மக்கள் கலாச்சாரத்துக்கு (சினிமா) வழிகாட்டும் ஒரு ஊடகமா? : மனித கலாச்சாரம்

இன்றைய பொதுப்புத்தி இப்படித்தான் கருதுகின்றது. மூலதனத்தின் மந்தைக் கூட்டமாக, மனிதன் இருக்கும் வரை, ரசனை மட்டகரமானதாக மாறிவிடுகின்றது. மனிதனை மூலதனத்தின் அடிமையாக இருக்க, மட்டகரமான ரசனை உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதனால் சினிமாவின் பின்னால், நாடகத்தின் பின்னால் மயங்கி, அதன் உறுப்புகளாகவும் மாடல்களாகவும் மாறி, வாழ்க்கையை அதற்கூடாக அணுகி வாழ முனைகின்றனர்.
இந்த சினிமா என்பது, சந்தைக் கலாச்சாரத்தின் விளம்பர ஊடகம் தான். சந்தைக்கு பாய்விரித்து தொழில் நடாத்தும் விபச்சாரத் தரகுத் தொழில் தான், இந்தக் கலை. பாலியல் விபச்சாரத்தை தொழிலாகவே நடத்தும் மாமாக்களின் அதே கலை நேர்த்தி, இந்த சினிமா என்ற கலைக்கும் உண்டு.
இந்த சினிமா பற்றிய விவாதம் மிகப்பெரியது. நாம் குறிப்பாக மட்டும் ஆராய்வோம். பிரதேசத்துக்கு பிரதேசம், சூழலுக்கு ஏற்பவும் சினிமா பற்றிய மதிப்பீடுகள் மாறுபடுகின்றது. மேற்கு சினிமா கீழைத்தேய நாடுகளின் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், கருத்துரைக்கப்படுவதும் உண்டு. இதே போல் தான் கீழைத்தேய சினிமா பார்க்கப்படுகின்றது.
சினிமா உள்ளடக்கமும், அதன் ஆன்மாவும் எப்படி எந்த வழியில், கலைத்துவம் என்ற பெயரில் விபச்சாரமாகவே இருக்கின்றது என்பதை பார்த்தோம். கலை பற்றிய சமூகத்தின் விபச்சார நிலை தான், அதையே சமூக ரசனையாக்குகின்றது. மறுபக்கத்தில் சமூகத்தை வழிநடத்த முடியாத நிலைக்குள், சமூகம் தாழ்ந்து சீரழிந்துவிடுகின்றது. மேலிருந்து திணிக்கப்படும் உலகமயமாதல் நிகழ்ச்சிகளை, கீழ் இருந்து எதிர்கொள்ள முடியாது சமூகம் திணறுகின்றது.
சமூகம் தான் கொண்டிருந்த கடந்த கால அறிவுகள், நம்பிக்கைகள், வழிகாட்டல்கள் எதுவும் இதன் முன்னால் செயலற்றதாக்கப்படுகின்றது அல்லது இழிவாக்கப்படுகின்றது. சமூகம் மீதான தனது சுய நம்பிக்கையைக் கூட, சமூகம் தன்னளவில் இழந்து விடுகின்றது. தனது சொந்த வழிகாட்டல் மீதே நம்பிக்கையை இழக்கின்றது. மேலிருந்து இடியாக சமூகம் மீது இறங்கும் சமூகச் சிதைவை எதிர்கொள்ளும் ஆற்றல் என்பது, சமூகத்தின் கீழ் இருந்து அதை ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டும். மேலிருந்து சமூகத்துக்குள் வருவது வெளிப்படையானது. குவிந்த பணமும் அது வக்கரிக்கும் அதன் பண்பாடும் தான், அதாவது அதன் சொந்த வக்கிரம் தான் மேலிருந்து கீழ் வருகின்றது. கீழிருப்பதோ வறுமையும் மனித அவலமும், கையாலாகாத்தனமுமே.
இங்கு வெளிப்படுவது நேர்ரெதிரான இரண்டு கலாச்சாரங்கள். மேலே பணத் திமிர் கலாச்சாரமாகவும், கீழ் இருப்பது தாழ்வு மனப்பான்மையும், அடிமை மனப்பாங்கும், கையாலாகாத்தனமுமாகும். இதற்கு ஏற்ப மேலுள்ளதை உள்வாங்குவது அல்லது ஏதோ ஒரு வகையில் திருத்திப்படுத்தும் சுய கோட்பாட்டை கூறியபடி, மேல் இருந்து வரும் கலாச்சாரத்தில் சீரழிவதுமாகும். உண்மையில் சுய திருப்தி காணும் கோட்பாடுகளும், சமூகத்தின் மேல் நஞ்சிடுவதுமாகும்.
இதை எதிர்கொள்ளல் என்பது, இருக்கின்ற சமூகத்தின் இன்றைய பொது அறிவால் முடியாது என்பதே உண்மை. மாறாக சமூகத்தில் இருந்து சமூகத்தை துருவிக் கற்றல், அதை மீளக் கற்றுக் கொடுத்தல் என்ற கடந்தகால சமூக வாழ்வியல் வழியை கண்டறிதல் அவசியம். இதன் மூலம் கூட்டாக இயங்குதல் அவசியம்;. தொலைக்காட்சிகள், மற்றும் சினிமாவின் வருகைக்கு முந்தைய காலத்தில் கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற அடிப்படையில் தான் சமூகங்கள் இயங்கின. ஆனால் இன்று பணம் உள்ளவன் மேலிருந்து திணிக்கும் தொலைக்காட்சியிடமும், சினிமாவிடமும் மனித விரோத சீரழிவை கற்றுக் கொடுத்தல் என்ற பணியை தாரை