அரசியல் வானில் போலி பட்டங்கள்!

  • ஸ்மிருதி இரானி - ஜிதேந்திர சிங் தோமர்
    ஸ்மிருதி இரானி - ஜிதேந்திர சிங் தோமர்
  • வினோத் தாவ்டே - ராம்சங்கர் கத்தாரியா
    வினோத் தாவ்டே - ராம்சங்கர் கத்தாரியா
ஏதும் தெரியாத அக்காலக் கவிஞர், ‘மலை வாழை அல்லவோ கல்வி, விலைபோட்டு வாங்கவா முடியும்?’ என்று பாடிவைத்தார். இன்றைக்கு லஞ்சமும் ஊழலும் நுழைய முடியாத துறைகளே இல்லை. ‘அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்றான் மேலைநாட்டு அறிஞன். நம் நாட்டில் பலரும் நேரத்தை வீணாக்குவதில்லை.
அயோக்கியத்தனத்திலும் வடிகட்டியது ஒன்று உண்டு என்றால், படிக்காமலேயே பட்டம் வாங்குவதும் அதை ஊரறியத் தம்பட்டம் அடித்துக்கொள்வதும்தான். நம் நாட்டு அரசியல்வாதிகள் அதில் கைதேர்ந்தவர்கள். ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்றொரு தனிச் சிறப்பும் இதில் உண்டு.
இன்றைய இந்தியாவில் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிட ‘குறைந்தபட்சத் தகுதி’ என்று எதுவுமே கிடையாது. ‘18 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும், திவாலாகியிருக்கக் கூடாது, பைத்தியமாக இருக்கக் கூடாது (வாக்காளர்கள் இருக்கலாம்!)’ என்ற குறைந்தபட்ச நிபந்தனைகளோடு சரி.
குற்ற வழக்குகளில் கடும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத் திருத்தம் பின்னாளில் வந்திருக்கிறது. இவ்வளவுதான் அரசியல்வாதிகளைத் தடுத்து நிறுத்தும் நிபந்தனைகள். அப்படியும் சிலர் தங்களுடைய கல்வியறிவுக் குறைவைப் பெரிய இழப்பாகக் கருதி, அந்தக் குறையைத் தாங்களாகவே தீர்த்துக்கொண்டுவிடுகிறார்கள்.
மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்ப்பது இப்போதைய நடைமுறை; அதையே ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் மாநிலத்திலும் மத்திய அரசிலும் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான போலி பட்டதாரிகள் பிடிபடுவார்கள் என்பது நிச்சயம்.
அரசியல் தலைவர்கள் சிலர் மீது இப்போது போலி பட்டதாரிகள் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே, மக்களுடைய கவனம் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது.
ஸ்மிருதி இரானி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானியைப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தபோதே லட்சக்கணக்கான புருவங்கள் உயர்ந்தன. காரணம், அவர் தொலைக்காட்சித் தொடர் நடிப்பால் அறியப்பட்டவரே தவிர, படிப்பால் அல்ல. பட்டப் படிப்பைக்கூட முடிக்காத அவரைப் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களையும், கல்வியாளர்களையும், சிந்தனையாளர்களையும் சந்திக்க வேண்டிய இடத்தில் அமர வைத்தார் மோடி. நம் நாட்டுக் கல்வியைத் தரம் உயர்த்தி, உலக அரங்கில் ஏற்றி வைக்க பாரதிய ஜனதா கட்சியில் கிடைத்த அதிகபட்சத் தகுதி உள்ள வேட்பாளர் ஸ்மிருதி இரானிதான் என்றால், நாடு என்ன செய்ய முடியும்?
ஸ்மிருதி இரானியைக் கல்வி அமைச்சராக்கியவுடன் (மனிதவள மேம்பாடு என்றெல்லாம் சுற்றி வளைத்தாலும் அந்தத் துறை கல்வி தொடர்பானதுதான்) முதலில் எதிர்த்தவர் மோடியின் தீவிர ஆதரவாளரான மது கிஷ்ட்வர்தான். ‘பள்ளியிறுதி வகுப்பை மட்டுமே பூர்த்திசெய்த அவரை நியமிப்பதா, பாஜகவில் படித்தவர்கள் வேறு யாரும் இல்லையா?’ என்று உரத்துக் குரல் எழுப்பினார். மோடி மவுனம் சாதித்தார்.
