சச்சின் சாதனை: இந்தியா ரன் குவிப்பு 401/3

குவாலியர், பிப்.24 (டிஎன்எஸ்) இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார்.




குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் சார்லஸ் கவண்ட்ரி மற்றும் பாகிஸ்தானின் அன்வர் ஆகியோர் எடுத்த 194 ரன்களே அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.



இன்றைய ஆட்டத்தில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.



இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி குவாலியரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் இரட்டை சதம் விளாசினார்.



இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார். 147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். இது சச்சினுக்கு 442ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார். இந்த சாதனையை சச்சின் உடைத்தெறிந்தார்.



தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், சச்சினும் இறங்கினர். ஷேவாக், இன்று விரைவிலேயே அவுட் ஆகி விட்டார். 11 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களுடன் அவர் நடையைக் கட்டினார்.



இருப்பினும் சச்சினும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். சச்சினைப் போலவே தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



சிறப்பாக ஆடிய தினேஷ், 85 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.



இந்தியா நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன் குவித்துள்ளது. முன்னதாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



147 பந்துகளில் அவர் 200 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 25 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.



சச்சின் 200 ரன்களுடனும் தோனி 68 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.



சச்சினின் இன்றைய ஆட்டம், புதிய உலக சாதனையையும் படைத்ததுடன், கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால்

ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி

ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்; அதே போல் கற்பிக்கலாம். 'யாவர்க்கும் இலவசக் கல்வி' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன.




ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டுத் தொடக்கத்தையும் முன்னிட்டு, இந்த இ-கல்வி முறை, சென்னையில் உள்ள இரண்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-கல்வி முறையைச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன், 2009 செப்.5 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத் தலைவர் நாகராஜன், அதன் பொது மேலாளர் முருகானந்தம், சென்னை ஆன்லைன் நிறுவனத் தலைவர் இல.ரவிச்சந்திரன், அதன் ஆசிரியர் அண்ணாகண்ணன், சேது பாஸ்கரா பள்ளியின் முதல்வர் செல்வகுமார், துணை முதல்வர் அமரேந்திரன், சேது பாஸ்கரா பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் சுதர்சன் சாந்தியப்பன்.... உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்கள்.



செப். 5 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில வழியில் 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குக் கணிதத்தில் நிகழ்தகவு குறித்துப் பாடம் நடத்தினார். அதே நாள் காலை 11 மணியளவில் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், மரபணுப் பொறியியல் குறித்துப் பாடம் நடத்தினார்.



இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் திரை முன் அமர்ந்து கவனித்தார்கள். மாணவர்கள், ஆசிரியருடன் எழுத்து மூலமும் குரல் வழியாகவும் உரையாடினார்கள். கேள்வி கேட்டுப் பதில் பெற்றார்கள். சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள், வெங்கடேஸ்வரா பள்ளியின் ஆசிரியர் பாடம் நடத்துகையில் திரையில் அவரை நேரடியாகப் பார்த்தே கற்றார்கள்.



பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம், நேரம், செலவு, அலைச்சல் மிச்சமாகும்.



இன்னொரு வசதி, ஒரு பள்ளியின் மாணவர்கள், வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம், உலகம் முழுக்கப் பயன்படுகிறது. வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாணவர்களுடன் இணைக்க முடியும். வீடுகளில் இருந்து மாணவர்கள் கற்கும் போது, அவர்களின் பெற்றோரும் இந்த வகுப்புகளைக் கவனிக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் கல்வியின் வீச்சினை அவர்களும் அறிய முடியும்.



ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்கள், பல உண்டு. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் என்றே பல உண்டு. இத்தகைய பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறை, அற்புத வரம் என்றே கொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இதனால் நிறைய பயன்கள் உண்டு.