வார்ப்பதை, நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஆனால் அதைத்தான் நாம் வெட்கமின்றி செய்கின்றோம். வழிகாட்டும் சமூகப் பாத்திரத்தை இழந்து, வெறும் நுகர்வு பண்பாட்டுக்குள் மனித உறவுகளை சிதைக்கின்றோம். சமூகம் கொண்டுள்ள மனித உறவுகள், பொருளைச் சார்ந்த ஒன்றாகவே மாறிவிட்டது. பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அன்பளிப்பு செய்வது, அதை நேசிப்பது என்று, அதைச் சுற்றியே மனித உறவுகளான ஒரு உலகம் இயங்குகின்றது. இப்படி இழிவான மலட்டு மனிதப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் உருவாகிவிட்டன. இதைத்தான் சமூகத்தின் மனித செயல்பாடாக மாற்றிவிட்டு, ஒரு பொருளுலகத்தின் அடிமைகளாக நாம் வாழ்கின்றோம். பொருளை கொடுத்தல், வாங்குதலுக்குள் மனித உறவுகளை தீர்மானிக்கின்ற மனித அவலம். மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சி, ரசிப்பு, ஈர்ப்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம், அழுகை, உரையாடல், நடைமுறை முதல் காதல் வரை, பொருள் சார்ந்த நுகர்வின் எல்லைக்குள் மலினப்பட்டு, அதற்குள் சடங்குத் தன்மையிலான அசட்டுத்தனமாக உயிர்வாழ்கின்றது.
பொருள் சார்ந்த நுகர்வுக் கலாச்சாரத்தை, பண்பாட்டை மறுத்து வாழமுற்படுதல், அந்த நடைமுறையை பின்பற்ற மறுப்பதை எல்லாம், இழிவான செயலாக எண்ணுகின்ற, கற்பிக்கின்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது. குடும்பங்களில் இந்த உறவின் எல்லைக்குள், பிளவுகள் முரண்பாடுகள் கற்பிக்கப்படுகின்றது. இப்படி பொருள் சார்ந்த உலகை நடைமுறையில் பின்பற்ற மறுப்பதை விநோதமாக நோக்குகின்ற அற்பத்தனங்கள், சமூக அரங்கில் பல்லிளித்து மிரட்டுகின்றது. இந்த பொருள் சார்ந்த உலகம் உருவாக்குவதோ, கவர்ச்சியும் ஆபாசமும் தான்.
மனித உறவுகளைச் சுற்றி இந்த நுகர்வு நிகழ்ச்சி நிரலை இனம் காண்பது என்பது கடினமானது. சமூக உண்மைகளையும் விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக கற்பதும், நடைமுறை வாழ்விலான போராட்டத்தில் அதை தெரிந்து கொள்வதன் மூலமுமே இதை எதிர்கொள்ள முடியும். பகட்டான, ஆடம்பரமான, வீம்பான, எடுப்பான திமிர்தனங்களால், எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளவே முடியாது. சமூகத்தின் பொதுப் புத்தி மட்டம் இதற்குள் தான், தன்னை விளம்பரப்படுத்தும் அற்பத்தனத்தில் உளறுகின்ற துயரம் நிகழ்கின்றது.
பொதுப்புத்தி மட்டம் நாணம் கட்டிய மாடுகள் போன்று பழக்கப்படுத்தப்படுகின்றது. புதிய தலைமுறைகளை கருவிலேயே இருந்து, இதற்குள் உற்பத்தி செய்கின்றனர். கருவிலேயே புகுத்தப்படுகின்ற நுகர்ச்சிவெறி சார்ந்த கவர்ச்சியும் ஆபாசமும் திமிராகவே வெளிப்படுகின்றது. இப்படி வெளிப்படுத்தும் இந்த நுகர்வுவெறி சார்ந்த திமிருக்கு முன்னால், உழைக்கும் சமூகம் கூனிக்குறுகி விடுகின்றது. பணக்காரனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் உழைக்கும் வர்க்கம் போல், நுகர்வுவெறிக்கு முன்னால் உழைக்கும் மக்கள் கூனிக்குறுகுகின்றனர். இதுவே சொந்த குடும்பங்களில், பழைய புதிய தலைமுறைக்குள்ளும் நடக்கின்றது. உலகமயமாதலின் அற்பத்தனத்தை முன்னெடுக்கும் தர்க்கம் மற்றும் நடைமுறை வாதத்தின் முன்னால், அதை மறுக்கும் உழைக்கும் வர்க்கம் கைகட்டி நிற்கின்ற மனித அவலம். இதற்குள் சீரழிந்து விடுவதும், சினிமாவூடாக தொலைக்காட்சி ஊடாக அதை கற்பனையில் நுகர்ந்து வாழ முனைவதும், இதை நியாயப்படுத்துகின்ற எல்லைக்குள் அங்கீகரித்து விடுவதும் நிகழ்கின்றது. தமக்கு தாமே, தமது மனத்திரையில் இந்த மாயையை உற்பத்தி செய்கின்றனர்.
