இரு தலைவர்கள் மோடியும் ட்ரம்பும்

ட்ரம்புக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நல்ல இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு
சான்பிரான்சிஸ்கோவில் இன்னும் மக்களின் கொதிப்பு ஆறவில்லை. இன்று ஒரு பெண்ணைச் சந்தித்தேன். நான் முதன்முதலாகப் பார்த்த, குரலை உயர்த்திப் பேசும் அமெரிக்கப் பெண். பூசணிக்காய் ஒன்றைப் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தார்.
‘முழுவதும் அழுகியது - ட்ரம்ப்’ என்று அதில் எழுதியிருந்தது. “அமெரிக்கா உடைகிறது” என்று சொன்னார். “நான் சொந்தச் செலவில் ஃப்ளோரிடா சென்றேன். 300 வீடுகளில் கதவுகளைத் தட்டி ஹிலாரிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றேன். எல்லோரும் ட்ரம்புக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஏதோ நடந்திருக்கிறது” என்றார். ஃப்ளோரிடா அமெரிக்காவின் கிழக்கில் இருக்கிறது. இங்கிருந்து 5,000 கிலோ மீட்டர்கள். “அவர் நியாயமாக வெற்றி பெற்றிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்” என்றேன். பிடிவாதமாக “இல்லவே இல்லை” என்றார் அந்தப் பெண்.
எனக்கு உடனே மோடியின் வெற்றி நினைவுக்கு வந்தது. எனது இந்துத்துவ நண்பர்கள் இரண்டு ஆண்டுகளில் இரண்டு மகத்தான வெற்றிகள் என்கிறார்கள். இவரைப் போலவே அவரும் மக்களை இரு துருவங்களில் நிற்கவைத்தவர். மோடி வென்றவுடன் பொங்கி எழுந்த பல நண்பர்களை எனக்குத் தெரியும். இன்று வரை பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் நமது பிரதமர் என்பதையே ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். அமெரிக்காவிலும் கோபம் அவ்வளவு சீக்கிரம் அடங்கும் என்று தோன்றவில்லை. மற்றொரு ஒற்றுமை இருவரும் நாடு அபாய நிலையில் இருக்கிறது என்று குரல்கொடுத்து, அதை மக்கள் நம்பியதால் வெற்றிபெற்றவர்கள். ஆனால், மோடி அடிமட்டத்திலிருந்து வந்தவர். அரசியலில் ஊறியவர். ஒரு பெரிய மாநிலத்தில் பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர். ட்ரம்ப் உலகத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அரசியல் அனுபவம் இல்லாதவர். மோடி நிச்சயம் வெற்றிபெறுவார் என்று நம்மில் பலருக்குத் தெரிந்திருந்தது. தனது வெற்றியைப் பற்றி ட்ரம்புக்கே சந்தேகம் இருந்தது.
மோடியும் ஒபாமாவும்
மோடி, ஒபாமா ஈருயிர் ஓருடல் என்று மோடி பக்தர்கள் நம்புகிறார்கள். இருவருக்கும் அவ்வளவு இணக்கம் இருப்பதால் இந்தியா என்ன கேட்டாலும் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தகோடிகளுக்கு இருந்தது. ஆனால், உண்மையின் நிறம் வேறு. இந்தியாவின் பிரச்சினைகள் மீது, குறிப்பாக இந்திய - பாகிஸ்தான் உரசல்கள் மீது, ஒபாமா அதிக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானோடு சீனா நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்வதை அதிகத் தடைகள் ஏதும் போடாமல் பார்த்துக்கொண்டிருந்த ஒபாமாவின் நிர்வாகம், இந்தியா தெற்காசியாவில் தனது நிலையை வலுவாக்கிக்கொள்வதை விரும்பியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில அறிக்கைகள் வந்தனவே தவிர, பாகிஸ்தானைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் ஒபாமா எடுக்கவில்லை. எனவே, அவர் மோடியின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்று சொல்ல முடியாது.
சீனச் சிக்கல்
கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 50 லட்சம் வேலைகள் - கிட்டத்தட்ட எல்லாம் தொழில் உற்பத்தியைச் சார்ந்தவை - வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றன. இவற்றில் 80%-க்கு மேல் சீனாவுக்குத்தான் சென்றிருக்கும். இந்த வேலைகளைத் திரும்பிப் பெற ட்ரம்ப் நிச்சயம் முயற்சிப்பார். அந்த வாக்குறுதியில்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். சீன - அமெரிக்க வர்த்தகத்தில் உபரி வருமானம் சீனாவுக்குத்தான். ஆண்டுக்குச் சுமார் 370 பில்லியன் டாலர்கள். இதை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைக்க ட்ரம்ப் முயற்சி செய்வார். இந்தியாவைப் பொறுத்தவரை அதற்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதால் கிடைக்கும் உபரி வருமானம் சுமார் 2 பில்லியன் டாலர்கள்தான். (ஏற்றுமதி 4 பில்லியன் டாலர்கள்: இறக்குமதி 2 பில்லியன் டாலர்கள்). அதாவது, சீனாவுக்குக் கிடைக்கும் உபரி வருமானத்தில் 180-ல் ஒரு பங்குக்கும் குறைவு. எனவே, ட்ரம்பின் பார்வை சீனா மீதுதான் விழும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
இந்தியாவில் இருக்கும் வேலைகள் அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று சொல்லலாம். அப்படிச் சென்றாலும், அவை குடியரசுக் கட்சிக்கு ஓட்டு போட்டவர்களுக்குச் செல்லும் வாய்ப்புகளும் மிகக் குறைவு. எனவே, மோடி முதலில் செய்ய வேண்டியது ட்ரம்பின் பார்வை இந்தியா மீது படுவதை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்த வேண்டுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியதுதான். அமெரிக்காவில் இருக்கும் சில மோடி ஆதரவாளர்கள் ட்ரம்புக்கு நெருக்கமானவர்கள். குறிப்பாக, ட்ரம்ப் தேர்தலுக்குக் கணிசமான நிதிஉதவி செய்த ஷலப் குமார், மோடிதான் தனக்கு ஆதர்ச புருஷர் என்று சொன்னவர். ட்ரம்ப் தேர்தலை நிர்வகித்து நடத்தியவரான ஸ்டீஃபன் பெனான் மோடியை இந்தியாவின் ரொனால்டு ரீகன் என்று அழைத்தவர். இருவரையும் மோடி பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து வேலைகள் அமெரிக்காவுக்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ட்ரம்ப் பாகிஸ்தானில் பிறந்தார் என்ற வதந்தி உலவினாலும் அவருக்கும் பாகிஸ்தானுக்கும் நல்ல இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. அதை இன்னும் குறைவாக்குவதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்க வேண்டும். குறிப்பாக, பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் மீது அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பாகிஸ்தான் தயாரிக்கும் ‘சிறு’அணு ஆயுதங்கள் உலகத்தின் பாதுகாப்புக்கே எமனாக ஆகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ட்ரம் புக்குப் புரிய வைக்க வேண்டும். ட்ரம்ப் காஷ்மீர் பிரச்சினை யைத் தீர்த்துவைத்தால், அவருக்கு நோபல் பரிசு கொடுக் கலாம் என்று பாகிஸ்தானின் முக்கியப் புள்ளி ஒருவர் கூறியிருக்கிறார். காஷ்மீரில் மூன்றாவது நாடு தலையிடு வது பிரச்சினைகளைப் பெரிதாக்குமே தவிர, தீர்க்காது என்பதையும் அவருக்குச் சொல்ல வேண்டும். தாமதப் படுத்தாமல் விரைவாக மோடி இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ட்ரம்பிடம் கோட்டை விட்டுவிடக் கூடாது.

