அறிவோம் நம் மொழியை: கொன்ற யானையா, கொல்லப்பட்ட யானையா?

எழுவாயை ஒரு வாக்கியத்தில் எங்கே அமைப்பது என்பது பற்றிக் கடந்த வாரம் பேசினோம். ‘இறந்துபோன சங்கரனின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்னும் வாக்கியத்தில் இறந்தது யார் என்னும் குழப்பத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்குப் பலரும் பதிலளித்திருக்கிறார்கள்.
1. இறந்துபோன சங்கரன், தனது தாயாரோடு திருவல்லிக் கேணியில் வசித்துவந்தார்.
2. சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்.
ஆகிய இரு வாக்கியங்களை பாலசுப்பிரமணியன் தேவராஜ் என்னும் வாசகர் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களிலும் யார் இறந்தது என்பது தெளிவாக இருக்கிறது. முதல் வாக்கியத்தில் ‘தனது தாயாரோடு’ என்ற சொற்கள் மூல வாக்கியத்தில் இல்லாத ஒரு தகவலைச் சொல்கின்றன. மூல வாக்கியத்தில் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்ததாகத் தெளிவாகவே சொல்கிறது. சங்கரன் தங்கியிருந்த இடம்பற்றிய தகவல் அதில் இல்லை. இந்தத் தகவலைச் சேர்க்காமலேயே இறந்தது யார் என்பதை ஒரே வாக்கியத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
“சங்கரன் இறந்துவிட்டதாகத் தெரிவிக்க வேண்டுமாயின், ‘இறந்துபோன சங்கரன், தனது தாயாருடன் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம். சங்கரனின் தாயார் இறந்துவிட்டதைத் தெரிவிக்க, ‘இறந்துபோன தனது தாயாருடன் சங்கரன் அவரது இறுதிக்காலம்வரை திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம் என வீ.சக்திவேல் (தே.கல்லுப் பட்டி) எழுதியிருக்கிறார். இந்த வாக்கியங்களிலும் ‘தனது தாயாருடன்’ என்றும் ‘தனது தாயாருடன் அவரது இறுதிக் காலம்வரை’என்றும் புதிய தகவல்கள் சேருகின்றன.
“சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார் என்று மாற்றலாம். தொல்காப்பியமும் புலிகொல் யானை என்ற தொடரைச் சுட்டும். இது புலியால் கொல்லப்பட்ட யானையா அல்லது புலியைக் கொன்ற யானையா என்ற மயக்கத்தைத் தருகிறது. இதற்குத் தடுமாறு தொழிற்பெயர் என்று பெயர்” என முனைவர் அ.ஜெயக்குமார் சொல்வது இந்தச் சிக்கலை ஒருவாறு தீர்த்துவைக்கிறது. இறந்துபோனது சங்கரன் என்றால், இந்த வாக்கியம் எப்படி அமையும் என்னும் கேள்வி இன்னமும் எஞ்சியிருக்கிறது. ‘இறந்துபோன சங்கரன் என்பவரின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம்.
தங்கள் மேலான கருத்துக்களின் மூலம் இந்த விவாதத்தைச் செழுமைப்படுத்திய அனைவருக்கும் நன்றி. நாம் வாக்கியங்களை அமைக்கும் விதம் குறித்த பரிசீலனையை நமக்குள் ஏற்படுத்துவதுதான் இதுபோன்ற சவால்களின் நோக்கம். ஒரே வாக்கியத்தில்தான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. சொல்லவரும் பொருள் / தகவல் குழப்பமின்றி, பிழையின்றிச் சொல்லப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். எழுவாயை அமைக்கும் இடத்தை இந்தக் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்தாலே பெரும்பாலான வாக்கியங்கள் தெளிவாகிவிடும்.
ஒரு வாக்கியத்தை அமைக்கும்போது, அதன் எழுவாய் (Subject) என்ன செய்கிறது அல்லது என்ன ஆகிறது என்பது பற்றிய குழப்பம் நேரக் கூடாது. எனவே, எழுவாய்க்கான வினை அல்லது விளைவு அல்லது தகவலைக் கூடியவரை அந்த எழுவாய்க்குப் பக்கத்திலேயே அமைத்துவிடலாம்.

என்ன நினைக்கிறது உலகம்?- பாலஸ்தீனர்கள் வந்தேறிகள் அல்ல, நெதன்யாஹு!