இதன் எதிர்நிலை தம்மைத்தாமே திருப்தி செய்கின்ற கோட்பாட்டையும், இதே உலகமயமாதலில் கண்டுபிடிக்கின்றது. சினிமாவை கலாச்சாரத்தின் ஊடகமாகவும், மொழியின் ஊடகமாகவும் காணவும், சிந்திக்கவும் தொடங்கி, அதுவாக அது இருப்பதாக, நம்பவும் காட்டவும் தொடங்குகின்றது. சொந்த சமூகத்தில் இருந்து அன்னியமாகின்ற போது ஏற்படும் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளின் அதிர்வு, அதை சினிமா ஊடான கலாச்சாரமாக மொழியாக காண்கின்ற அவலமும், அதை விளக்குகின்ற தர்க்கவாதமும் உருவாகின்றது.
சமூகத்தின் போலியான மனப்பாங்கு சார்ந்த, பிரமை சார்ந்த சமூக அறியாமையே, இதன் மூலதனமாகின்றது. ஆங்கிலப் படம் பார்த்தால் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற சமூக மனப்பிரமையும் அதை நோக்கிய அறியாமையும் தான், தமிழ் படத்தைப் பார்த்தால் தமிழைக் கற்க முடியும் என்று நம்புகின்றது. இதுபோல் தான் கலாச்சாரத்தையும் பற்றிய, மனப்பிரமையும் உருவாகின்றது. சமூகம் என்ற தொப்புள்கொடியில் இருந்து சமூக உறுப்புகள் அன்னியமாகின்ற போது, முரண்பட்ட இரண்டு கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று இப்படி மோதுகின்றது.
இந்தத் தளத்தில் பலமான இழிவான நுகர்வுக்கலாச்சாரம் ஆதிக்கம் வகிக்கின்ற நிலையில், பலமற்ற கலாச்சாரம் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை இழக்கும் போது, சாக்கடைக்குள் வடிகாலை கண்டுபிடிப்பதில் தான், அது தன்னைத்தானே திருப்தி செய்து கொள்கின்றது. இந்த சாக்கடையான சினிமாக் கலாச்சாரத்தையும், அது பேசும் மொழியைப் பற்றியும் சுய திருப்தி கொள்கின்றது. உண்மையில் இந்த விடையத்தைப் சமூக முழுமையில் புரிந்து கொள்ளாமல், அதற்குள் தாம் ஒரு தீர்வைக் கண்டுள்ளதாக மனப்பிரமை கொள்கின்றனது.
இது பலதளத்தில் பலவிதமாக இருந்த போதும், மேற்கத்தைய கலாச்சாரத்தை இழிவானதாக குறுக்கிப் பார்க்கின்ற, இந்தியக் கலாச்சார சுயதிருப்தி வெளிப்படுகின்றது. இந்தப் பொதுப்புத்தியில் இந்தியக் கலாச்சாரத்தை அணுகுகின்றது. இந்தியக் கலாச்சாரம் உயர்ந்ததாகவும், மேற்கத்தைய கலாச்சாரம் தாழ்ந்ததாகவும் கற்பிக்கின்ற பொதுப்புத்தி மட்டம், தனது அறிவு சூனியத்துக்கு ஏற்ப அதற்கு விளக்கம் கொடுத்து அதை அணுகுகின்றது. குறிப்பாக பெண்களின் ஓழுக்கவியல், நடையுடை பாவனைகள், முதல் அவளின் திருமணங்கள் அனைத்தையும் இதற்குள் ஓப்பிட்டு காண்பதே, இந்த இந்தியக் கலாச்சாரத்தின் ஆபாசமான பொது எல்லையாகும். இது மறுக்கப்படும் போது, இவை அத்துமீறப்படும் போது, நிலப்பிரபுத்துவ சமூக உறவு சார்ந்து பெண்ணின் எதிர்கால பாலியல் பற்றிய அச்சம் ஏற்படும் போது எல்லாம், சினிமா கலாச்சாரம் பற்றியும், அது பேசும் மொழி பற்றிய பிரமைகள், எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்படுகின்றது.
மேற்கத்தைய கலாச்சாரம், கீழைத்தேய கலாச்சாரம் என்ற பிளவுக்கு இடையிலான பொது அடிப்படை என்பது, பொருளாதார உள்ளடகத்தில் இருந்தும் சீரழிந்துவிட்டது. முன்பு முதலாளித்துவக் கலாச்சாரம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் என்ற ஒரு பொதுக்கோடு பிரித்த போதும், அவை படிப்படியாக ஒன்றுக்குள் ஓன்றாகவே சீரழிந்தது. நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் கொண்டிருந்த இணக்கமானதும், ஒன்றையொன்று சார்ந்த தமக்குள் புனிதமான விபச்சாரத்தை செய்து கொண்டது. இந்த ஏகாதிபத்திய கலாச்சாரம் இன்று, முழுமையான உலகமயமாதல் என்று நுகர்வுக் கலாச்சாரமாகிவிட்டது. இது வாழ்வியல் கூறுகளில் ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை, அதன் விளைவையும் சமூகத்தால் உட்கிரகிக்க முடிவதில்லை. அதனால் அது அதனிடத்தில் தன்னை அறியாமல் விலகிய முரண்பாட்டுடன் அம்மணமாகவே சரணடைகின்றது.
1. உலகமயமாதல் ஏற்படுத்தும் சமூக விலகல். தனிமனித வாதம், நுகர்வுவாதத்தின் மையப்புள்ளியாக ஒன்றிணைந்து, சுய அனுபவிப்பு பற்றிய பிரமையில் சமுகத்தை எதிராக நிறுத்துகின்றது. இது கலாச்சாரம் பற்றிய எதிர்நிலை முரண்பாடுகளை உருவாக்குகின்றது.