2004-ல் டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது தனது கல்வித் தகுதியை ‘பி.ஏ. 1996 டெல்லி பல்கலை. (அஞ்சல் வழி)’ என்று குறிப்பிட்டிருந்தார் ஸ்மிருதி. 2014-ல் அமேதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டபோது ‘பி.காம் முதலாண்டு, பார்ட்-1 டெல்லி பல்கலை. (அஞ்சல் வழி) 1994’ என்று குறிப்பிட்டிருந்தார். பி.ஏ.வா, பி.காமா? படித்தாரா, முடித்தாரா? எதுவும் தெரியவில்லை.
கவியின் வாக்கு பலித்தது
‘காலேஜுக்குப் போகாதவன் கல்வி மந்திரி ஆனான், காபி ஓட்டல் வச்சிருந்தவன் உணவு மந்திரியானான்’என்று தமிழத் திரைப்படப் பாடலாசிரியர் 40 ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுதி வைத்துவிட்டார். கவிஞன் வாக்கு பலித்துவிட்டது!
ஆமர் கான் என்ற பத்திரிகையாளர் ஸ்மிருதி இரானிக்கு எதிராகக் கொடுத்த புகாரை, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஆகாஷ் ஜெயின் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆகஸ்ட் இறுதியில் சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை தொடங்கும். 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, வேட்பு மனுவில் உண்மையை மறைத்து தவறான தகவலைத் தெரிவித்தால் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரொக்க அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
பதவியிழந்த தோமர்
டெல்லி சட்டப் பேரவைக்கு ஆம் ஆத்மி கட்சி (ஆ.ஆ.க.) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட அமைச்சராகப் பதவியேற்ற ஜிதேந்திர சிங் தோமர் ‘பி.எஸ்சி., எல்.எல்.பி.’ பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். பொதுவாழ்வில் தூய்மையை முன்னிறுத்தப் புறப்பட்டிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், அவரையே சட்ட அமைச்சராக்கினார்.
பிஹார் மாநிலம் பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக தோமர் குறிப்பிட்டிருக்கிறார். தோமரைக் கைது செய்த டெல்லி போலீஸார், அவர் படித்ததாகச் சொன்ன கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் ‘கல்விச் சுற்றுலா’ சென்றிருக்கிறார்கள். இதுவரை கிடைத்த தகவல்களின்படி அவருடைய எல்.எல்.பி. பட்டம் அசல், பி.எஸ்சி. பட்டம்?
பதவி இழந்தாலும் சிறையில் அடைக்கப்பட்டாலும் தோமர் ‘நான் குற்றமற்றவன்’ என்றே கூறுகிறார். விரைவிலேயே உண்மையை நிரூபித்து, முகிலைக் கிழித்து வெளிவரும் முழு நிலவைப் போல வெளியே வருவேன் என்றிருக்கிறார். அப்போதும் கிழிப்பதைவிட மாட்டார் போலிருக்கிறது.
வினோத் தாவ்டே
மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக-சிவசேனைக் கூட்டணி சார்பில் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார் வினோத் தாவ்டே. அவர் புணேயில் உள்ள தியானேஸ்வர் வித்யா பீடத்தில் 1980
முதல் 1984 வரை ‘படித்து’, மின்னணுவியலில் பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் இல்லை. இனி, பல்கலைக்கழகத்தை நடத்தக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் 2002-ல் தடை விதித்தது. 2005-ல் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
பள்ளியிறுதி வகுப்பை முடித்த சில காலத்துக்கெல்லாம் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும், அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று தெரியும் என்றும், அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும் தாவ்டே இப்போது கூறுகிறார். ‘சான்றிதழ் களைத் திருத்தவில்லை, வேறு பல்கலைக்கழகத்தில் படித்ததாகப் பொய் சொல்லவில்லை, பட்டதாரி என்ற வகையில் பட்டதாரி தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்ளவில்லை, வேறு எந்தச் சலுகையையும் அனுபவித்ததில்லை’ என்கிறார் தாவ்டே.
அங்கீகாரம் இல்லாத பல்கலைக் கழகம் அளிக்கும் பட்டத்தை எப்படிப் போட்டுக்கொள்வது? இது முறைகேடு இல்லை என்று மனசாந்தி அடைய முடியுமா? தாவ்டேயைப் போல அங்கே படித்த எத்தனை பேர் இப்போது எங்கெங்கே, என்னென்ன பதவிகளில் இருக்கிறார்களோ என்ற கேள்விகள் எழுகின்றன.