மேற்குக் கரையில் உள்ள யூதர்களை இன அழிப்பு செய்ய பாலஸ்தீனர்கள் விரும்புகிறார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியிருக்கிறார். இன ஒழிப்பு பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு உண்மையாகவே தெரிந்துகொள்ள விரும்பினால், இஸ்ரேலில் வசிக் கும் பாலஸ்தீனக் குடிமக்களிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் பகுதியில் வசிக்கும் 85% பாலஸ்தீனர்கள், 1948-ல் நடந்த ‘நக்பா’ எனும் நிகழ்வின்போது தங்கள் வசிப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப் பட்டவர்கள் - அவர்கள் யூதர்கள் அல்ல எனும் ஒரே காரணத்துக்காக!
இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்களை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் இஸ்ரேலியர் களுடன் ஒப்பிட்டு நெதன்யாஹு சமீபத்தில் பேசியிருப்பது தவறான விஷயம் மட்டுமல்ல பகுத்தறிவு, வரலாறு, சர்வதேசச் சட்டத்தின் கீழான பொறுப்பு ஆகியவற்றை அவர் புறந்தள்ளியிருக்கிறார் என்பதைக் காட்டும் விஷயம் அது. எத்தனை பாரபட்ச நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டாலும், இதுதான் எங்களின் (பாலஸ்தீனர்களின்) சொந்த நிலம் என்றும் நாங்கள் அங்குதான் வசிப்போம் என்றும் நெதன்யாஹு புரிந்துகொள்ள வேண்டும். முதலில், இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் ஒன்றும் விசாவோ குடியுரிமையோ கேட்டு இஸ்ரேலை அணுகிய வெளிநாட்டுக் குடியேறிகள் அல்ல. மாறாக, இஸ்ரேல்தான் அவர்களிடம் சென்றது. அவர்கள் பூர்வகுடிகள். ‘ஜியோனிஸ்ட்’ இயக்கம் உருவாக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்பிருந்தே அங்கு வசிப்பவர்கள்.
நாங்கள் ஒன்றும் இஸ்ரேலியக் குடியேறிகள் அல்ல நெதன்யாஹு அவர்களே! வெளிநாட்டு நிலத்தைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொள்பவர்களுடன் எங்களை ஒப்பிட்டுப் பேசுவது, யூதர்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று நீங்கள் நம்புவதைத்தான் காட்டுகிறது. இஸ்ரேலில் வசிக்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், உங்கள் இனவெறி மனப்பான்மையையும், திட்டமிட்டு நடத்தப்படும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள் - இஸ்ரேலில் வசிக்கும் யூதர் அல்லாதோரை மட்டும் குறிவைக்கும் பல சட்டங்களையும்தான்.
இன ஒழிப்பின் அர்த்தத்தையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறார் நெதன்யாஹு. இன ஒழிப்புக் கொள்கையின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினால், அழிக்கப்பட்ட பாலஸ்தீனக் கிராமங்களான இம்வாஸ், யாலு, பெய்ட் நியூபா பகுதிகளில் அமைக்கப்பட்ட ‘கனடா பார்க்’ நினைவிடத்தை அவர் சென்று பார்க்கலாம். மெனஹெம் பிகின், யித்ஷாக் ஷாமிர் போன்ற இஸ்ரேல் ‘நாயகர்’கள் தொடர்பான ஆவணங்களையும் அவர் பார்க்கலாம்.எத்தனை ட்வீட்டுகள், காணொளிகளை வேண்டுமானாலும் இஸ்ரேலியர்கள் பரிமாறிக்கொள்ளலாம். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளைக் காலனிமயமாக்குவதற்கு நெதன்யாஹுவுக்குப் பெரும் ஆதரவும் கிடைக்கலாம். என்ன செய்தாலும், சொந்த நிலத்திலேயே அந்நியர்களாக எங்களை உணரச் செய்ய மட்டும் அவரால் முடியவே முடியாது!

மலேரியாவை வெல்ல இலங்கையை கவனியுங்கள்!