2. சமூக அமைப்பில் நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் சீரழிவு. உலகமயமாதலில் நுகரக் கூடியவனுக்கும், நுகர முடியாதவனுக்கும் இடையிலான இரட்டைக் கலாச்சாரம். இதற்கு இடையில் அங்குமிங்குமாக ஓடிப்பிடிக்கும் வக்கிரம். இது தனிமையில் வக்கிரமடையும் போது, வன்முறை கொண்ட அராஜக கலாச்சாரத்தை கொண்டு, சமூக விரோத கலாச்சாரத்தை கட்டமைக்கின்றது.
3. உலகமயமாதலால் ஏற்படும் சமூக கொந்தளிப்புகளால் ஏற்படும் பாரிய புலம்பெயர்வுகள், கலாச்சார ஏற்றுமதிகளும், கலாச்சாரத்தில் ஒரு சமூக அதிர்வை உருவாக்குகின்றது. குறிப்பாக இரட்டைக் கலாச்சாரம், இரட்டை மொழி சூழல், இதனால் பெற்றோருக்கும் குழந்தைக்குமான கலாச்சார இடைவெளிகள் பாரிய அளவில் அதிகரிக்கின்றது.
உலகமயமாதல் கலாச்சாரத்தில் முழுமையாக வாழத் தொடங்கும் புதிய தலைமுறைக்கும், அதற்கு முந்தைய தலைமுறைக்கும் இடையில் அடிப்படையான முரண்பாடாக இருப்பது, சமூகத்தன்மையை மறுத்தலாகும். உலகமயமாதலுக்குள் பிறந்த புதிய தலைமுறை, மனிதன் என்ற சமூக கலாச்சாரமற்ற தனிமனித நுகர்வு கலாச்சார நிலையில் வாழத் தூண்டுகின்றது. முந்தைய தலைமுறை மனித கலாச்சாரத்தில் சேர்ந்து வாழ்தல் என்ற முரண்பாடு, சரியாக உணரப்படாத ஒன்றாக உள்ளது.
புலம்பெயர்வு முதல் உலகமயமாதல் தரிப்பிடங்கள் எங்கும், இந்தக் கலாச்சார முரண்பாடுகள் விசுவரூபம் எடுக்கின்றது. இடையில் நிற்கும் மத்தியதர வர்க்கத்திடையேயான பாரிய ஒரு சமூக நெருக்கடியை இது உருவாக்குகின்றது. இளம் பருவ சமூக உறுப்புகள் மீதான சமூகக் கட்டுப்பாட்டை இழக்கின்ற ஒரு முரண்பாடாக மாறுகின்றது. இதுவே தலைமுறைக்கு இடையிலான முரண்பாடாகவும் உருவாகின்றது. அவசரம் அவசரமாக தமக்குத் தெரிந்த குறுக்கு வழியை நாடுகின்றனர். இதன் ஒரு அங்கமாக சினிமா ஊடாக கலாச்சாரம், சினிமா ஊடாக மொழி என்று, குறுக்குவழியில் சமூக உறவுக்கு பாலம் அமைக்க முனைகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால், குழந்தைகளைப் பராமரிக்க தொலைக்காட்சியை பயன்படுத்தும் அதே தவறான உத்திதான். இங்கும் பருவவயதுக்கும் உரிய பெற்றோரின் பிரச்சனைகளுக்கு, சினிமாவை தீர்வாக காண்பது சமூக அறியாமையாகும்.
இதையும் மத்தியதர பெற்றோர்கள் என்ற சமூகம் கண்டுபிடித்து வழிகாட்டவில்லை. மாறாக உலகமயமாதல் சந்தை இளைய தலைமுறையை அதற்குள் உள்ளிழுக்க, பெற்றோர் அதற்கு கொள்கை ரீதியில் சுயவிளக்கம் வழங்கி ஊக்குவிக்கின்றனர். பெற்றோர் இதற்கு கலாச்சாரம் மொழி என்று சுய விளக்கம் வழங்க, குழந்தை விரும்பும் ஆபாசத்தில் கவர்ச்சியிலும் அதற்குள் மூழ்கி விடுகின்றனர். இந்த ஒருமைப்பாடு மூலம் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றிணைந்த சமூகமாக இருப்பதாக நம்புகின்றனர். உலகமயமாதல் என்ற நுகர்ச்சிக் கலாச்சாரத்தில், பெற்றோர் சுயமாக குழந்தைகளுக்கு (சமூகத்துக்கு) வழிகாட்டியாக இருக்க முடிவதில்லை என்பதே உண்மை. சுயமாக சிந்திக்கும் பெற்றோர் முன் உள்ள கேள்வி மிக சிக்கலானதே.
1. பருவமடைந்த ஆண்கள் பெண்கள் (சிறுவயதில் அக்கறைப்படாத) சினிமாவை ஏன் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்?
2. சினிமா பார்ப்பதை தமிழ்க் கலாச்சாரம் என்ற எல்லைக்குள் பெற்றோர் பார்க்க முனையும் போக்கும், பிள்ளையின் கண்ணோட்டத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ன?
சினிமா விரும்பிப் பார்ப்பதை, குழந்தையின் சீரழிவாகப் பெற்றோரால் பார்க்கப்படுவதில்லை. மாறாக நல்ல அம்சமாக பெற்றோரால் பார்க்கப்படுகின்றது. இந்த வகையில், இது ஏதோ ஒருவகையில் ஊக்குவிக்கப்படுகின்றது.
