ற பதில் இருந்தால், ஐகியூ குறைவானர், படிப்பில் மந்தமானவர் போன்ற பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கக்கூடும். ஆனால் சோர்வடையத் தேவையில்லை. அடுத்து வரும் கேள்விகளுக்கு உற்சாகமாக ஆம் அல்லது இல்லை எனச் சொல்லுங்கள்.
# இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகள் உங்களுக்குக் கைவந்த கலையா?
# வார்த்தைகளாகச் சிந்திக்காமல் ஒரு கதை போலச் சிந்திப்பீர்களா?
# ஒரு புதிருக்கு எல்லோரும் ஒரு விதமான தீர்வைச் சொல்லும்போது நீங்கள் மட்டும் வித்தியாசமான தீர்வைச் சொல்லியதுண்டா?
# ஒரே தடவைதான் ஒரு இடத்திற்குப் பயணித்திருந்தாலும் அடுத்த முறை அவ்விடத்துக்குச் செல்லும் வழியைத் துல்லியமாகச் சொல்ல முடிகிறதா?
# புதிய கருவியைக் கண்டதும், பிரித்துப் போட்டு அதை ஆராய்ந்ததுண்டா?
இங்குள்ள அனேக கேள்விகளுக்கு ‘ஆம்’ எனச் சொல்லியிருந்தால் நீங்கள் காட்சி ரீதியான அறிவு படைத்தவர் என்று அர்த்தம். படிப்பு வராமல் காட்சி ரீதியான அறிவு இருந்து என்ன பிரயோஜனம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர் கார்டனரின் ஆய்வுகள் அறிவு வெளியில் அபூர்வமான திறப்புகளுக்கு வழிகோலுகின்றன.
1970-களில் பிராஜக்ட் சீரோ என்ற திட்டத்தில் இணைந்த கார்டனர் மனித மனத்தில் ஆற்றலைக் கண்டறியும் சோதனைகள் செய்யத் தொடங்கினார். இதில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், முட்டாள் என முத்திரை குத்தப்பட்டவர்கள், மன நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலவிதமான மனிதர்களின் மனத்தை ஆராய்ந்துவந்தார்.
தனி மனிதரின் உளவியல் செயல்பாடுகள், நடத்தை, குணங்களை ஆராயும் சைக்கோமெட்ரிக் தேர்வு முறையைப் பின்பற்றியபோது சில ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தார். அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆடிசம், டிஸ்லெக்சியா போன்ற மனநலக் குறைபாடு உடையவர்களுக்குக் காட்சி ரீதியான அறிவுத்திறன் அபாரமாக இருக்கும் என்பது.

உலகை மாற்றும் மாற்றுத் திறனாளிகள்
உளவியல் தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள்தான் கார்டனரை முதன் முதலில் கல்வி அமைப்பை நோக்கி நகர்த்தின. அதிலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்த போதுதான் பன்முக அறிவுத்திறன் என்ற கோட்பாடே கார்டனருக்கு உதித்தது. குறிப்பாகக் காட்சி ரீதியான அறிவுத்திறன் என்ற ஒன்று பிற அறிவுகளைச் சாராமல் தனித்து இயங்கக்கூடியது என்று அவர் கண்டறிந்தது ஆட்டிசம் உடையவர்களை ஆராய்ந்த பின்புதான். ஆட்டிசம் உடையவர்களின் காட்சி ரீதியான அறிவுத்திறனுக்கு இதோ ஓர் வாழும் உதாரணம்.
கேமரா மனிதர்
பல்லாயிரம் அடி உயரத்தில் வானில் பறக்கும் ஹெலிகாப்டருக்குள் உட்கார்ந்துகொண்டு மேலிருந்து கீழே ஊரை உற்றுப்பார்க்கிறார். நதி, மலை, மரங்கள், கட்டிடங்கள் என அத்தனையும் எறும்புகள் போலத் தெரிகின்றன. சில நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்தே பார்க்கிறார். வீடு திரும்பியதும் அவர் மனதில் பதிந்த காட்சியைத் தன் கருப்பு மை கொண்ட பேனாவால் சரசரவென வரையத் தொடங்குகிறார். சில மணித் துளிகளில் வெள்ளைப் பலகையில் நியூயார்க் நகரம் கருப்புக் கோடுகளில் எழும்புகிறது.
மீண்டும் அதே இடத்திற்குச் சென்று அவர் வரைந்த ஓவியத்தோடு ஒப்பிட்டால் ஒரு புகைப்படம் போலத் தத்ரூபமாக அத்தனை அம்சங்களையும் வரைந்திருக்கிறார். டோக்கியோ, ரோம், ஹாங்காங், துபாய், லண்டன், சிட்னி எனப் பல்வேறு பிரசித்தி பெற்ற நகரங்களை வானில் பறக்கும் பறவை போலப் பார்த்துவிட்டு சித்திரமாக வரைந்துள்ளார். மனிதக் கேமரா எனக் கொண்டாடப்படும் இவர் பெயர் ஸ்டீபன் வில்ஷ்ரைன்.
ஸ்டீபன் வில்ஷ்ரைன் கலை உலகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி 2006-ல் பிரிட்டன் அரசு எம்பிஇ பட்டம் வழங்கியது. மூன்று வயதுவரை பேசாத ஸ்டீபன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறியப்பட்ட பின்னர் சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பேச்சு, எழுத்துத் திறன் இல்லை என்றாலும் ஸ்டீபன் ஓவிய நாட்டமுடையவர் என்பதைப் புரிந்து கொண்ட அவர் பள்ளி ஆசிரியர் அவரைப் பேசவைக்க ஒன்று செய்தார்.
ஸ்டீபனின் ஓவியப் பொருள்களை ஒளித்து வைத்துவிட்டார். எப்படியாவது ஓவியம் வரைய வேண்டும் என்ற பதைபதைப்பில் ஸ்டீபன் முதன்முதலில் பேசிய சொல், “பேப்பர்”. அப்பொழுது அவருக்கு ஒன்பது வயது. அதன் பின் அவருடைய பேச்சுத் திறனும் ஓவியத்தோடே வளர்ந்தது.
வாசித்தல், எழுதுதல், மற்றும் கணித அறிவு இவை கைவரப் பெற்றவர்கள் கல்விக் கூடங்களில் சிறந்த மாணவர்களாகக் கொண்டாடப்படலாம். ஆனால் உலகம் இயங்க இவர்கள் மட்டும் போதாது. அறிவியல், கலை எதுவானாலும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய படைப்புகள் அபரிமிதமாக வரவேண்டும் என்றால் காட்சி ரீதியான அறிவுத்திறன் போன்ற பல்வேறு திறன்கள் போற்றி வளர்க்கப்பட வேண்டும்.