ராம்சங்கர் கத்தாரியா
மத்திய அமைச்சரவையிலேயே ஸ்மிருதி இரானியின் துறையில், ‘இணை’அமைச்சராக இருக்கும் ராம்சங்கர் கத்தாரியா இந்திப் பேராசிரியர். கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றவர். ஆக்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பி.ஏ., எம்.ஏ. மதிப்பெண் சான்றிதழ் களில் திருத்தம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இப்படி ஒரு குற்றச்சாட்டாவது இல்லாவிட்டால் எப்படி ‘இணை’ஆக முடியும்?
படித்துவிட்டுத்தான் நாட்டுக்குத் தலைவராக வேண்டும் என்பது கட்டாய மில்லை. படிக்காத மேதைகளை வரவேற்கத் தயங்காத நாடு இது. படித்ததாக வேட்பு மனுவில் குறிப்பிட்டு மாட்டிக்கொள்வானேன் என்பதுதான் கேள்வி!

ஒரு நதியின் வாக்குமூலம்: பாம்புபோல் வளைந்து செல்லும் காளிங்கராயன்!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகுதான், சமவெளியில் பவானியும் மோயாறும் இணையும் இடத்தில் பவானி சாகர் அணை கட்டப்பட்டது. ஆனால், 13-ம் நூற்றாண்டிலேயே காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் திட்டம் கட்டப்பட்டுவிட்டது.
காளிங்கராயன் அணைக்கட்டு, பவானி ஆறு மற்றும் காவிரியுடன் கலக்கும் பகுதிக்கு அருகே (தற்போதைய பவானி நகரம்) கட்டப் பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு மூன்று பகுதிகளைக் கொண்டது. அணையின் முதன்மைப் பகுதி 757 அடியும், மத்திய பகுதி 854 அடியும், இறுதிப் பகுதி 13,500 அடியும் நீளம் கொண்டுள்ளது. நவீன வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இந்த அணையில் கட்டப்பட்ட காளிங்க ராயன் வாய்க்கால், சிறந்த நீர் மேலாண் மைக்கான இயற்கை சார்ந்த அறிவியல் திட்டமாகப் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ, இதை உலகின் பழமையான வாய்க்கால்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.
வாய்க்காலின் தலை மதகு முதன்மை அணைக்கட்டின் தென்கோடியில் உள்ளது. மட்டச் சரிவு மற்றும் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் இயற்கை தொழில்நுட்பம் மூலம் இந்த வாய்க்கால் தாழ்வான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது. வாய்க்காலின் நீளம் 90 கி.மீ. இந்த வாய்க்கால் மூலம் 17,776 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
அரசன் எடுத்த சபதம்
அணை மற்றும் வாய்க்கால் கட்டப் பட்ட வரலாறு குறித்து வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன் கூறும் போது, "சத்தியவர்மன் வீரபாண்டி யனின் பிரதிநிதியாக கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காளிங்கராயன். இந்தக் கால்வாயை அவர் 13-ம் நூற்றாண்டில் 1270 - 1282 கால கட்டத்தில் கட்டியிருக்கலாம். வாய்க்கால் திட்டம் பற்றி பல்வேறு செவிவழிச் செய்திகள் நிலவினாலும், பெரும் பாலும் சொல்லப்படுகிற வரலாறு இதுதான். காளிங்கராயனின் சொந்த ஊர் வெள்ளோடு. அவர் வாழ்ந்த பகுதிகள் மேடானவை. அதனால், அங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டுமே.
தண்ணீர் பற்றாக்குறையால் சரியான விவசாயம் இல்லை. புன்செய் பயிர்களை மட்டுமே விளைவிக்க முடிந்தது. ஒருமுறை காளிங்கராயன் தன் மகனுக்கு பெண் கேட்க தஞ்சைப் பகுதி யில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக் குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டின் சமையற்காரர் இவர்களுக்கு விருந்து சமைக்க பழைய அரிசி போடுவதா? புதிய அரிசி போடுவதா? என சகோத ரியின் குடும்பத்தினரிடம் கேட்டிருக் கிறார். அதற்கு, 'நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாய் இருந்தால் என்ன?' என்று கேலி செய்திருக்கிறார்கள்.