பொத்தாம் பொதுவிலும், இயல்பான சமூக ஓட்டத்திலும், எதையும் சுயவிமர்சனம் விமர்சனத்துக்குள்ளாக்காத எமது சமூக மனப்பான்மையின் மொத்த விளைவு இது. வெறும் மந்தைகளாக, மந்தை மனப்பாங்கில் வாழமுனையும் அடிமை மனப்பாங்காகும். இதை பாதுகாக்க முனையும் குட்டிபூர்சுவா மனப்பாங்கு. குழந்தைக்கு பின்னால் ஓடி, வால் பிடித்துச் செல்லும் சமூக அறியாமையாகின்றது. குழந்தைக்கு வழிகாட்டிச் செல்லவேண்டிய பெற்றோர்கள், அதை செய்ய முடியாது சிதைகின்றனர். உலகமயமாதல் விதைக்கும் நஞ்சுகளை நுகர்வுச்சந்தையில் இருந்து வேகமாக உள்வாங்கும் குழந்தையும், இந்த குழந்தைக்கு பின்னால் ஒடுகின்ற பெற்றோரின் பரிதாபகரமான நிலைமையையும் உலகமயமாதல் உருவாக்குகின்றது. உண்மையில் பெற்றோரின் பின்தங்கிய அறிவுசார் வளர்ச்சியின்மையை, உலகமயமாதல உருவாக்குகின்றது. சமூகம் சார்ந்த கூட்டுச்செயல் சார்ந்த இயலாமையும், குழந்தையின் நிலைக்கு தத்துவவிளக்கம் காண முயலுகின்ற சுயபெருமை வாதங்களில் மூழ்குகின்றது. இந்த வகையில் கலாச்சார சினிமா பற்றிய பெருமை, சினிமா மொழி பற்றிய பிரமையில், குழந்தையின் நடத்தையை, அதற்கூடாகவே தம்மை குழந்தையுடன் இணைக்க முனைகின்றனர். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான இணைப்பை, சினிமாவாக கருதுகின்ற எளிமையான இலகுவான எடுகோளாகின்றது.
இந்த தமிழ் சினிமா எதை, எப்படி, எந்த வழியில் சொல்ல முனைகின்றது. இதன் மொழி என்ன? இதன் கலாச்சாரம் என்ன? தமிழ் சினிமா மேற்கு சினிமாவில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இப்படி பல கேள்விகளை சுய அறிவுள்ள எவரும் சுயமாக எழுப்ப முடியும். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தில் அப்படி எழுப்பப்படுவது கூட கிடையாது. மாறாக இதன் பின் வால்பிடித்து ஒடும் குறுகிய ஓட்டமும், இதற்கு சுயவிளக்கம் கண்டுபிடிக்கும் பொது அறிவுமாக, அரைத்த மாவையே அரைக்கின்ற செக்குமாடுகள் நிலையில் மனித குலம் அடிமைப்படுத்தப்படுகின்றது.
தமிழ் சினிமா தமிழ் கலாச்சாரத்தின் ஊடகமா? தமிழ் மொழியின் ஊடகமா? அப்படி நம்புவது, நம்ப வைப்பது அபத்தமாகும். தமிழ் சினிமாவின் பின்னால் உள்ள கட்டமைப்புகள் என்ன? அதன் சாரமே தனிமனித நுகர்வுவெறியும், தனிமனித வன்முறையும், பாலியல் நுகர்ச்சி வக்கிரமும் தான். இவை அனைத்தும், இயற்கையின் பாலியல் சார்ந்த தூண்டுதல் உருவாக்கும் காதலை, கவர்ச்சி கொண்டு ஆபாசமாக்கி புகுத்தப்படுகின்றது. இந்த சினிமாக் கலை, பாலியல் கவர்ச்சியை ஆபாசத்தை தனிமனித நுகர்வாகத் தூண்டும் ஒரு ஊடகவியல். இதுதான் தமிழ் சினிமாவின் ஆன்மா. இதுவின்றி அது உயிர் வாழமுடியாத ஆபாசத்தில் மூழ்கி மிதக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் உள்ளும் இருக்கின்ற பாலியல் உணர்வைத் தூண்டி, அதை தரம்கெட்ட வகையில் வக்கிரப்படுத்தி வியாபாரம் செய்யும் ஊடகம் தான் சினிமா என்ற வியாபாரக் கலை. அதன் கலாச்சாரம், மொழி என அனைத்தும் இந்த வியாபாரம் என்ற ஆபாசத்துக்கு உட்பட்டதே.
கிட்லர் மக்களின் போராட்டம் மற்றும் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவது பற்றிக் கூறிய போது 'மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும், சர்க்கஸ்சும் மட்டுமே" என்றான். இதற்கு மேல் யாரையும் சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஆள்பவர்களும், அடக்குமுறையை மக்கள் மேல் ஏவுபவர்களும், விதிவிலக்கின்றி இந்த அடிப்படையில் தான் மக்களை மந்தைகளாக வைத்திருகின்றனர். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டம் இதற்குள் தான் இயங்குகின்றது. தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கா? இல்லை. மக்களின் உணர்வுகளை அற்ப இழி உணர்வுகளாக மாற்றுவது, இதன் சாரம். இங்கு எழுவது இழிவான அற்பமான பாலியல் ஆபாச உணர்வு என்பதை, சமூகம் காண மறுக்கின்ற அறியாமை என்னும் அவலமும், இதன் கழிசடைத்தனமுமே சினிமாக் கலையாகின்றது.

பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து

அடிமைகளின் வரலாறு தான், இந்தியாவின் வரலாறு. யாரும் இப்படி இதை அணுகியது கிடையாது. சாதியம் என்பது, நிலவும் அடிமைகளின் மொத்த வரலாறு தான். இந்த அடிமைத்தனம், சாதியப் படிநிலையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
'..ஒரு சமூகத்தில் எந்த ஒரு தனிமனிதனும் எப்போதும் எதாவது ஒரு வர்க்க உறுப்பினராகவே இருக்கின்றான். இது ஒரு உலகளாவிய உண்மை. தொன்மையான இந்துச் சமூகமும் இவ்வுண்மைக்கு உட்படாத விதிவிலக்காக இருந்ததில்லை என்பது நாமறிந்த ஒரு உண்மையே." இதை கார்ல் மார்க்ஸ் சொல்லவில்லை. இது 24 வயதே நிரம்பியிருந்த இளம் அம்பேத்கரின் கூற்று. சோவியத் புரட்சி 1917 இல் உலகைக் குலுக்க முன்னம், 1916 இல் அம்பேத்கர் இந்திய சாதிய அமைப்பைப் பற்றிய தனது ஆய்வில் இதை முன்வைத்திருந்தார்.

இளம் அம்பேத்கரின் இந்தக் கூற்று ஊடாக இந்தத் தொடரில் அழைத்துச் செல்லுகின்றேன். இதுவரை சாதியம் குறித்து நிலவும் ஆய்வுகளையும், முடிவுகளையும், இந்த நூல் மூலம் நான் மறுதலிக்கின்றேன். 'சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே" என்று இளம் அம்பேக்கர் கூறியதன் அடிப்படையில், இதை மறுதலிக்கின்றேன்.

சாதியம் பற்றி ஆய்வுகள் பொதுவாக பார்ப்பனியத்தின் செல்வாக்குக்கு உட்பட்டதும், தனிச்சொத்துரிமை சமூக அமைப்பின் நியாயப்பாட்டுக்கும் உட்பட்ட முடிவுகளே, சாதியம் பற்றிய பகுப்பாய்வாக உள்ளது. பொதுவில் சாதிய சமூக பொருளாதார அடிப்படைகளுக்கு உட்பட்டு, அதை நியாயப்படுத்தி விடுகின்றது. இவற்றில் பல முன்கூட்டிய முடிவுகளின் அடிப்படையில், கற்பிக்கப்பட்டு அவை மறுபடியும் திணிக்கப்பட்டுள்ளது. வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் மாற்றங்களையும், அதற்கான சமூகப் பொருளாதார காரணங்களையும் ஆய்வு செய்ய மறுப்பதே, சாதியம் பற்றிய வரலாறாக எம்முன்னுள்ளது.

வருணம் என்பது சுரண்டும் வர்க்க அமைப்பாக, அதற்குள் தனிச் சலுகையின்றி அது இயங்கியது. இந்த இயங்கியல் போக்கை மறுத்த பார்ப்பனர், சுரண்டும் உரிமையை பரம்பரை உரிமையாக்கியதால் தான், வருணம் சாதியாக திரிந்தது. இங்கு தனிச்சொத்துரிமையிலான இயங்கியல் போக்கின் மீது, இயங்கியல் மறுப்பை கருத்துமுதல்வாதம் கொண்டு பார்ப்பனர்கள் மறுத்தனர்.

இதனால் வ(ருண)ர்க்க சமூகமோ சாதிய சமூகமாகத் திரிந்து பார்ப்பனியமாகியது. வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனிய எதிர்ப்பிலும் இயங்கியல் மறுப்பு கருத்துமுதல்வாத உள்ளடக்கத்தில் இயங்குவதுதான். தற்செயலாக சாதியில் பிறப்பவன் (உயர்சாதியில்), சாதிக்கு எதிராக சாதியை விட்டு விலகவும், அதற்கு எதிராக போராடவும் முடியாது என்கின்றது இந்த இயங்கியல் மறுப்பு. இதை அவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலாக கொள்கின்றனர்.