வகுப்பறையில் மாணவர்கள் முன்பு நின்று வகுப்பு எடுக்கையில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் கணினி முன் இருந்து, இணைய வழியில் கல்வி கற்பிக்கையில் மேலும் பல சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் குரல் மூலமும் பேசலாம்; கரும்பலகையில் எழுதுவது போலவே, pen tablet என்ற கணிப் பலகையில் எழுதலாம்; ஒலி-ஒளிக் கோப்புகளைத் திரையிட்டுக் காட்டலாம்; பவர் பாய்ன்ட் முறையில் சில வகுப்புகளை நடத்தலாம்; அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளையும் திரையில் காட்டலாம்; பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் விளக்க இந்தக் காட்சி வழிக் கற்பித்தல் பெரிதும் உதவும்.



இ-வகுப்பு இல்லாத நேரத்திலும் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பதில்களைப் பெறலாம். நல்ல அகலக்கற்றை வசதி இருக்குமானால், மாணவர்களும் ஆசிரியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தே 'வீடியோ சாட்' மூலம் உரையாட முடியும். அத்தகைய வசதி, எல்லா இடங்களிலும் கிடைக்கும் காலமும் மிக அருகில்தான் உள்ளது.



ஆசிரியர் பயன்படுத்தும் கணினித் திரை, இணையம் வழியாக அனைத்து மாணவர்களின் கணினித் திரையில் தெரியும். அதேபோல், அவர் தன் கணினியில் செய்து காட்டும் அனைத்தும், மாணவர்களின் கணித் திரையிலும் தெரியும். இது, கிட்டத்தட்ட இணையவழி வகுப்பறை (Virtual Class Room) போன்றதே.



இப்படி எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்ட இந்த இ-கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களும் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டால் பெரிய கல்விப் புரட்சியே நிகழும் என்பது உறுதி. மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்குச் செல்பவர்கள், இல்லத்தரசிகள், வாழ்நாள் முழுதும் படிப்பவர்கள் எனப் பலரும் இந்தக் கல்வியைப் பெறலாம். ஒவ்வொரு வகையான மாணவர்க்கும் அவர்களுக்கு ஏற்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) மாணவர்கள், Java, C, Oracle, SAP, PHP, டாட் நெட் போன்ற பாடங்களைக் கற்கலாம்; கணக்கியல் மாணவர்கள் Tally, பரஸ்பர நிதி, வரி விதிப்பு, காப்பீடு போன்ற பாடங்களைக் கற்கலாம்.



மேலும் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வாஸ்து உள்பட பல பாடங்களையும் இங்கு கற்றுத் தருகிறார்கள். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரையாடக் கற்கலாம்; லினக்ஸ் இயங்கு தளத்தின் அடிப்படைகள், ·போட்டோஷாப், எக்ஸ்செல், வேர்ட், நேர மேலாண்மை, ஆளுமைத் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றையும் கற்கலாம்; இவை அல்லாமல் உங்களுக்கு ஏதும் புதிய பாடங்களைக் கற்க வேண்டும் என்றால் அது குறித்த உங்கள் ஆர்வத்தினையும் தெரிவிக்கலாம். அதற்கு உரிய ஆசிரியர்கள் கிடைத்ததும் அந்தப் பாடமும் கற்பிக்கப்படும். ஒரே மாணவர் எவ்வளவு வகுப்புகளில் வேண்டுமானாலும் சேர்ந்து பயன் பெறலாம்.



அதே போன்று ஏதேனும் ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள், தாங்கள் அறிந்தவற்றைக் கற்றுத் தர வேண்டும் என விரும்பினால், அவர்களும் ஆசிரியர்களாக இதில் பங்கு பெறலாம். புகைப்படக் கலை, சமையல் கலை, தோட்டக் கலை, விவசாயம்.... என உங்களுக்கு எந்தத் துறையைப் பற்றியாவது ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருக்குமானால் அவற்றையும் இந்தத் தளத்தின் மூலம் முழு உலகிற்கும் எடுத்துரைக்கலாம். இதில் கற்பவர்களுக்குக் கட்டணம் இல்லை; அது போலவே கற்பிப்பவர்களுக்கும் ஊதியம் இல்லை. ஆனால், ஒருவர் தன் முழு நேரத்தையும் இதற்குச் செலவிட வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில் வாரத்திற்குச் சில மணி நேரங்கள் செலவிட்டால் போதும். அவரது அறிவு, பலரின் உள்ளத்தில் ஒளிகூட்டும்.