கனவில் வந்த பாம்பு
கோபமடைந்த காளிங்கராயன், தனது தேசத்தின் புன்செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுக்கிறார். பவானி ஆற்றிலிருந்து தனது தேசமான மேட்டுப் பகுதிக்கு கால்வாய் வெட்ட திட்டமிடுகிறார். பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்தும் அது சாத்தியம் இல்லை என்று பொறியாளர்கள் கைவிரிக்கிறார்கள்.
ஒருநாள் காளிங்கராயனுக்கு கனவு வருகிறது. அதில், ஒரு பாம்பு மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து முன்னேறு கிறது. அப்போதுதான் தண்ணீரையும் அப்படி கொண்டு செல்லலாம் என்று காளிங்கராயனுக்கு பொறி தட்டியது. அதன்படி, தனது சொந்த செலவில் வாய்க்காலையும் பாம்புபோலவே வளைத்து நெளித்து கட்டி முடிக்கிறார். அவர் சபதம் எடுத்தபடி மேட்டுப் பகு தியை நோக்கி பாய்ந்து வந்து சேர்ந்தது பவானி தண்ணீர். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாயின.
நாட்டைவிட்டு வெளியேறிய அரசன்
காளிங்கராயன் 'சாத்தந்தை' என்ற குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப் படுகிறது. ஆனால், இந்த வாய்க்காலை வெட்ட பெரும்பாலும் உதவியர்கள் தலித் சமூகத்தினரே. மேலும், வாய்க்காலை கட்டும்போது உதவாத தன் குலத்தினர் எந்த விதத்திலும் வாய்க்காலை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். அப்போது, சிலர் காளிங்கராயனின் சொந்த உபயோகத் துக்காக வாய்க்காலை வெட்டினான் என்று பேசினார்கள். அதைக் கேட்ட காளிங்கராயன், நான் மற்றும் எனது சந்ததியினர் எவரும் வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் என்று சொல்லி, தனது நாட்டை விட்டு வெளியேறி ஊத்துகுளிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.
இந்த வாய்க்காலை கோண வாய்க் கால், பழைய வாய்க்கால், காரை வாய்க் கால் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இன்றும் இந்த வாய்க்கால் சற்றும் சிதிலமடையாமல் இருப்பதே அன்றைய தரமான கட்டுமானத்துக்கு சாட்சி" என்கிறார் இளங்கோவன்.
*
17-ம் நூற்றாண்டில் கொடிவேரி கிராமத்தில் பவானி ஆற்றில் மைசூர் அரசர்களால் கட்டப்பட்ட கொடிவேரி அணைக்கட்டும் மிகப் பெரிய சாதனையே. இன்றைக்கும் ஏராளமான விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த அணை. இதன் நீளம் 496 அடி. நீர்ப் பிடிப்பு பகுதிகள் 1,900 சதுர மைல்கள். அங்கிருந்து வினாடிக்கு 1,22,066 கன அடி தண்ணீர் வரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அணையின் வலது பக்கமிருந்து தடப்பள்ளி வாய்க்காலும் (77 கி.மீ. நீளம்), இடது பக்கமிருந்து அரக்கன்கோட்டை வாய்க்காலும் ( 32 கி.மீ. நீளம்) பிரிகின்றன. இரு வாய்க்கால்களிலும் மொத்தம் 655 மதகுகள் கட்டப்பட்டுள்ளன. இரு வாய்க்கால்கள் மூலம் தற்போது 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 1948-49 ஆண்டில் இந்த அணையின் முழு நீளத்துக்கும் இரண்டு அடி உயரத்தில் கதவுகள் பொருத்தப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில் அணையின் உயரம் இரண்டரை அடி உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கிறது?

1975 ஜூன் 25-26-ல் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் 40-வது ஆண்டு நிகழ்ச்சியையொட்டி இந்தக் கேள்வி என்னைக் குடைகிறது: எந்த அளவுக்கு ஜனநாயகம் இன்றைக்குப் பாதுகாப்பாக இருக்கிறது?
ரேபரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்றது செல்லாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பதவி வகிப்பது சரியா என்று இந்திரா காந்தியைக் கேட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நாடெங்கும் ஆயிரக் கணக்கான அரசியல் தொண்டர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசார ணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போலீஸ்காரர்களின் துணையோடு ஆயிரக் கணக்கான ஆண்கள் சஞ்சய் காந்தியாலும் அவருடைய அடியாட்களாலும் கட்டாய கருத்தடைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தியும், அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தியும் சஞ்சயின் சிறு ஆதரவாளர்கள் கும்பலும் நாட்டின் முழு நிர்வாகத்தையும் அதிகாரத்தையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டவுடன் நாடு முழுக்க அச்சம் பரவியது. “இந்திய அரசியல் சட்டம் அளிக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என்ற அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பு வெளியானபோது, அறிவுஜீவிகளில் பெரும்பாலான வர்களும் பொதுக்கருத்துகளை உருவாக்கும் இடங்களில் இருந்தவர்களும் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் செல்ல உரிமை இல்லை என்ற அரசின் அறிவிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதக் கவலையையும் ஏற்படுத்தவில்லை.
அன்றைய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோதச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் சட்டபூர்வ அங்கீகாரம் அளித் ததுதான் வெட்கப்பட வேண்டிய செயலாக இருந்தது. 1976-ல் நடந்த ‘ஏ.டி.எம்., ஜபல்பூர்’ வழக்கில் ‘அரசின் முடிவு சரியே’ என்று நான்கு நீதிபதிகள் ஆதரித்தனர். நீதிபதி எச்.ஆர். கன்னா மட்டுமே அந்த அறிவிப்பு, சட்டப்படியான ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு எந்த அளவுக்கு ஊறு செய்யும் என்று உணர்ந்து, மாற்றுத் தீர்ப்பை வெளியிட்டார். அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் மட்டுமே தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார். ஆனால், பெரும்பாலான நீதிபதிகள் ஆதரித்ததால், அடிப்படை உரிமைகள் பறிப்பு செல்லாது என்று 9 உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் தள்ளுபடியாயின.
‘அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாக மறுக்கும் அளவுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்ற அரசின் கூற்றை உச்ச நீதி மன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
போர்க்காலத்தில் நாட்டு மக்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்று இரண்டாவது உலகப் போரின்போது பிரபுக்கள் அவை அளித்த தீர்ப்பையே அவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டனர். பெரும்பான்மை நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புக்கு ஆதரவாகப் பற்றி நின்ற நிலையை, பிரிட்டிஷ்காரர்களே பின்னாளில் தூக்கி எறிந்துவிட்டனர். அந்த வழக்கிலும் மாற்றுத் தீர்ப்பு அளித்த அட்கின் பிரபு, தன்னுடைய சகோதர நீதிபதிகள், (அரசியல்) நிர்வாகிகளைவிடத் தங்களை அதிகபட்ச நிர்வாகிகளாகக் கருதிவிட்டனர் என்று மனம் வெதும்பிக் கூறினார். ‘உள்துறை அமைச்சகத்தின் நாற்காலிக்கு அடியில் சிக்கிக்கொண்ட சுண்டெலி போல நீதித் துறை ஆகிவிட்டது’ என்று லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்டேபிள் வேடிக்கையாகக் குறிப் பிட்டார்.
1976-க்கு முன்னால் பிரிட்டிஷ் நீதிமன்றங்களே நிராகரித்த ஒரு நிலையை இந்திய உச்ச நீதிமன்றம் பின்பற்றி, நெருக்கடி நிலையை நியாயப்படுத்தியது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. ஒரு தலைமுறையையே கொந்தளிக்கவைத்த விஷயங்கள் இவையெல்லாம்.
ஆனால், இவை குறித்தெல்லாம் இன்றைய இந்தியர்களில் எவரேனும் இப்போது கவலைப்படுகிறார்களா? பேச்சு சுதந்திரத்தையும் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் நெரிக்கும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க இன்றைக்குத் தயாராக இருப்போர் எத்தனை பேர்? அட, 26.06.1975 தொடங்கி 23.03.1977 வரையிலான 21 இருண்ட மாதங்களில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதைப் பதிவுசெய்யாமல் இன்னமும் ஏன் நம்முடைய வரலாற்றுப் புத்தகங்கள் மவுனம் சாதிக்கின்றன?
மாறியது என்ன?
நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு, இங்கே ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டப் பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடப்பது மட்டுமே இங்கு ஜனநாயக நடவடிக்கையாக இருக்கிறது. தேர்தலிலும்கூடப் பண பலம், அடியாள் பலம், சாதிகளின் ஆதிக்கம், மதவாதம், ஆதிக்க சக்திகளின் செல்வாக்கு ஆகியவையே முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களால் செயற்கைக் கோள்களைப் பறக்கவிட முடிகிறது, கோடிக் கணக்கான மக்களின் வறுமையை, பசியை, தாகத்தை, சுகாதாரமற்ற வாழ்க்கையைப் போக்க முடியவில்லை.