இது சாதியை ஒழிக்க முடியாது, சாதிக்கு எதிராகப் போராட முடியாது என்ற இயங்கியல் மறுப்பை கருத்துமுதல்வாத உள்ளடகத்தில் வைக்கின்றனர். இதனால் வெறுமையாகி விடுகின்றது. உயர்சாதிக்கு எதிரான சாதிகளின் வன்முறையாக மாறுகின்றது. சாதியை விட்டு விலகவும், அதை ஒழிக்கவும் முடியாது என்ற இயங்கியல் மறுப்பை, சமூகப் பொருளாதார அரசியலாகத் திணிக்கின்றனர். இடையில் வந்த சாதி கொண்டிருக்கும் இயங்கியல் மறுப்பை, சமூக இயங்கியல் மூலம் ஒழித்துக்கட்ட முடியும். ஆனால் இயங்கியல் மறுப்பால் அது முடியாது.

சாதி பற்றிய ஆய்வு முறைகள், அதில் உள்ள கோளாறுகள், இதில் உள்ள திரிபுகள், இந்த விடையத்தை சிதிலமாக்கியுள்ளது. இந்தியாவின் சாதியம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட இளம் அம்பேத்கர், சாதியத்தின் வேரைக் கண்டறிவதில் மிக நெருங்கிச் சென்றவர். ஆனால் பின்னால் அதில் இருந்து விலகிச் சென்றுவிடு;கின்றார். இளம் அம்பேத்கராக 09.05.1916 அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், சாதிய சமூக அமைப்பை நெருங்கிச் சரியாக பார்ப்பதில் ஒரு முன்னோடியாக இருந்திருக்கின்றார்.

ஆனால் தன் பிந்தைய ஆய்வு மற்றும் அரசியல் முடிவுகளில், இதைக் கையாள முற்படவேயில்லை. அவர் தனது பூர்சுவா வாழ்வியலுக்கு ஏற்பவும், பிரிட்டிஷ்சாருடன் அவர் கொண்டு இருந்த சமரச அரசியலுக்கு ஏற்பவும், அவர் தனது முன்னைய மிகச் சரியான எடுகோளைக் கைவிட்டு விடுகின்றார். அம்பேத்கரை முன்னிறுத்தும் பலரும், இந்த இளம் அம்பேத்கரின் முடிவைக் கண்டு கொள்வது கிடையாது. இதை பொதுவாக மூடிமறைத்தே, சாதிகளை அணுகினர், அணுகுகின்றனர். 

இளம் அம்பேத்கராக 1916ம் ஆண்டு அவர் ஆற்றிய உரையில் '.. எந்த வர்க்கம் முதலில் சாதி ஆக்கப்பட்டது என்பதை தீர்மானிப்பதே போதுமானது. சொல்லப்போனால் வர்க்கமும் சாதியமும் அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டுக்காரர்கள். அவற்றைப் பிரித்து நிற்பது மிகச்சிறிய இடைவெளி. சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே." என்றார். இளம் அம்பேத்கர் அன்று ஆற்றிய உரையில், இந்த விடயத்தை மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் நெருங்கிப் பார்க்கின்றார். வர்க்கம் ஊடாக சமூகத்தை அணுகாத, வர்க்கம் பற்றிய அறிவு இந்திய சமூகத்தில் இல்லாத காலத்தில், அம்பேத்கர் இதில் ஒரு முன்னோடியாக நெருங்கி இருந்தார். வர்க்கம் ஊடாக இந்திய சாதிய சமூகத்தைப் பார்க்க முனைந்தார். வர்க்கத்தைக் கடந்து, சாதியைப் பார்க்க முடியாது என்றார்.

அவர் அந்த உரையின் தொடர்ச்சியில் 'ஆக சாதியின் தோற்றுவாய் பற்றிய நமது ஆய்வு என்பது இந்த வேலியை தனக்குத்தானே எழுப்பிக்கொண்ட வர்க்கம் எது என்னும் வினாவுக்கு விடையளிப்பதாக இருத்தல் வேண்டும்" என்றார். இப்படி மிகச் சரியாகத் தான், இளம் அம்பேத்கர் சாதியுடன் போராடத் தொடங்கினார். வர்க்கத்தை வேலியிட்ட போதுதான், சாதியம் உருவாகியது. ஆனால் இதை அவர் தெளிவுபடுத்தவில்லை என்ற போதும், மிக நுட்பமாகவே அதை வெளிப்படுத்துகின்றார்.

சாதியம் பற்றிய தனது பிந்தைய ஆய்வுகளில், அம்பேத்கர் உட்பட யாரும் தொடாத ஒரு மையமான விடையம் இது. மேலும் அவர் தனது உரையில் '..இக் கேள்விக்கு விடை இந்தியா எங்கிலும் சாதிகள் எப்படி வளர்ந்தன, விரிந்து பரந்தன என்னும் புதிரை தௌ;ளத்தெளிவாக்க நமக்குத் துணை நிற்கும். கெடுவாய்ப்பாக இக்கேள்விக்கான பதிலொன்றும் என் சக்திக்கு உட்பட்டதாக இல்லை." என்கின்றார் இளம் அம்பேத்கர்.