எப்படி வென்றார் ட்ரம்ப்?

ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு
சான்பிரான்சிஸ்கோ நகரின் ஃபெரி ப்ளாஸா, உலகின் மிக அழகிய மூடிய சந்தைகளில் ஒன்று. சந்தைக்குப் பின்னால் கடல். ஓரமாக நடந்துபோனால் ‘கோல்டன் கேட்’ பாலத்தை அடையலாம். ட்ரம்ப் வெற்றிக்கு மறுநாள் நானும் என் மனைவியும் ட்ராம் ஒன்றில் ஏறி அங்கு வந்தோம். ப்ளாஸாவுக்கு முன்னால் சில இளைஞர்களைப் பார்த்தோம். கையில் அட்டைகள். ‘ட்ரம்ப் பிஸ்ஸாவை முள்கரண்டியால் சாப்பிடுகிறார்’, ‘ட்ரம்ப் தேசிய அவமானம்’, ‘நாங்கள் வெறுக்க மாட்டோம், எங்கள் நாடு ஒற்றுமையின் சின்னம்’போன்ற வாசகங்களைத் தாங்கியவை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவில் சற்று நேரத்துக்கு முன் நகர மையக் கட்டிடத்துக்கு முன்னால் மெழுகுவத்திகளை வைத்துக்கொண்டு பெண்கள் நிற்பதைப் பார்த்தேன். அமெரிக்கா இறந்துவிட்டது என்கிறார்கள். ஆனால், நான் முன்பே சொன்னதுபோல கலிஃபோர்னியா அமெரிக்கா இல்லை. அமெரிக்கா ட்ரம்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அது நிச்சயம் இறக்கவில்லை. மக்கள் ஆதரவு ஹிலாரிக்கு அதிகம் இருந்தாலும், அதிக மாநில ஓட்டுகளை ட்ரம்ப் பெற்றிருப்பதால் அவரே அதிபர் ஆவார் என்பது உறுதி. அதற்கு எதிராக நடக்கும் முயற்சிகள் பிசுபிசுத்துப் போகும் என்பதும் உறுதி. கலிஃபோர்னியா பிரிந்துபோக வேண்டும் என்றும்கூட வெறுப்பில் சிலர் சொல்கிறார்கள். அது நடக்காது என்பதும் உறுதி.
யார் காரணம்?
மிகத் திறமைவாய்ந்த இரண்டு இளைஞர்களிடம் கேட்டேன். ஒருவர் இந்தியர். மற்றவர் அமெரிக்கப் பெண். அவர்கள் சொன்னது: எங்களைக் கேட்டால் ட்ரம்பை வெற்றி பெற வைத்தவர்கள் அவரது ஆதரவாளர்கள் இல்லை. ஹிலாரியின் ஆதரவாளர்கள் என்றே சொல்வோம். ஹிலாரி இன்றுவரை போட்டியிட்டவர்களில் மிகவும் திறமை மிக்கவர் என்பது உண்மை. இன்றுவரை போட்டியிட்டவர்களில் தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவர்கள் பட்டியலில் ட்ரம்ப் இருப்பார் என்பதும் உண்மை. ஆனால், அவரை ஆதரித்தவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஹிலாரி ஆதரவாளர்கள் சிகரத்தில் நின்றுகொண்டு கீழே உழலும் எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று நினைத்தனர். ட்ரம்பின் குறைகளைப் பற்றி எதிரிகள் அதிகம் பேசப் பேச, அவர் அப்படித்தான் இருப்பார். அவர் அவராக இருப்பதுதான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றனர்.
மோடியையும் ட்ரம்பையும் ஒப்பிட முடியாது என்றாலும், ஒரு புள்ளியில் இருவரும் இணைகின்றனர். மோடி டெல்லியில் பயமின்றித் திரிந்துகொண்டிருந்த ஊழல் பெருச்சாளிகளை ஒழித்துவிடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்று அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கு ட்ரம்ப் சாவு மணி அடிப்பார் என்று அமெரிக்க மக்கள் நினைக்கின்றனர்.
ஒன்றும் செய்யாத ஒபாமா
ஒபாமா திறமையானவர், மிகவும் நாகரிகமானவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவரது எட்டு வருட ஆட்சியில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நிலையில் அதிக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதை ட்ரம்ப் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். மிச்சிகன் நகரில் அவர் பேசியபோது, ‘‘அமெரிக்க கார் தொழில் நிறுவனங்கள் பின்னடைந்திருப்பதற்கு ஜனநாயகக் கட்சியே காரணம்’’ என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடம் சொன்னார், “இந்த ஆட்சியால் உங்களுக்குத் துன்பம்தான் அதிகம் ஏற்பட்டது. இதைவிடக் கீழே நீங்கள் போக முடியாது. எனக்கு ஓட்டு போட்டால் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை”. அவர்கள் ட்ரம்புக்கு ஓட்டு போடவில்லை. ஆனால், யாருக்குமே ஓட்டு போடாமல் இருந்துவிட்டார்கள்.
அமெரிக்கப் பெண் முக்கியமான தகவல் ஒன்றைச் சொன்னார். ட்ரம்ப் பெண்களுக்கு எதிரி என்பதையெல்லாம் வெள்ளைக்காரப் பெண்கள் நம்பவில்லை. மொத்தம் 42% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்களில் வெள்ளை இனத்தவர்களை மட்டும் பிரித்தால் 50% மேல் ட்ரம்புக்கு வாக்களித்திருக்கின்றனர். பட்டதாரியில்லாத அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர், வேலைகள் கிடைக்கும், வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கையில்.
அச்சம் தேவையா?
அமெரிக்காவில் இப்போது இருக்கும் இந்தியர்களும், இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஹிஸ்பானிக்குகளும் பயப்படத் தேவையா? நிச்சயம் இல்லை என்கிறார்கள் ட்ரம்பைச் சேர்ந்தவர்கள். நாங்கள் குற்றம் செய்தவர்களை உள்ளே விடக் கூடாது என்று சொன்னோமே தவிர, மற்றவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்கிறார்கள். அதே போன்று, ‘மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவேன்’ என்று சொன்னது தேர்தல் பிரச்சாரமே தவிர, அதை உண்மை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் சொல்கிறார். ஆனால், நாஃப்டா என்று அழைக்கப்படும் வட அமெரிக்கச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகள் மாற்றியமைக்கப்படும் என்பது நிச்சயம். கனடாவிலிருந்து பேசிய நண்பர் ஒருவர், அந்நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும் என்று சொன்னார். மெக்சிகோவிலும் வேலைகள் மாயமாகலாம்.
உலகமயமாக்கல்
ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும். எண்பதுகளில் வலுவடையத் தொடங்கிய இந்தக் கொள்கைகள் ஐரோப்பியச் சந்தையிலிருந்து வெளியேறுவதை ஆதரித்து பிரிட்டிஷ் மக்கள் ஓட்டு அளிக்கும்போதே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. இப்போது ட்ரம்ப் அமெரிக்க தேசியத்தைப் பேசி வெற்றியடைந்திருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் நிதி மூலதன முதலைகள் அவர் தேர்தலில் பேசியதை அமலுக்குக் கொண்டு வர அனுமதிப்பார்களா என்பது சந்தேகம். மெக்சிகோ, கனடா மட்டுமல்லாமல், சீனா, ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா பகைத்துக்கொள்ள முடியாது.
எனவே, அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் பாதை எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பதைப் பற்றிய தெளிவு யாருக்கும் இல்லை.
இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)

புற்றுநோய்க்கும் குங்குமப்பூவுக்கும் என்ன சம்பந்தம்?