ஊழல் பேர்வழிகளான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடைய துணையோடு பெருந்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன. அவர்களைத் தேச பக்தர்கள் என்று அழைக்கின்றனர். இப்படி இயற்கை வளங்களைச் சூறையாடாதீர்கள் என்று தடுக்கும் சமுதாயத் தலைவர்களை, சமூக ஆர்வலர்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அடித்து நொறுக்கி, கைது செய்து சிறையில் அடைத்து துரோகிகள் என்று பட்டம் சூட்டுகின்றனர். வளர்ந்து வரும் பெரும்பான்மையினவாதமும், வகுப்புவாதமும் இந்திய ஜனநாயகத்துக்கு இதுவரை இருந்திராத அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றன.
சூட்-பூட் கி சர்க்கார்
இன்றைக்கு மோடி அரசு மீது முன்வைக்கப்படும் சூட்-பூட் கி சர்க்கார் என்ற அடைமொழி எல்லாப் பெரிய அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தும். பெருந்தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் நாட்டின் பொருளாதாரமும் வணிகமும் இருக்கின்றன. எல்லா மாநில அரசுகளுமே மக்களுடைய எதிர்ப்பைக் கொடூரமாக ஒடுக்க ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளன. காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை. தேசவிரோதச் செயல் தடுப்பு, தேசப் பாதுகாப்பு போன்ற சட்டங்களைப் பயன்படுத்த அவை தயங்குவதில்லை. விவசாயிகள், பழங்குடிகள், மாணவர்கள், மகளிர் என்று எந்த அமைப்பினர் கிளர்ச்சி செய்தாலும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்கள் இப்போது போலீஸ் சர்க்கார்களாக மாறிவிட்டன.
படித்தவர்களின் அலட்சியம்
ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. நகர்ப்புற படித்த மக்களும் சொந்தத் தொழில் செய்வோரும் இதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தி யாவின் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசிக்கும் கோடிக் கணக்கான இந்தியர்கள் கோபத்தில் கொதித்துக்கொண் டிருக்கிறார்கள். புதிய சுரங்க அகழ்வுகள், அணை கட்டும் திட்டங்கள், வன அழிப்பு, தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடல் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் அன்றாடம் லட்சக் கணக்கான சிறு சிறு மோதல்கள் நடந்துவருகின்றன. செய்தி ஊடகங்கள் அவை அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. வளர்ச்சி என்பது கவுரவம், ஜனநாயகம் ஆகியவற்றுடன் ஏற்படும்வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்துள்ளனர்.
நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது டெல்லி திஹார் சிறையிலிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபளானி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்களுடைய நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கு ஏற்படுத்தியது தான் ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம்’(பி.யு.சி.எல்.). ஜனநாயகத்துக்கு விரோதமான சக்திகளும், ஆளும் கட்சியின் அதிகார வட்டத்துக்குள் இருக்கும் எடுபிடிகளும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்கிவிடக் கூடாது என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த இயக்கம்.
நெருக்கடி நிலை காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளான ஆயிரக் கணக்கான மக்களை பி.யு.சி.எல். இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறது. அறிவிக்கப்படாத இரண்டாவது நெருக்கடி நிலை ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் கடமை பி.யு.சி.எல்லுக்கும் இதைப் போன்ற சகோதர அமைப்புகளுக்கும் இருக்கிறது. நம்முடைய ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை எல்லோருக்கும் கிட்டும் வகையிலும் எல்லா ஜனநாயக ஆதரவு சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
பல்சாக் தன்னுடைய நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், “நீதித் துறையை அவநம்பிக்கையோடு பார்ப்பதில் தொடங்கு கிறது ஒரு சமூகத்தின் முடிவு; இப்போதைய அமைப்புகளின் மாதிரியை உடையுங்கள், வேறு அடிப்படையில் அதைப் புதிதாக உருவாக்குங்கள். ஆனால், அதை நம்புவதை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்” என்று. எந்த ஒரு சமூகத்திலும் நீதித் துறை ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய இந்தியாவில் அரசியல் சட்டம் தனக்களித்த கடமையிலிருந்து இந்திய நீதித் துறை நழுவுவதாகவே தோன்றுகிறது.