பாலஸ்தீனம் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்!.. 10 ஆயிரம் பேரை காவு வாங்கிய போர் முடிவுக்கு வருமா?

 காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 32வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது. எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது.



எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக்கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக்கொண்டனர். சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை. ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி 32வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 4,104 பேர் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை 2,641.

ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேபோல இந்த தாக்குதலிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எகிப்தின் ராஃபா எல்லை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த எல்லை தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த எல்லையை நோக்கி செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. தற்போது காசா இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


"போர் நிறுத்தம்" செய்யும் இஸ்ரேல்.. ஹமாஸ் சண்டையில் அதிரடி திருப்பம்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்

 டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. கடந்த அக்.7ஆம் தேதி ஹமாஸ் படை இஸ்ரேல் நாட்டில் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் படை அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. மேலும், பல இஸ்ரேல் நாட்டவரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.



இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. காசா மீது முதலில் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த நிலையில், அடுத்து இப்போது படையெடுப்பையும் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ்: இப்படிக் காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கி உள்ளது, இருப்பினும், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றே இஸ்ரேல் இதுவரை தொடர்ந்து கூறி வந்தது. இதற்கிடையே இஸ்ரேல் திடீரென இப்போது தனது முடிவை மாற்றியுள்ளது.

அதாவது ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. வடக்கு காசாவில் உள்ள சில பகுதிகளில் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அறிவிக்கப்படும் இந்த போர் நிறுத்தங்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியும். மேலும், பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியேறவும் இந்த போர் நிறுத்தம் பயன்படும் என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

நெதன்யாகு: இருப்பினும், இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் தொடர்ச்சியான போர் நிறுத்தங்கள் இருக்கும் என்பதில் இஸ்ரேல் எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கவில்லை. இஸ்ரேல் போர் தொடரும் நிலையில், இது குறித்து அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், "ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடர்கிறது, ஆனால் குறிப்பிட்ட இடங்களில் போர் நிறுத்தம் செய்ய நாங்கள் ரெடியாக இருக்கிறோம். சில மணி நேரங்கள் ஆங்காங்கே போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் போரில் இருந்து பாதுகாப்பாக வெளியேற முடியும். இஸ்ரேல் திட்டம்: எங்கள் சண்டை ஹமாஸுக்கு எதிராகத் தான் நடந்து வருகிறது. இதனால் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதை நாங்கள் தடுக்கவில்லை. மேலும், வலுக்கட்டாயமாக பாலஸ்தீனர்களை இடமாற்றம் செய்யவும் நாங்கள் முயலவில்லை என்பதையும் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறோம். இப்போது வடக்கு காசா பகுதியில் நாங்கள் ஒரு வலயத்தை உருவாக்கியுள்ளோம்.

அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளை ரெடி செய்து வருகிறோம். பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவும் அனுமதித்தே வருகிறோம். எங்கள் போரை நாங்கள் இப்படிதான் நடத்தி வருகிறோம். காசா இப்போது முழுக்க முழுக்க ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களை விடுவித்து மீண்டும் அங்கே மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே இப்போது நமக்கு நோக்கம். இதையெல்லாம் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும். எங்கள் திட்டம் என்ன: காசாவைக் கைப்பற்ற நாங்கள் முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்கும் திட்டமோ அல்லது அவர்களை வெளியேற்றும் திட்டமோ எங்களுக்கு இல்லை. அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இஸ்ரேல் மீது தேவையற்ற தாக்குதல்கள் நடத்தும் ஆபத்துகளை இது குறைக்கும்" என்றார்.


இந்தியா-அமெரிக்கா கூட்டணி உலக நன்மைக்கானது.. அமெரிக்க அமைச்சர்களை சந்தித்த மோடி! சொன்னதை பாருங்க

 டெல்லி: 2+2 மீட்டிங்கின் ஒருபகுதியாக இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த போட்டோக்களை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி பெருமைப்பட கூறியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. பல்வேறு கூட்டமைப்புகளில் இரு நாடுகளும் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியா-அமெரிக்கா இடையேயான வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை குறித்து உறவுக்காக 2+2 மீட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த மீட்டிங்கில் இருநாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்று முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிப்பார்கள். குறிப்பாக இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு கொள்கை, வெளியுறவு கொள்கை குறித்து விவாதிக்கப்படும். மேலும் முக்கியமான இந்த 2 துறைகளில் இருநாடுகள் இடையேயான உறவின் முக்கியத்துவம், உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பிராந்தியம் வாரியான வளர்ச்சி பற்றி விவாதிக்கப்படும். அதோடு இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனைகள் பற்றி ஆலோசிக்கப்படும். இந்நிலையில் தான் 2+2 மீட்டிங்கிற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் பிரதமர் மோடி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் இடையேயான சந்தித்து பேசினார். அப்போது ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உடன் இருந்தனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோ வெளியிட்டு கூறியுள்ளதாவது: உலகளவில் இந்தியா-அமெரிக்காவின் வியூக கூட்டணியை வலுப்படுத்துவது தான் 2+2 எனும் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். ஜனநாயகம், பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி உள்ளிட்டவற்றோடு பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம். இந்தியா-அமெரிக்கா கூட்டணி என்பது உண்மையிலேயே உலக நன்மைக்கான சக்தியாக இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.