இதற்கென்று தனிச் செலவு ஏதுமில்லை. மாணவர் நோக்கில், அவரிடம் ஒரு கணினியும் இணைய இணைப்பும், தலைப்பேசி (ஹெட்போன்) வசதியும் இருக்க வேண்டும். அகலக்கற்றை இணைய இணைப்பு (பிராட்பேண்ட்), அவசியத் தேவை. dialup இணைப்பு, இந்த இ-வகுப்புக்குப் போதாது. இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் போதும். அவர், இ-வகுப்புக்குத் தயார்.



அவர், www.openmentor.net என்கிற இணையதளத்திற்குச் சென்று தன் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொண்டு பதிய வேண்டும். அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு விதமான பாடங்களில், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும். அதில் எந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதில் சேர்ந்து கற்கலாம். அவர் தேர்ந்தெடுக்கும் பாடம் நடைபெறும் வகுப்பு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.



பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் கிட்டதட்ட இதே முறைதான். அங்கு கணினி, இணைய இணைப்புடன் அரங்கு, ஒலிபெருக்கி வசதி, LCD Projector, திரை ஆகியவை இருந்தால் போதும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், ஒரே வகுப்பில் இணைந்துகொள்ளலாம்.



இணையவழி வகுப்பு மட்டுமின்றி, இணையவழித் தேர்வுகள் (online examinations) நடத்தும் வசதியும் இந்தத் தளத்தில் உள்ளது. எல்லாப் பாடங்களிலும், வினாக்கள் தரப்படும், 30 வினாக்களை மாணவர்கள் 30 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். இது objective type questions என்று சொல்லப்படுகின்றது. எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது போன்ற மாதிரி வினாக்களினால் அவர்கள் தங்கள் திறமையையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும்.



இந்த இணையவழித் தேர்வு வசதியைச் செல்பேசி மூலமும் இலவசமாகப் பெறலாம். GPRS வசதியுள்ள செல்பேசி ஒன்றின் மூலம் இணையவழித் தேர்விற்கான மென்பொருளைத் தரவிறக்கினால் போதும். பிறகு தேவையான கேள்வித்தாள் தொகுப்பை Openmentor.net தளத்தின் மூலம் நீங்கள் அவ்வப்போது இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம்.



இதுதவிர, இதே இணையதளம் மூலமாக வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் பெறத் திட்டங்கள் வகுத்து வருகிறார்கள். கற்போர், தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்யலாம்; பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அந்த விவரங்களைக் கவனிப்பார்கள். அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை நேர்முகத்திற்கு அழைத்துப் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உண்டு. இந்த நேர்முகத்திற்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தும் விதமாக மாதிரி நேர்முகத் தேர்வுகளையும் இந்த இணைய தளம் வழங்கி வருகிறது.



முதலில் அடிப்படைக் கல்வி, துறை சார்ந்த படிப்புகள், மொழித் திறன், அது தொடர்பான ஆளுமைப் பயிற்சி, பின்னர் மாதிரி நேர்முகத் தேர்வு, பின்னர் வேலை வாய்ப்பு என அனைத்துச் சேவைகளையும் ஓபன் மென்டார்.காம் ஒருங்கிணைத்து அளிக்கிறது. இவை அனைத்தும் இலவசம் என்பது, நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை.



இந்த ஓபன் மென்டார்.காம் இணையதளத்தினை வடிவமைத்துள்ள சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனம், ISO 9001:2000 சான்றிதழ் பெற்றது; பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின் கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத் தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம் பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. இதன் தலைவர் நாகராஜனும் பொது மேலாளர் முருகானந்தமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.



சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் கை கோத்துள்ள சென்னை ஆன்லைன்.காம், 1997 முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் முதன்மையான மாநகர இணையதளமாக விளங்குகிறது. 'வாழ்வை எளிதாக்கு' என்பதே சென்னை ஆன்லைனின் இலக்கு. ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் உள்பட, பல்கலைக்கழகங்கள் பலவற்றின் தேர்வு முடிவுகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. கல்வியின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இதன் தலைவர் இல.ரவிச்சந்திரன் ஆழமாக நம்புகிறார்.



ஆசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள்.... உள்ளிட்ட ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். இந்த ஓபன் மென்டார் தளத்தினைப் பயன்படுத்த வாருங்கள். இதில் உங்கள் நண்பர்களையும் இணையுங்கள். கல்வி கற்க இனி எந்தத் தடையும் இல்லை என்ற செய்தியைப் பரப்புங்கள். பட்டணங்கள் முதல் பட்டி தொட்டிகள் வரை கல்விச் சுடர் ஒளிரட்டும்; அறிவு வெளிச்சம், அகிலம் எங்கும் பரவட்டும்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 'கிராமி' விருது


இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியரான ஏ.ஆர்.ரகுமானுக்கு மற்றோரு உலக அங்கிகாரம் கிடைத்துள்ளது.  உலக அளவில் இசைக்காக வழங்கப்படும் புகழ் பெற்ற 'கிராமி' விருது போட்டியில், இரண்டு பிரிவிகளில் ஏ.ஆர்.ரகுமான், 2 கிராமி விருதுகளை வென்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏன்ஜெல்ஸ் நகரில் 2010, ஜனவரி 31ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தபேலா மேதை ஜாகிர் உசேன், சரோத் மேதை அம்ஜத் அலி கான், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 'ஸ்லம் டாக் மிலினியர்' படம் சிறந்த இசைக்கான பிரிவு, சிறந்த பாடலுக்கான பிரிவும் என இரு பிரிவிகளில் போட்டியிட்டது.

சர்வதேச அளவிலான ஆங்கில திரைப்படங்களின் கடும் போட்டிகளுக்கிடையில் ஸ்லம் டாக் மிலினியர் படத்தில் சிறந்த இசையமைத்தற்கான விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். மேலும் சிறந்த சவுண்ட் டிராக் இசைக்கான விருது அதே படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ... பாடலுக்காக எ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச இசை விருதுகளில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகளை பெற்ற 4ஆவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான். 2 விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஏ.ஆர்.ரகுமானையே சாரும்.

விருதை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான் "கடவுள் இரண்டாவது முறையாக எனக்கு அருள் பாவித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இந்திய இசைக் கலைஞர்கள் ரவிசங்கர், ஜாகிர் உசேன், விஸ்வ மோகன் பட், விக்கு வினாயக் ஆகியோர் கிராமி  விருதுகள் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)
Feb 01, 2010

புலிகளின் தலைவர் மலேசியா ராஜன் கைது

கொழும்பு, ஜன.30 (டிஎன்எஸ்) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மூத்த தலைவராக திகழ்பவர் மலேசியா ராஜன். மலேசியா ராஜனை கடந்த ஜன.28 அன்று போலீசார் இலங்கை கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அவரை கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்ததாக அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். இவர் பத்மநாதன் போல வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி விடுதலைப்புலிகளுக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். மேலும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை கொழும்பு நகருக்கு அழைத்து வரும் பணியை செய்து வந்தார்.

முன்னதாக வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன், மலேசிய ராஜன் பற்றி எல்லா தகவல்களையும் சிங்கள போலீசாரிடம் தெரிவித்ததன் பேரில் மலேசியா ராஜனை கைது செய்ய சிங்கள பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் வலை விரித்தனர்.

இந்த நிலையில் மலேசியா ராஜனை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா அல்லது தாய்லாந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 42 வயதாகும் இவருக்கு கண்ணன், செல்லத்துரை, சுப்பிரமணியம், சிவக்குமார், சாந்தகுமார் என்று பல பெயர்கள் உண்டு. (டிஎன்எஸ்)

Jan 30, 2010

சென்னை, பிப்.3 (டிஎன்எஸ்) 'அசல்' படத்தில் நாயகன் அஜீத்குமார் புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு பாமக சார்பில் கூறப்பட்ட புகாருக்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தரப்பில் நடிகர் பிரபு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்புமணிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'அசல்' படத்தில் இடம் பெறும் புகை பிடிப்பது போன்ற காட்சி தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் எங்கள் பார்வைக்கு வந்தது. எங்கள் தந்தை சிவாஜி கணேசன் பெயரை தாங்கியுள்ள நிறுவனம் 50 வருட பாரம்பரியத்தை கொண்டது. எங்கள் தயாரிப்பான அசல் திரைப் படம் தணிக்கைக் குழுவினரால் உன்னிப்பாக பார்க்கப்பட்டு திரையிட தகுதியான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தணிக்கைக்கு போவதற்கு முன்பே அதன் டிரைலர் படத்திலும், திரைப்படத்திலும் புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்ற அறிவிப்பை படத்தின் துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.