சேமியா பாயசத்திலும் பால் பாயசத்திலும் குங்குமப்பூவைப் பார்த்தாலே மனம் மகிழும். அவற்றுக்குத் தங்கம் போன்ற ஒரு மஞ்சள் நிறத்தை அது அளிப்பதுடன், அதன் மதிப்பையும் பன்மடங்கு உயர்த்திவிடும். மனைவியும் தாயும் நம் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளம் அது.
குங்குமப்பூவுக்கு வலுவான, நீடித்திருக்கும் நறுமணம் உண்டு. கசப்பும் இனிப்பும் கலந்ததொரு தனித்துவமான சுவை கொண்டது அந்தப் பூ. அதன் சாகுபடி குறைவாக இருப்பதால் விலையும் அதிகம். மதிப்புமிக்க பணப் பயிரான அதைப் பயிரிட அதிகமான மனித உழைப்பு தேவை. உலகின் விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ, மருத்துவக் குணங்களும் நோய் தீர்ப்புக் குணங்களும் நிறைந்தது. முதல் முதலாகக் குங்குமப் பூச் செடியைப் பயிரிடத் தொடங்கியவர்கள் கிரேக்கர்களே. அரேபியர்கள் கி.பி. 550 வாக்கில் குங்குமப்பூவைப் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் பல காலம் முன்பிருந்தே காட்டுப் புதராகக் குங்குமப்பூ செடிகள் வளர்ந்திருக்கலாம் என யூகிக்கிறார்கள்.
‘சாஃப்ரான்’
அரபி மொழியில், ‘மஞ்சள் நிறமுள்ளது’ எனப் பொருள்படும் ‘சாஃப்ரான்’ என்ற சொல் குங்குமப்பூவுக்குச் சூட்டப்பட்டது. வட இந்தியாவில் அது கேசர், கேஷரா, கும்கும், அர்சிகா எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மத்தியத் தரைக் கடலின் கிழக்குக் கரைகளிலிருந்து இந்தியாவின் காஷ்மீர், லடாக் வரை பயிரிடப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் முதல் 2,100 மீட்டர் வரை உயர்ந்திருக்கும் பகுதிகளிலேயே அது வளரும். குங்குமப்பூ உற்பத்தியில் 95% ஈரான், ஸ்பெயின், இந்தியா ஆகிய நாடுகளில் நிகழ்கிறது. சுமார் 10% குங்குமப் பூ இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் காஷ்மீரிலும் இமாசலத்திலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பில் குங்குமப்பூ செடி பயிரிடப்படுகிறது.
ஸ்ரீநகரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாம்போர் என்னுமிடம் குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அங்குள்ள மஞ்சள் பழுப்பு நிறமுள்ள மண்ணின் லேசான காரத்தன்மை உலகிலேயே உயர்தரமான குங்குமப்பூ விளைய உதவுகிறது. அது நீள நீளமான பட்டுநூலைப் போன்ற சூலக இழைகளை உடையது. அந்த இழைகள் கருஞ்சிவப்பு நிறமும் குமிழ் போன்ற வெளி முனைகளும் கொண்டிருக்கும். மணம், நிறம், மணமூட்டும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவை தரம் பிரிக்கப்படும். சூலக முடி இழைகளுடன் சூல் தண்டின் மேல் முனையையும், மகரந்தத் தாள்களையும் கலந்து கலப்படம் செய்வதுண்டு. தூய சூலக முடிகள் சிவப்பாகவும் ஆரஞ்சு நிற முனைகளுடனும் இருக்கும். சூல் தண்டு மஞ்சள் நிறமுள்ளது. அதுவும் விற்பனைக்கு வரும். ஆனால், அதற்குச் சூலக முடிகளைப் போன்ற நிறமும் மணமும் இருக்காது. அதற்குத் தனியாகச் சாயமும் மணமும் ஏற்றி விற்பார்கள். முனைகளில் ஆரஞ்சு நிறமில்லாத இழைகள் போலியானவை.
ஆறு கிலோ சூல் தண்டு மற்றும் சூல் முடியிலிருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கும். அவற்றைக் கிட்டத்தட்ட ஐம்பது கிலோ கிராம் எடையுள்ள புதிய மலர்களிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். அதாவது 1.5 லட்சம் மலர்கள் தேவைப்படும். ஒரு கிலோ பூவிலிருந்து 72 கிராம் சூலக முடிகள் கிடைக்கும். அதை உலர வைத்தால் 12 கிராம் குங்குமப்பூ கிடைக்கும்.
குங்குமப்பூ செடி ஆண்டு முழுவதும் பூக்கும். அதன் வேர்க் கிழங்கு ஒரே ஒரு பருவச் சாகுபடிக்கே உதவும். அதிலிருந்து முளைகளுள்ள துண்டுகளை வெட்டியெடுத்து நட்டு, புதிய செடிகளை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு செடியிலும் மூன்று அல்லது நான்கு மலர்களே பூக்கும். மலர் ஓரடி நீளம் வரை வளரும்.
வைகறைப் பொழுதில் மலர்களைக் கொய்து எடுத்துச் சென்று மகரந்தத் தாள்களைப் பிரித்தெடுப்பார்கள். அவற்றை அரை மணி நேரம் வெப்பக் காற்றைச் செலுத்தி உலர வைப்பார்கள். குங்குமப் பூவில் உள்ள வேதிகள் சிதையாமல் அது பக்குவமாக உலர்த்தப்பட வேண்டும். வெயில் மூலம் சூடாக்கப்பட்ட காற்றைச் செலுத்தி உலர வைக்கும் உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலர்ந்த குங்குமப்பூவை வெயில் மற்றும் காற்றுப் படாமல் இறுக மூடி வைக்க வேண்டும்.
குங்குமப்பூவில் 150-க்கும் மேற்பட்ட ஆவியாகும் வேதிகள் உள்ளன. அவையே அதற்கு மணத்தையும் சுவையையும் அளிக்கின்றன. டெர்ப்பீன்கள், டெர்ப்பீன் ஆல்கஹால்கள் ஆகியவை ஆவியாகிறவை. அவற்றுடன் கரோட்டினாய்டு மற்றும் டெட்ரா டெர்ப்பீன் வேதிகளும் உள்ளன. இம்மியளவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், போரான் ஆகிய தனிமங்களும் அதில் உண்டு. அதிலுள்ள குரேசெட்டின் என்ற வேதி, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மருத்துவப் பயன்கள்
உடல் வலிகளைக் குறைப்பது, மாதவிடாயை ஒழுங்குபடுத்துவது, உடலுக்கு ஊக்கமளிப்பது, புற்றுநோய்த் தடுப்பு, மூட்டு வலித் தடுப்பு, உயர் ரத்த அழுத்தத் தணிப்பு போன்றவற்றுக்கான ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் குங்குமப்பூ பயன்படுகிறது. இருமல், தூக்கமின்மை, தோல் வறட்சி போன்ற கோளாறுகளுக்குக் குணமளிக்கிறது. ரத்தத்தைச் சுத்தி செய்கிறது. நறுமணப் பொருட்களிலும் சாயங்களிலும் சேர்க்கப்படுகிறது. கேக்குகள், மிட்டாய்கள், பாயசம் போன்ற இனிப்புகளில் கலக்கப்படுகிறது.
கலப்படத்தை அறிவது எப்படி?
சோளக் கொண்டையினுள்ளிருக்கிற குஞ்சத்தை உலர்த்திச் சாயமேற்றி, வாசனையூட்டி போலியாகவும் குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது. அது அசலைவிடத் தடித்த இழைகளாயிருக்கும், விலையும் மிகக் குறைவாயிருக்கும். தூய குங்குமப் பூவை விரல்களால் தேய்த்தால் எண்ணெய்ப் பசை தெரியும். அதன் மணம், நிறம், தன்மை ஆகியவை தனித்தன்மையுள்ளவை. வெதுவெதுப்பான நீரில் போலி குங்குமப்பூவின் சாயம் வெளுத்துவிடும். அது மூழ்கி, நீரின் அடியில் போய்த் தங்கும். தூய குங்குமப்பூ சற்று நேரம் மிதந்துவிட்டே மூழ்கும். அதன் நிறமும் அதிகமாக மங்காது. அதில் சில துளிகள் கந்தக அமிலத்தை விட்டால் அது முதலில் நீல நிறம் காட்டி, படிப்படியாகக் கருஞ்சிவப்பாகவும் இறுதியில் பிரகாசமான ரோஸ் சிவப்பாகவும் நிறம் மாறும்.