Image result for malariaஇலங்கையில் மலேரியா நோய் ஒழிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக உள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இலங்கையின் இந்தச் சாதனையை அங்கீகரித்துள்ளது. ஒரு நாட்டில், குறிப்பிட்ட நோய் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு யாரையும் தாக்கவில்லை என்றால் அந்த நோய், அந்த நாட்டில் ஒழிந்துவிட்டதாக உலக நலவாழ்வு நிறுவனம் அறிவிக்கும். அதன்படி, இலங்கையில் அக்டோபர் 2012-ல் மலேரியா காய்ச்சலில் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு யாரும் பாதிக்கப்படவில்லை.
உள்நாட்டுக்குள்ளே மலேரியா தொற்று இல்லை என்றாலும், மலேரியாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்துவிடாமல் தடுக்க இலங்கை முயன்றுவருகிறது. அங்கே 2013, 2014, 2015 ஆண்டுகளில் முறையே 95,49, 36 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாமும் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவை. வெளிநாட்டவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனைகள் நடத்துவது தற்போது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மலேரியா கிருமிகள் பரவாமல் முன்னதாகத் தடுத்தும், கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தும் இலங்கை செய்த தீவிரப் பணி இந்த நோயை ஒழிக்க உதவியிருக்கிறது. வீடு வீடாகச் சென்று பரிசோதித்தது, அதிக நோய்த் தொற்று உள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனைகளை அனுப்பியது, தரமான கண்காணிப்பு முறைகள், மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களையும் மலேரியாவுக்கு எதிரான பணிகளில் ஈடுபடுத்தியது என்று இலங்கை இந்நோய் ஒழிப்புக்கு உதவியுள்ளது. இலங்கையின் அரசுத் துறையும் தனியார் துறையும் மலேரியாவை ஒழிக்க இணைந்து பணியாற்றியுள்ளன. மலேரியா நோய் இருக்கிறதா என்பதை 100% பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர். கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல்வேறு முறைகளைக் கையாண்டுள்ளனர். தீவிர மலேரியா பாதிப்பு உள்ள இடங்களில் கொசுக்களிலிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வலைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, 1963-ல் மலேரியாவை ஒழிக்கும் நிலையை இலங்கை நெருங்கியது. அப்போது வெறும் 17 பேர்தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், பாதுகாப்பு முறைகளை முன்னதாக நிறுத்தியதாலும் தடுப்பு மருந்துகளின் ஆற்றலைத் தாக்குப்பிடிக்கும் நிலையை மலேரியா கிருமிகள் அடைந்ததாலும் 1980-களில் மலேரியாவால் பாதிக்கப்படுவது மீண்டும் அதிகரித்தது. மலேரியாவை ஒழிப்பதற்கான அப்போதைய இயக்கம் தோற்றதற்குத் துல்லியமான காரணங்கள் தெரியவில்லைதான். ஆனாலும், உள்நாட்டில் மலேரியாவைப் பரப்பிய கிருமிகள் அப்போது தரப்பட்ட மருந்துகளைத் தாக்குப்பிடித்து வளர்ந்துவிட்டன என்பது ஒரு முக்கியக் காரணம்.
ஆனால், 2000-ல் நிலைமை மீண்டும் சாதகமாகத் திரும்பியது. மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்தது. 1960-க்குப் பிறகு மலேரியாவை ஒழித்த நாடுகளில் இலங்கைக்கு 34-வது இடம். 2015-ல் மாலத்தீவு மலேரியா இல்லாத நாடு என்று நற்சான்று பெற்றது. அர்ஜெண்டினாவும் கிர்கிஸ்தானும் அத்தகைய நற்சான்றை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவில் மலேரியாவை ஒழிப்பது இன்னும் பெரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது. இலங்கையைவிட இந்தியாவின் மலேரியா பிரச்சினை அளவில் பெரியது. சிக்கலானது. ஆனாலும்கூட இலங்கையிடமிருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. மலேரியாவால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் உயிரிழப்பதாகச் சொல்கின்றன கள ஆய்வு அறிக்கைகள். இனியும் நாம் இப்படியே கடக்கலாகாது!

மாணவர் ஓரம்: பாராலிம்பிக்கின் தந்தை!



பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் ஞாயிறு அன்று நிறைவுபெற்றன. ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைவிட பாராலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு அதிகப் பதக்கங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. மாற்றுத் திறனாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்த நிகழ்வு இது. பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர்களில் பலர், லுட்விக் குட்மேனின் பெயரை ஒரு கணமேனும் நன்றியுடன் நினைத்திருப்பார்கள். மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனியாக ஒரு ‘இணை ஒலிம்பிக்’ போட்டிகள் நடக்க வழிவகுத்தவர் அவர். ஜெர்மனியில் வாழ்ந்த யூதரான குட்மேன், புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர்.
ஹிட்லரின் நாஜிப் படைகளின் அடக்கு முறைகளிலிருந்து தப்பி, பிரிட்டனுக்குச் சென்ற அவர், பக்கிங்ஹாம்ஷைரில் ஸ்டோக் மாண்டிவில் மருத்துவமனையைத் தொடங்கினார். முதுகுத்தண்டில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தார். அந்த நிலையில் இருப்பவர்களில் பலர் நம்பிக்கையின்மையாலும் சரியான பராமரிப்பு இல்லாமலும் உயிரிழந்த நிலையில், தனது துணிச்சலான அணுகுமுறை மூலம் சிறப்பான சிகிச்சையளித்தார் குட்மேன். அதற்கு அவர் பயன்படுத்தியது விளையாட்டு. சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஈட்டி எறிதல், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் கலந்துகொண்ட நோயாளிகள் உடலிலும், மனதிலும் பலம் பெற்றனர்.
1948-ல் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய அதே நாளில், அவரது மருத்துவமனை வளாகத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. சக்கர நாற்காலிகளுடன் நோயாளிகள் அதில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். அவரது முயற்சியின் காரணமாக, 1960-ல் முதன்முதலாக பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கின. சக்கர நாற்காலியில் அமர்ந்த மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டனர். 1976-ல்தான் வேறு உடல்குறை மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.