இதற்கு பிந்தைய வரலாற்றிலும், சாதிய ஆய்வுகளிலும், யார் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்? இதற்கு வெளியில் தான் அம்பேத்கர் உட்பட, பலரும் பயணித்துள்ளனர். இப்படி சாதியத்தின் தோற்றத்தை திரித்துப் புரட்டியதே, சாதிய பற்றிய புரிதலாகவும், சாதியம் பற்றிய  தத்துவங்களாகவும்;; உள்ளது.

கேள்வியைக் கேட்ட அம்பேத்கர், அதே உரையில் 'இக் கேள்விக்கு நான் சுற்றி வளைத்தே விடையளிக்க முடியும்." என்கின்றார். அவர் தனது வாழ்நாள் முழுக்கவே, இப்படி சுற்றி வளைத்து விடுகின்றார். அவர் மட்டுமல்ல, சாதியம் பற்றிய ஆய்வுகள் அனைத்தும், இதைத் தான் செய்துள்ளது, செய்துவருகின்றது.

சுற்றிவளைக்க வெளிக்கிட்ட அம்பேத்கர், அதே உரையில் 'பிராமண வர்க்கம் ஏன் தன்னைத் தானே ஒரு சாதியாக வேலியிட்டுக் கொண்டது என்பது முற்றிலும் வேறான கேள்வி." என்று கூறி, அந்த விடையத்தை சுற்றி வளைத்ததுடன் அதை விலகி விட்டு விலகிச் செல்லுகின்றார். 'பிராமண வர்க்கம் ஏன் தன்னைத் தானே ஒரு சாதியாக வேலியிட்டுக் கொண்டது"? இதற்கு அம்பேத்கர் உட்பட, பலரும் ஏன் பதிலளிக்க முனையவில்லை.

பிராமண வர்க்கம் ஒரு சுரண்டும் வர்க்கம் என்பதால் தான், அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேலியிட்டுக் கொண்டது. இதை அம்பேத்கர் சொல்ல மறுப்பதுதான், இதல் உள்ள சுற்றி வளைப்பு. இதை சொல்ல மறுத்து, அதை வேறான கேள்வியாக்கிபடி, இதில் இருந்து அம்பேத்கர் விலகிச் செல்லுகின்றார். 

நாம் இந்த நூல் மூலம் இதை அணுகுகின்றோம். சுற்றி வளைக்காது விடையத்தை ஆராய்வதும், இதை தெளிவாக்குவதும், அவசியமானதாக உள்ளது. சாதி எப்படி, எந்த நிபந்தனைகளில், ஏன் தோன்றியது என்பதை தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது. இதனால் கடந்தகால சாதியம் பற்றிய பல முடிவுகளையும், கற்பனைகளையும் இயல்பாகவே மறுதலித்து விடுகின்றது.

சாதியம் பற்றிய ஆய்வுகளோ பல எழுந்தமானதாக இருக்கின்றது. அவை கற்பனைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இவை எதுவும் தெளிவுபடுத்தப்படாத புதிராக இருக்கின்றது. இதைத் தேடிய போது, சாதியம் பற்றிய சில நூறு நூல்களை படிக்க வேண்டியேற்பட்டது. இறுதியாக நான்கு வேதங்களையும், அர்த்தசாத்திரத்தையும் முழுமையாக படிக்க வேண்டியேற்பட்டது. இதன் மூலமே சாதியின் தோற்றத்தையும், அதன் உண்மைகளையும் துல்லியமாக அணுகவும், அதை வெளிக்கொண்டு வரவும் முடியும் என்றும் கருதினேன்.

இவற்றை நான் படித்தபோது, ஆரிய-வேத மக்கள் பற்றிய பொதுவான மதிப்பீடே தவறாக கற்பிக்கப்பட்டு இருப்பது தெளிவாகியது. இப்படி அனைத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.

இந்த வகையில் இளம் அம்பேத்கரின் ஆய்வுகளின் அடிப்படையில், அதை சரி செய்தபடி சாதியத்தின் வேரை அடையாளம் காணமுடியும். சாதியம் தோன்ற முன்னும் தோன்றிய பின்னுமாக, சாதிய வரலாற்றை அதன் சமூக பொருளாதார உள்ளடகத்தில் இருந்து இதை புரிந்துகொள்ள முனைவோம்.

சுல்தான் படத்துக்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு!

சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.

2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.

இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அதில் பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி ஆக்கர் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லதா ரஜினியிடம் கேட்ட போது, 'வழக்கெல்லாம் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும்' என்றார்.

இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்காட்சியில் வருவது நித்யானந்தா இல்லை: ஆஸ்ரம நிர்வாகி, வழக்கறிஞர் பேட்டி

சென்னை, மார்ச் 4: நித்யானந்தா இருப்பது போல தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர்.


இது தொடர்பாக இவர்கள் இருவரும் சென்னையில் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:

கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்பதிவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நித்யானந்தத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் தொலைக்காட்சியினர் தங்களுக்கு கிடைத்த படக்காட்சிகளில் இருப்பவர் நித்யானந்தாதானா என்பதை எங்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவில்லை. அந்த காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை.

முதல்நாளில் அதில் வரும் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டவர்கள் அடுத்தநாள் அவரது முகத்தை தெளிவாகக் காட்டினர். இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?

இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தா இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிருபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.

அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தா வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.

கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தா விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.