அறிவோம் நம் மொழியை: கொன்ற யானையா, கொல்லப்பட்ட யானையா?

எழுவாயை ஒரு வாக்கியத்தில் எங்கே அமைப்பது என்பது பற்றிக் கடந்த வாரம் பேசினோம். ‘இறந்துபோன சங்கரனின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்னும் வாக்கியத்தில் இறந்தது யார் என்னும் குழப்பத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்குப் பலரும் பதிலளித்திருக்கிறார்கள்.
1. இறந்துபோன சங்கரன், தனது தாயாரோடு திருவல்லிக் கேணியில் வசித்துவந்தார்.
2. சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்.
ஆகிய இரு வாக்கியங்களை பாலசுப்பிரமணியன் தேவராஜ் என்னும் வாசகர் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களிலும் யார் இறந்தது என்பது தெளிவாக இருக்கிறது. முதல் வாக்கியத்தில் ‘தனது தாயாரோடு’ என்ற சொற்கள் மூல வாக்கியத்தில் இல்லாத ஒரு தகவலைச் சொல்கின்றன. மூல வாக்கியத்தில் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்ததாகத் தெளிவாகவே சொல்கிறது. சங்கரன் தங்கியிருந்த இடம்பற்றிய தகவல் அதில் இல்லை. இந்தத் தகவலைச் சேர்க்காமலேயே இறந்தது யார் என்பதை ஒரே வாக்கியத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
“சங்கரன் இறந்துவிட்டதாகத் தெரிவிக்க வேண்டுமாயின், ‘இறந்துபோன சங்கரன், தனது தாயாருடன் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம். சங்கரனின் தாயார் இறந்துவிட்டதைத் தெரிவிக்க, ‘இறந்துபோன தனது தாயாருடன் சங்கரன் அவரது இறுதிக்காலம்வரை திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம் என வீ.சக்திவேல் (தே.கல்லுப் பட்டி) எழுதியிருக்கிறார். இந்த வாக்கியங்களிலும் ‘தனது தாயாருடன்’ என்றும் ‘தனது தாயாருடன் அவரது இறுதிக் காலம்வரை’என்றும் புதிய தகவல்கள் சேருகின்றன.
“சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார் என்று மாற்றலாம். தொல்காப்பியமும் புலிகொல் யானை என்ற தொடரைச் சுட்டும். இது புலியால் கொல்லப்பட்ட யானையா அல்லது புலியைக் கொன்ற யானையா என்ற மயக்கத்தைத் தருகிறது. இதற்குத் தடுமாறு தொழிற்பெயர் என்று பெயர்” என முனைவர் அ.ஜெயக்குமார் சொல்வது இந்தச் சிக்கலை ஒருவாறு தீர்த்துவைக்கிறது. இறந்துபோனது சங்கரன் என்றால், இந்த வாக்கியம் எப்படி அமையும் என்னும் கேள்வி இன்னமும் எஞ்சியிருக்கிறது. ‘இறந்துபோன சங்கரன் என்பவரின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம்.
தங்கள் மேலான கருத்துக்களின் மூலம் இந்த விவாதத்தைச் செழுமைப்படுத்திய அனைவருக்கும் நன்றி. நாம் வாக்கியங்களை அமைக்கும் விதம் குறித்த பரிசீலனையை நமக்குள் ஏற்படுத்துவதுதான் இதுபோன்ற சவால்களின் நோக்கம். ஒரே வாக்கியத்தில்தான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. சொல்லவரும் பொருள் / தகவல் குழப்பமின்றி, பிழையின்றிச் சொல்லப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். எழுவாயை அமைக்கும் இடத்தை இந்தக் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்தாலே பெரும்பாலான வாக்கியங்கள் தெளிவாகிவிடும்.
ஒரு வாக்கியத்தை அமைக்கும்போது, அதன் எழுவாய் (Subject) என்ன செய்கிறது அல்லது என்ன ஆகிறது என்பது பற்றிய குழப்பம் நேரக் கூடாது. எனவே, எழுவாய்க்கான வினை அல்லது விளைவு அல்லது தகவலைக் கூடியவரை அந்த எழுவாய்க்குப் பக்கத்திலேயே அமைத்துவிடலாம்.

என்ன நினைக்கிறது உலகம்?- பாலஸ்தீனர்கள் வந்தேறிகள் அல்ல, நெதன்யாஹு!