அஜீத்குமார் புகைப்பிடிப்பதனால் வரும் தீங்கை இந்த படத்தின் துவக்கத்திலேயே செய்தியாக அறிவித்திருக்கிறார். தணிக்கைக் குழு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டது அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம். எங்கள் தந்தையின் வழியில் எப்போதுமே இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறோம். தமிழ் திரைப்படத் துறையின் நெருக்கடியை நன்கு உணர்ந்த தாங்கள் ஒரு இயக்கத்திற்கு பொறுப்பான தலைவராக இருப்பதால் எந்த திரைப்படத்திற்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர் சரண், நாயகன் அஜீத் சார்பில் இந்த பதிலை எழுதியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)

Feb 03, 2010

பிப்.21 'சென்னை மாரத்தான்'

சென்னை, பிப்.3 (டிஎன்எஸ்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 8ஆவது `சென்னை மாரத்தான்` ஓட்டப் பந்தயம் வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

ஆண்கள், பெண்கள், மாணவர்கள், நீண்ட தூரம், குறுகிய தூரம் என போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அரை மாரத்தான் (21.1 கி.மீ) சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா கோவில் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வர வேண்டும்.

இதுபோல், 42.2 கி.மீ தூரம் கொண்ட ஆண்களுக்கான முழு மாரத்தான், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் முன்பு தொடங்குகிறது. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவில் வரை சென்று, மீண்டும் போட்டி தொடங்கப்பட்ட இடத்திற்கு வந்தடைய வேண்டும். இவ்வாறு இரண்டு முறை செல்ல வேண்டும்.

முழு மாரத்தான், அரை மாரத்தான தவிர மினி மாரத்தான் ஓட்டமும் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது 10 கி.மீ தூர ஓட்டமாகும்.

பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் மினி மாரத்தான் பந்தயமும் மாணவர் மாணவிகள் என தனித்தனியே நடக்கிறது. இதன் ஓட்ட தூரம் 5 கி.மீ.

மாணவர்களுக்கான ஓட்டம் நேப்பியர் பாலத்தின் மாநகராட்சி பூங்காவிலும், மாணவிகளுக்கான ஓட்டம் அண்ணாசதுக்கம் எதிரில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தும் தொடங்கும். இவர்கள் காந்திசிலை வரை சென்று மீண்டும் போட்டி தொடங்கிய இடத்திற்கு வர வேண்டும்.

ஆண்களுக்குமான மினி மாரத்தான் மெரினா கடற்கரையின் அண்ணா நீச்சல் குளம் முன்பும், பெண்களுக்கான பந்தயம் சுவாமி சிவானந்தா சாலையிலும் தொடங்கும். இவர்கள் ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை சென்று மீண்டும் சிவானந்தா சாலைக்கு வருவார்கள்.

இதுபோல நிறுவனங்களின் சார்பில் பங்கேற்பவர்களுக்கும் தனித்தனியே மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சர்வதேச தரத்திற்கு இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் சென்னையில் உள்ள அனைத்து நவீன விளையாட்டு அரங்கங்களிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைமையகத்திலும் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.20 லட்சம். முதல் 25 இடங்களை பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் மற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றுகள் உண்டு.

இதுபற்றிய விரிவான விவரங்களுக்கு http://www.chennaimarathon.org/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

போட்டிக்கான சின்னத்தை (லோகோ) சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (பிப்.2) நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது சென்னை மராத்தான் போட்டிக்கான இணையத் தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். (டிஎன்எஸ்)

Feb 03, 2010