மேற்குக் கரையில் உள்ள யூதர்களை இன அழிப்பு செய்ய பாலஸ்தீனர்கள் விரும்புகிறார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியிருக்கிறார். இன ஒழிப்பு பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு உண்மையாகவே தெரிந்துகொள்ள விரும்பினால், இஸ்ரேலில் வசிக் கும் பாலஸ்தீனக் குடிமக்களிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் பகுதியில் வசிக்கும் 85% பாலஸ்தீனர்கள், 1948-ல் நடந்த ‘நக்பா’ எனும் நிகழ்வின்போது தங்கள் வசிப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப் பட்டவர்கள் - அவர்கள் யூதர்கள் அல்ல எனும் ஒரே காரணத்துக்காக!
இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்களை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் இஸ்ரேலியர் களுடன் ஒப்பிட்டு நெதன்யாஹு சமீபத்தில் பேசியிருப்பது தவறான விஷயம் மட்டுமல்ல பகுத்தறிவு, வரலாறு, சர்வதேசச் சட்டத்தின் கீழான பொறுப்பு ஆகியவற்றை அவர் புறந்தள்ளியிருக்கிறார் என்பதைக் காட்டும் விஷயம் அது. எத்தனை பாரபட்ச நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டாலும், இதுதான் எங்களின் (பாலஸ்தீனர்களின்) சொந்த நிலம் என்றும் நாங்கள் அங்குதான் வசிப்போம் என்றும் நெதன்யாஹு புரிந்துகொள்ள வேண்டும். முதலில், இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் ஒன்றும் விசாவோ குடியுரிமையோ கேட்டு இஸ்ரேலை அணுகிய வெளிநாட்டுக் குடியேறிகள் அல்ல. மாறாக, இஸ்ரேல்தான் அவர்களிடம் சென்றது. அவர்கள் பூர்வகுடிகள். ‘ஜியோனிஸ்ட்’ இயக்கம் உருவாக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்பிருந்தே அங்கு வசிப்பவர்கள்.
நாங்கள் ஒன்றும் இஸ்ரேலியக் குடியேறிகள் அல்ல நெதன்யாஹு அவர்களே! வெளிநாட்டு நிலத்தைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொள்பவர்களுடன் எங்களை ஒப்பிட்டுப் பேசுவது, யூதர்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று நீங்கள் நம்புவதைத்தான் காட்டுகிறது. இஸ்ரேலில் வசிக்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், உங்கள் இனவெறி மனப்பான்மையையும், திட்டமிட்டு நடத்தப்படும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள் - இஸ்ரேலில் வசிக்கும் யூதர் அல்லாதோரை மட்டும் குறிவைக்கும் பல சட்டங்களையும்தான்.
இன ஒழிப்பின் அர்த்தத்தையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறார் நெதன்யாஹு. இன ஒழிப்புக் கொள்கையின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினால், அழிக்கப்பட்ட பாலஸ்தீனக் கிராமங்களான இம்வாஸ், யாலு, பெய்ட் நியூபா பகுதிகளில் அமைக்கப்பட்ட ‘கனடா பார்க்’ நினைவிடத்தை அவர் சென்று பார்க்கலாம். மெனஹெம் பிகின், யித்ஷாக் ஷாமிர் போன்ற இஸ்ரேல் ‘நாயகர்’கள் தொடர்பான ஆவணங்களையும் அவர் பார்க்கலாம்.எத்தனை ட்வீட்டுகள், காணொளிகளை வேண்டுமானாலும் இஸ்ரேலியர்கள் பரிமாறிக்கொள்ளலாம். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளைக் காலனிமயமாக்குவதற்கு நெதன்யாஹுவுக்குப் பெரும் ஆதரவும் கிடைக்கலாம். என்ன செய்தாலும், சொந்த நிலத்திலேயே அந்நியர்களாக எங்களை உணரச் செய்ய மட்டும் அவரால் முடியவே முடியாது!

மலேரியாவை வெல்ல இலங்கையை கவனியுங்கள்!

Image result for malariaஇலங்கையில் மலேரியா நோய் ஒழிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக உள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இலங்கையின் இந்தச் சாதனையை அங்கீகரித்துள்ளது. ஒரு நாட்டில், குறிப்பிட்ட நோய் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு யாரையும் தாக்கவில்லை என்றால் அந்த நோய், அந்த நாட்டில் ஒழிந்துவிட்டதாக உலக நலவாழ்வு நிறுவனம் அறிவிக்கும். அதன்படி, இலங்கையில் அக்டோபர் 2012-ல் மலேரியா காய்ச்சலில் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு யாரும் பாதிக்கப்படவில்லை.
உள்நாட்டுக்குள்ளே மலேரியா தொற்று இல்லை என்றாலும், மலேரியாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்துவிடாமல் தடுக்க இலங்கை முயன்றுவருகிறது. அங்கே 2013, 2014, 2015 ஆண்டுகளில் முறையே 95,49, 36 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாமும் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவை. வெளிநாட்டவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனைகள் நடத்துவது தற்போது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மலேரியா கிருமிகள் பரவாமல் முன்னதாகத் தடுத்தும், கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தும் இலங்கை செய்த தீவிரப் பணி இந்த நோயை ஒழிக்க உதவியிருக்கிறது. வீடு வீடாகச் சென்று பரிசோதித்தது, அதிக நோய்த் தொற்று உள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனைகளை அனுப்பியது, தரமான கண்காணிப்பு முறைகள், மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களையும் மலேரியாவுக்கு எதிரான பணிகளில் ஈடுபடுத்தியது என்று இலங்கை இந்நோய் ஒழிப்புக்கு உதவியுள்ளது. இலங்கையின் அரசுத் துறையும் தனியார் துறையும் மலேரியாவை ஒழிக்க இணைந்து பணியாற்றியுள்ளன. மலேரியா நோய் இருக்கிறதா என்பதை 100% பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர். கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல்வேறு முறைகளைக் கையாண்டுள்ளனர். தீவிர மலேரியா பாதிப்பு உள்ள இடங்களில் கொசுக்களிலிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வலைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, 1963-ல் மலேரியாவை ஒழிக்கும் நிலையை இலங்கை நெருங்கியது. அப்போது வெறும் 17 பேர்தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், பாதுகாப்பு முறைகளை முன்னதாக நிறுத்தியதாலும் தடுப்பு மருந்துகளின் ஆற்றலைத் தாக்குப்பிடிக்கும் நிலையை மலேரியா கிருமிகள் அடைந்ததாலும் 1980-களில் மலேரியாவால் பாதிக்கப்படுவது மீண்டும் அதிகரித்தது. மலேரியாவை ஒழிப்பதற்கான அப்போதைய இயக்கம் தோற்றதற்குத் துல்லியமான காரணங்கள் தெரியவில்லைதான். ஆனாலும், உள்நாட்டில் மலேரியாவைப் பரப்பிய கிருமிகள் அப்போது தரப்பட்ட மருந்துகளைத் தாக்குப்பிடித்து வளர்ந்துவிட்டன என்பது ஒரு முக்கியக் காரணம்.
ஆனால், 2000-ல் நிலைமை மீண்டும் சாதகமாகத் திரும்பியது. மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்தது. 1960-க்குப் பிறகு மலேரியாவை ஒழித்த நாடுகளில் இலங்கைக்கு 34-வது இடம். 2015-ல் மாலத்தீவு மலேரியா இல்லாத நாடு என்று நற்சான்று பெற்றது. அர்ஜெண்டினாவும் கிர்கிஸ்தானும் அத்தகைய நற்சான்றை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவில் மலேரியாவை ஒழிப்பது இன்னும் பெரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது. இலங்கையைவிட இந்தியாவின் மலேரியா பிரச்சினை அளவில் பெரியது. சிக்கலானது. ஆனாலும்கூட இலங்கையிடமிருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. மலேரியாவால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் உயிரிழப்பதாகச் சொல்கின்றன கள ஆய்வு அறிக்கைகள். இனியும் நாம் இப்படியே கடக்கலாகாது!

மாணவர் ஓரம்: பாராலிம்பிக்கின் தந்தை!



பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் ஞாயிறு அன்று நிறைவுபெற்றன. ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைவிட பாராலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு அதிகப் பதக்கங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. மாற்றுத் திறனாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்த நிகழ்வு இது. பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர்களில் பலர், லுட்விக் குட்மேனின் பெயரை ஒரு கணமேனும் நன்றியுடன் நினைத்திருப்பார்கள். மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனியாக ஒரு ‘இணை ஒலிம்பிக்’ போட்டிகள் நடக்க வழிவகுத்தவர் அவர். ஜெர்மனியில் வாழ்ந்த யூதரான குட்மேன், புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர்.
ஹிட்லரின் நாஜிப் படைகளின் அடக்கு முறைகளிலிருந்து தப்பி, பிரிட்டனுக்குச் சென்ற அவர், பக்கிங்ஹாம்ஷைரில் ஸ்டோக் மாண்டிவில் மருத்துவமனையைத் தொடங்கினார். முதுகுத்தண்டில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தார். அந்த நிலையில் இருப்பவர்களில் பலர் நம்பிக்கையின்மையாலும் சரியான பராமரிப்பு இல்லாமலும் உயிரிழந்த நிலையில், தனது துணிச்சலான அணுகுமுறை மூலம் சிறப்பான சிகிச்சையளித்தார் குட்மேன். அதற்கு அவர் பயன்படுத்தியது விளையாட்டு. சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஈட்டி எறிதல், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் கலந்துகொண்ட நோயாளிகள் உடலிலும், மனதிலும் பலம் பெற்றனர்.
1948-ல் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய அதே நாளில், அவரது மருத்துவமனை வளாகத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. சக்கர நாற்காலிகளுடன் நோயாளிகள் அதில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். அவரது முயற்சியின் காரணமாக, 1960-ல் முதன்முதலாக பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கின. சக்கர நாற்காலியில் அமர்ந்த மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டனர். 1976-ல்தான் வேறு உடல்குறை மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

எம்ஜிஆர் 5

மனிதமும் மதநல்லிணக்கமும்


  • தனக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியாருடன் எம்.ஜி.ஆர்.
    தனக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியாருடன் எம்.ஜி.ஆர்.
  • சென்னை வந்த போப்பாண்டவரை முதல்வர் எம்.ஜி.ஆர். வரவேற்கிறார்.
    சென்னை வந்த போப்பாண்டவரை முதல்வர் எம்.ஜி.ஆர். வரவேற்கிறார்.
  • அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொடக்க விழாவில் தெரசாவுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார். அருகே பரூக் அப்துல்லா.
    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொடக்க விழாவில் தெரசாவுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார். அருகே பரூக் அப்துல்லா.
M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.
தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..
வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.
அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.
தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!
1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.
அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.
அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?
1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’
மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.
அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.
தொடரும்..

எம்ஜிஆர் 4

எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு


ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடன் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி (கழுத்தில் துண்டு அணிந்திருப்பவர்), ஈ.வி.கே.சம்பத். - ‘பாகவதர் கிராப்’பில் எம்.ஜி.ஆரின் எழில் தோற்றம்.
ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடன் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி (கழுத்தில் துண்டு அணிந்திருப்பவர்), ஈ.வி.கே.சம்பத். - ‘பாகவதர் கிராப்’பில் எம்.ஜி.ஆரின் எழில் தோற்றம்.
எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.
‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.
கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.
விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.
அதற்கேற்ப, பாகவதர் தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்படியும் அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்பும் எம்.ஜி.ஆரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரைக் கட்டியணைத்து சமாதானப்படுத்தினாராம் பாகவதர். அந்த அளவுக்கு பாகவதர் மீது அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.
திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.
காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.
அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.
விழாவில் ஒரு சுவையான சம்பவம். காலையில் விழா நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். வருகையை எதிர்பார்த்து திருச்சி நகரமே அந்தப் பகுதியில் கூடியிருந்தது. 11.30 மணிக்கு விழா மேடைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். மலர்ந்த முகத்துடன் மக்களைப் பார்த்து கும்பிட்டார். அப்போது, பொருத்தமாக ‘சிவகவி’ படத்தில் இடம் பெற்ற ‘வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?’ பாடல் பாகவதரின் கம்பீரக் குரலில் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கிறது. புரிந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது.
மக்கள் கடலின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டே தனக்கு பிடித்த பாகவதரின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சந்திர பிம்பமாய், மலர்ந்த ரோஜாவாய் மேலும் மகிழ்ச்சியில் ஜொலித்தது. மக்களின் உற்சாக ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?
திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில் இருவரோடும் இணைந்து நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. பாகவதருடன் ‘அசோக்குமார்’, ‘ராஜமுக்தி’ ஆகிய படங்களிலும் பி.யூ.சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தார். அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர்.
தொடரும்..

எம்ஜிஆர் 3


அண்ணாவின் தம்பிகள்


  • ‘எங்கள் தங்கம்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் கருணாநிதி.
    ‘எங்கள் தங்கம்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் கருணாநிதி.
  • ‘எங்கள் தங்கம்’ 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆருக்கு விருது வழங்குகிறார் நெடுஞ்செழியன்.
    ‘எங்கள் தங்கம்’ 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆருக்கு விருது வழங்குகிறார் நெடுஞ்செழியன்.
  • முரசொலி மாறன் திருமண வரவேற்பில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.
    முரசொலி மாறன் திருமண வரவேற்பில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.
M.G.R. முதல் முறையாக 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி. சட்டப் பேரவையில் சூடும் சுவையுமான ஒரு விவாதம். ஒரு கட்டத்தில் கருணாநிதி பேசும்போது, ‘‘ஆட்சி அதிகாரம் எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது’’ என்றார். எம்.ஜி.ஆர். எழுந்தார். தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.’’
இப்படி, அரசியல் களத்திலே எதிரெதிரே நின்று விவாதங்களில் ஈடுபட்டாலும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளான இரண்டு பேருக்கும் இடையே அரசியலைத் தாண்டிய ஆழமான நட்பு நிலவி வந்தது. தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார். எம்.ஜி.ஆரும் மேடைகளில் ‘நண்பர் கலைஞர் கருணாநிதி’ என்றே விளித்து பேசுவார்.
அரசியல் உக்கிரம் தகித்த போதும் அதையும் தாண்டிய நட்பு குளிர்ச்சி இருவருக்கும் இடையே நிலவியதற்கு சான்றுகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம்.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்து 1982-ம் ஆண்டு ‘நீதிகேட்டு நெடும் பயணம்’ என்ற பெயரில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுடன் பாத யாத்திரையாக சென்றார். தொடர்ந்து நடந்ததில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. அப்படியும் பயணத்தை தொடர்ந்தார்.
விஷயம் முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தொலைபேசி மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்டார். உடல் நலன் குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதோடு, கருணாநிதியின் உடல் நிலையை கவனிக்க ஒரு மருத்துவர் குழுவையும் அனுப்பி வைத்தார். இது இருவருக்குமான நட்பின் அடையாளம் மட்டுமல்ல, தனது அரசை எதிர்த்து பாத யாத்திரை போகிறாரே? தனது அரசியல் எதிரியாயிற்றே? என்றெல்லாம் கருதாமல் கருணாநிதியின் உடல் நலனில் எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையையும் அவரின் அன்பு உள்ளத்தையும் காட்டும் நிகழ்ச்சி இது.
இருவருக்கும் இடையிலான நட்பின் ஆழத்துக்கு இன்னொரு சம்பவம்.
‘எங்கள் தங்கம்’... எம்.ஜி.ஆரை ரசிகர்கள் இப்படி அழைப்பதற்கு காரணமான அவர் நடித்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம். மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கடனை ‘எங்கள் தங்கம்’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தால் அடைத்ததாக அதன் வெற்றி விழாவில் முரசொலி மாறன் குறிப்பிட்டார்.
படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். என்றாலும் இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒன்று.. எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலான ‘நான் செத்துப் பிழைச்சவன்டா.... ’
மற்றொன்று ஜெயலலிதாவுடன் எம்.ஜி.ஆர். பாடும் டூயட் ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ இந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அதில் உள்ள சிறப்பான வரிகள். இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.
‘நான் அளவோடு ரசிப்பவன்...’ பாடலுக்கான முதல் வரியை எழுதி விட்டார் வாலி. என்ன காரணமோ தெரியவில்லை, அன்று அவருக்கு அடுத்த வரி உடனடியாக வரவில்லை. அப்போது மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கருணாநிதி வந்தார். வாலியைப் பார்த்து ‘பல்லவி எழுதி விட்டீர்களா?’ என்று கேட்டார்.
‘நான் அளவோடு ரசிப்பவன்....’ முதல் வரியை சொன்னார் வாலி.
‘எதையும் அளவின்றி கொடுப்பவன்....’ இரண்டாவது வரி வந்தது கருணாநிதியிடம் இருந்து.
எம்.ஜி.ஆரின் வள்ளல்தன்மையை மனதில் கொண்டு கருணாநிதி கூறிய இந்த வரிக்குப் பிறகு பாடல் கிடுகிடுவென எழுதி முடிக்கப்பட்டு அன்று மாலையே ஒலிப்பதிவும் ஆகிவிட்டது.
பாடல் எம்.ஜி.ஆருக்குப் போனது. ஆனால், இரண்டாவது வரியை வாலிக்கு கருணாநிதி எடுத்துக் கொடுத்த விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. சில நாட்கள் கழித்து வாஹினி ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்தார் வாலி.
அவரை வரவேற்று ‘‘வாங்க ஆண்டவனே. (தனக்கு நெருக்கமான வர்களை எம்.ஜி.ஆர் இப்படி அழைப்பது வழக்கம்) ‘அளவோடு ரசிப்பவன்’ பாட்டு பிரமாதம். அதிலும் அந்த இரண்டாவது வரி அருமை’’ என்று கூறிய எம்.ஜி.ஆர். அன்பின் மிகுதியால் வாலியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
‘‘அண்ணே, நீங்க இந்த முத்தத்தை கருணாநிதிக்குத்தான் கொடுக்கணும்’’ - வாலியின் ரியாக் ஷன்.
‘‘ஏன்?’’ எம்.ஜி.ஆர். புரியாமல் கேட்டார்.
விஷயத்தை வாலி சொன்னதும் சிந்தனையில் ஆழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் எதிரொலி சில நாட்களுக்குப் பின் அவரிடம் இருந்து வெளிப்பட்டது.
‘நான் செத்துப் பிழைச்சவன்டா.. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா...’ பாடலின் பல்லவியை எழுதி எம்.ஜி.ஆரி டம் காட்டினார் வாலி. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம்.ஜி.ஆர். உயிர்பிழைத்த பிறகு வெளியான இந்தப் பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.
திருப்தியடைந்த எம்.ஜி.ஆர். வாலியிடம் சொன்னார்: ‘‘ஆண்டவனே, இரண்டாவது சரணத்திலே இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது பற்றி நாலு வரியிலே நறுக்குன்னு எழுதிடுங்க.’’
இதையடுத்துப் பிறந்த வரிகள்தான்...
‘ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய்தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது’
தனது கொடை உள்ளத்தை ‘அளவின்றி கொடுப்பவன்...’ என்று புகழ்ந்து அடியெடுத்துக் கொடுத்த கருணாநிதியின் போர்க் குணத்துக்கு எம்.ஜி.ஆரின் பதில் மரியாதை.
‘எங்கள் தங்கம்' படத்தின் ஆரம்பத்தில் அப்போது சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தொப்பி, கண்ணாடியுடன் சிறுசேமிப்புத் துறை தலைவராகவே வருவார். அவரிடம் தங்கம் பாத்திரத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர். நிதி கொடுப்பார்.
எம்.ஜி.ஆருக்கு தமிழக அரசின் லாட்டரி சீட்டில் பரிசு விழும் (அப்போது லாட்டரி சீட்டு இருந்தது). அந்தப் பரிசை எம்.ஜி.ஆருக்கு அண்ணா வழங்குவது போல ஒரு காட்சி. மொட்டை அடித்துக் கொண்டு பாகவதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்.கதாகாலட்சேபம் செய்யும் காட்சி என்று படத்தில் ‘ஹைலைட்’கள் ஏராளம்.
தொடரும்..

எம்ஜிஆர் 2

 எம்.ஜி.ஆரின் அக்கறை

  • ‘நம்நாடு’ படத்தில் ... ‘வாங்கய்யா.... வாத்தியாரய்யா....’ பாடல் காட்சி.
    ‘நம்நாடு’ படத்தில் ... ‘வாங்கய்யா.... வாத்தியாரய்யா....’ பாடல் காட்சி.
  • ‘அம்மா என்றால் அன்பு... ’ பாடல் ஒலிப்பதிவில் கே.வி. மகாதேவன், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.
    ‘அம்மா என்றால் அன்பு... ’ பாடல் ஒலிப்பதிவில் கே.வி. மகாதேவன், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.
M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.
அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.
படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.
1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:
‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.
மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’
ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.
எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடரும்..

எம்ஜிஆர் 1

 -அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!

M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.
1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.
பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!
தொடரும்..

அறிவியலுக்கு அப்பால்-1: ஆவிகள் அமைத்துக் கொடுத்த அற்புத இசை!



"முடிக்கப்படாத சிம்பொனிகள்'  (Unfinished Symphonies) மற்றும் "காலத்தை வென்றவர்கள் என் முழங்கையில்' (immortals at my Elbow) போன்ற நூல்களை எழுதி 1970-களில் இங்கிலாந்தில் புகழ் பெற்றார் திருமதி. ரோஸ் மேரி பிரவுன் (Rose Mary Brown) என்ற பெண்மணி. ஆனால் அவருடைய புகழுக்குக் காரணம் அந்த நூல்கள் மட்டுமல்ல. இசை ஞானமே இல்லாத அந்தப் பெண்மணி இந்த உலகில் தோன்றி மறைந்த இசை மேதைகளான ஃப்ரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt), ப்ரெட்ரிக் சாபின் (Fredrick Chopin), லுட்விக் வான் பீதோவன் (Ludwig Van Beethovan),
ஜோஹன் செபாஸ்டின் பக் (Johaan Sepastin Bach) ஆகியவர்களால் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது காம்போசிஷன்களைக் கொண்ட இசைத் தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார். 1970ஆம் ஆண்டு மே மாதம் இந்த ஆவியுலக இசைத் தட்டுகள் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்த போது, அறிவியல் உலகம் பிரமித்துப் போனது.
இசையுலக விற்பன்னராகத் திகழ்ந்த பேராசிரியர் இயன் பேரட் (Prof. Ian Parrot), இந்த இசை வடிவங்களைச் சோதித்துப் பார்த்துவிட்டுச் சொன்னார் ஒரு கைதேர்ந்த இசைக் கலைஞனால் கூட இம்மாதிரி இறந்து போன மேதைகளின் இசை வடிவங்களைக் காப்பி அடித்து வடித்திருக்க முடியாது.
ஆவியுலகத்திலிருந்து திருமதி ரோஸ் மேரி பிரவுன் வடித்துக் கொடுத்த காம்போசிஷன்களின் மெய்த்தன்மையைப் பரிசோதிக்க, இறுதியில் ஒரு மல்டி வேரியெட் அனலைசர் (Multi Varate Analyser) எனப்படும் கம்ப்யூட்டரின் உதவியை விஞ்ஞானிகள் நாடினர். மே மாதம் 1971-இல் கணித மேதையும் இசை மேதையுமான ஸ்டான் கெல்லி (Stankelly) என்பவர் இந்தப் பரிசோதனையை நடத்தினார். மறைந்த இசை மேதைகளான ஃப்ரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt), ப்ரெட்ரிக் சாபின் (Fredrick Chopin), லுட்விக் வான் பீதோவன் (Ludwig Van Beethovan), ஜோஹன் செபாஸ்டின் பக் (Johaan Sepastin Bach) ஆகியோரது இசை வடிவங்களையும், அவர்கள் பெயரால் திருமதி ரோஸ் மேரி பிரவுன் வடிவமைத்த இசையையும், அந்தக் கணினியில் பதிவு செய்து அவைகளுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இவைகளுக்குள் 60% ஒப்புமை (Correlation factors) இருந்தால் திருமதி ரோஸ் மேரி பிரவுன் கொடுத்த இசை ஆவியுலக இசையென்று ஒப்புக்கொள்ள விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர். ஆனால் பரிசோதனையின் முடிவில் ஒப்புமைக் காரணிகள் 80% முதல் 90% வரை கணினியால் காட்டப்பட்டபோது, அறிவியல் உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இன்று வரை திருமதி ரோஸ் மேரி பிரவுன் எப்படி இப்படிப்பட்ட இசையை உருவாக்கினார் என்பது விஞ்ஞான உலகிற்குப் புரியாத புதிராகவே உள்ளது.
திருமதி ரோஸ் மேரி பிரவுன் தன்னுடைய நூலில், ஆவியுலகோடு தன்னுடைய முதற்தொடர்பு சிறு வயதில் ஏற்பட்டதாகவும் பின்னர் 1994இல் தன் தந்தை மரணப் படுக்கையில் இருந்தபோது, தான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, தன் தந்தையின் ஆவி தன் அருகில் வந்து பேசியதாகவும், அவர் சொன்னவை அனைத்தையும் பின்னர் வீட்டில் இறந்திருந்த தந்தையின் சடலத்திற்கருகில் அமர்ந்திருந்த தன் தாய் உறுதிப் படுத்தியதாகவும் சொல்லியுள்ளார்.
1970களில் திருமதி ரோஸ் மேரி பிரவுன் பிபிசி தொலைக்காட்சியில் தோன்றி ஆவியுலகில் இருந்த தனக்களிக்கப்பட்ட இசை வடிவங்களைப் பற்றி விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து அவரது புகழ் உலகெங்கும் பரவியது.
1971இல் அவர் பாரீசுக்குப் போனார். அங்கே 1810 முதல் 1849 வரை வாழ்ந்து தன்னுடைய 39ஆவது வயதில் இறந்து போய் இசையுலகில் ஒரு சகாப்தமாகிப் போன போலந்து இசை மேதை ப்ரெட்ரிக் சாபினின் கல்லறைக்குப் போனார். பல முறை சாபினின் ஆவி, திருமதி ரோஸ் மேரி பிரவுனின் கைகளைப் பிடித்து தன் காம்போசிஷன்களை எழுதிக்கொடுத்த அனுபவத்தைப் பெற்றிருந்ததால், திருமதி ரோஸ் மேரி பிரவுனுக்கு சாபினின் மேல் அளவு கடந்த மரியாதை இருந்தது. எனவே, அக்கல்லறைக்கு அவர் போனார். அங்கே உணர்ச்சி மேலிட்டு, தன்னுடைய அற்புதமான இசையை முழுவதுமாக இவ்வுலகிற்கு அளிக்க முடியாமல், சிறு வயதிலேயே அற்பாயுளில் இறந்து விட்ட அம்மேதையை நினைத்து கண்ணீர் விட்டார். அந்த நிமிடத்தில் ஒரு மயிற்கூச்செரியும் நிகழ்ச்சி நடந்தது. அதை திருமதி ரோஸ் மேரி பிரவுன் பின் வருமாறு விவரிக்கின்றார்: என் அருகில் சோபின் தோன்றினார். என் வருத்தத்தை உணர்ந்து கொண்ட அவர், ஒரு புன்முறுவலோடு என்னை நோக்கி ஏன் வருந்துகிறாய் நான் அங்கு (கல்லறையில்) இல்லை. இதோ இங்கிருக்கிறேன் என்றார்.
இதே போல் ப்ரான்ஸ் லிட்ஸ் என்ற இசை மேதை ரோஸ் மேரியிடம் வாழ்க்கையின் இழை மரணத்துடன் முடிவதில்லை. அது இன்னொரு (நூற்) கண்டிற்கு மாற்றப்பட்டு விடுகிறது. அவ்வளவு தான் என்று கூறியதாக ரோஸ் மேரி குறிப்பிடுகிறார்.
எது எப்படியாயினும், திருமதி ரோஸ் மேரி பிரவுன் தொகுத்தளித்த இசை எங்கிருந்து வந்தது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் “லா நீனா’ சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியத்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது.
இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.
இந்த நிலையில், வெப்ப சலனத்தின் இந்த ஆண்டு மத்தியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து “லா நீனா’ என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். அந்த “லா நீனா’ காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நா. துணைப் பொதுச் செயலர் ஸ்டீஃபன் ஓபிரையன் கூறியதாவது:
வெப்ப சலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் “லா நீனா’, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். வெப்ப சலனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும்.
வெப்ப சலனம் காரணமாக ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடி பேர், அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், “லா நீனா’வால் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றார் அவர்.